தமிழ்நாட்டின் கிறிஸ்தவ சபைகளின் அவலநிலை

கோயமுத்தூர் CSI டையோசிஸ் முன்னாள்
பிஷப்.மாணிக்கம் துரை அவர்கள் கைது

கோயமுத்தூர் பிஷப் Rt.Rev.மாணிக்கம் துரை அவர்கள்மீது ஏராளமான வழக்குகள், பல நீதிமன்றங்களில் நடந்துக்கொண்டிருக்கிறது.

  அதில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள நடுவட்டம் என்ற இடத்திலுள்ள குருவானவர் Rev.கவிராஜ் என்பவர் தன்னை பிஷப்.துரை அவர்கள் கொலைமிரட்டல் விடுத்தாக புகார் தெரிவித்திருந்தார்.

கோவை சி.எஸ்.ஐ. முன்னாள் பிஷப் மாணிக்கம் துரையை அவரது வீட்டிலிருந்து
போலீசார் கைது செய்து அழைத்து வந்த போது எடுத்த படம்

சம்பவத்தின் காரணம்: கிறிஸ்டியன் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் சபை மக்கள் பிஷப் Rt.Rev.மாணிக்கம் துரை அவர்கள் டையோசிஸ் அறக்கட்டளை பணத்தில் மோசடி செய்ததாக புகார் அளித்து, பிஷப் அவர்களை கண்டித்து கூடலூரில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் நடுவட்டம் CSI சபைகுருவானவர் Rev.கவிராஜ் அவர்களும் பங்கேற்றார். உண்ணாவிரத்துக்கு மறுநாள் பிஷப்.துரை அவர்கள் Rev.கவிராஜ் அவர்களை அழைத்து கண்டித்தார். அப்போது என்ன சம்பாஷனை நடந்தது என்பது தெரியாது அதன்பின் Rev.கவிராஜ் அவர்கள் பிஷப்.துரை தன்னை மிரட்டுகிறார் என்று போலீஸில் புகார் கொடுத்தார். அதைக்குறித்த வழக்கு கூடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பிஷப்.துரை அவர்களுக்கு மூன்றுமுறை கோர்ட் சம்மன் அனுப்பியும் பிஷப் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து பிஷப்.துரையை கைது செய்ய பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

  கூடலூர் போலீஸ் அதிகாரி SI பசவராஜ் தலைமையில் போலீஸார் சனிக்கிழமை கோயமுத்தூர் பிஷப்.துரை அவர்களின் வீட்டுக்குசென்று கைது செய்து கூடலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு நீதிபதி அவர்கள் விடுமுறையில் சென்றுவிட்டார் என்று அறிந்து பிஷப் அவர்களை ஊட்டியில் உள்ள நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். ஆனால் அங்கும் நீதிமன்றம் கோடைகால விடுமுறையால் மூடப்பட்டிருந்தது. ஆகவே ஒரு வழியாக விடுமுறையிலிருந்த நீதிபதி அவர்களின் வீட்டுக்கே பிஷப்பை அழைத்து சென்றனர். பிஷப் அவர்கள் நீதிபதியிடம் தன்னை ஜெயிலுக்கு அனுப்பவேண்டாம் எனக்கு நெஞ்சுவலி என்று அறிவித்தார். அதனால் ஊட்டியில் உள்ள அரசு மருத்துமனையில் போலீஸ் காவலுடன் பிஷப் அவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

  பிஷப்.துரை அவர்கள்மீது ஏற்கனவே CSI டையோசிஸ் பணம் மூன்று கோடிகளை கையாடல் செய்ததாகவும் பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தியதாகவும் உள்ள குற்றச்சாட்டை CBCID அதிகாரிகள் பிஷப் அவர்களை விசாரிக்க அவரை கைது செய்ய இருந்தனர். ஆனால் பிஷப் அவர்கள் தன்னை கைது செய்யக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் பெற்றார். அதன்பின் தினசரி காலை CBCID ஆபீஸில் கையெழுத்துபோட வந்துபோய்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பிஷப்.Rt.Rev.மாணிக்கம் துரை அவர்களுக்கு பதில் கோயமுத்தூர் டையோசிஸ் பணிகளை நிறைவேற்ற திருச்சி-தஞ்சை CSI டையோசிஸ் பிஷப்.Rt.Rev.பால் வசந்தகுமார் அவர்களை தற்காலிக பிஷப்பாக செயல்பட CSI சினாட் நியமித்தது. இந்த நிலையில் பிஷப் அவர்களோடு பண ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களான அமிர்தம், மனேசன் ஆகிய இருவரையும் CBCID போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்து விசாரித்து கொண்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு போலீஸ் அப்ரூவராக மாறிக்கொண்டிருக்கின்றனர் என்று அறியப்படுகிறது. அதில் CSI குருவானவர்களும் உண்டு. பிஷப் அவர்கள் எங்கள் மேல் அதிகாரியாவர், ஆகவே அவர் கூறியபடி நாங்கள் கீழ்படிந்தோம் என்று கூறி பிஷப்புக்கு எதிராக சாட்சி கூற போலீஸ் அப்ரூவராக அவர்கள் மாறிவிட்டனர். இது பிஷப்.Rt.Rev.துரை அவர்களுக்கு பெரும் பின்னடைவாகும்.

  இப்போது கோயமுத்தூர் டையோசிஸ்க்கு புது பிஷப் தெரிந்தெடுக்கப்படவேண்டும் என்று பலர் CSI சினாடுக்கு எழுதி அறிவித்துள்ளனர் என்று கூறுகிறார்கள். புதிய பிஷப் தெரிந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுவதாக கேள்விப்படுகிறோம். பிஷப் மீதுள்ள வழக்கு நீண்டுபோகுமானால் CSI சினாட் கமிட்டியே ஒரு பிஷப்பை தாங்களே தெரிந்தெடுத்து கோயமுத்தூர் டையோசிஸ்க்காக நியமிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜாமக்காரன்: பிஷப் அவர்களைக்குறித்து நாம் இப்படி அறிவிப்பது வெறுப்பினாலோ, பகையினாலோ அல்ல. பிஷப் அவர்கள் கைது செய்யப்பட்டது நமக்கு சந்தோஷம் கொடுக்கும் செய்தியல்ல. CSI சபையின் தலைவன், நாடறியும் அவமானத்திற்குள்ளானதுதான் கர்த்தருக்கும், நமக்கும் மனவேதனையை கொடுக்கிறது.

  பிஷப் அவர்களுக்கு தன்னை தற்பரிசோதனை செய்யவும், தன்னை சரிப்படுத்திக்கொள்ளவும், குறிப்பாக மனம் திரும்பவும் இது அவருக்கு தேவன் அனுமதித்த நல்ல சந்தர்ப்பம் ஆகும். இப்போது கூறும் இந்த ஆலோசனையை அவர் கவுரவப் பிரச்சனையாக கருதி அலட்சியப்படுத்தினால் பிஷப் அவர்களின் இருதயம் மீண்டும் முன்பைவிட கடினமாகிவிடும். வழக்கு இவருக்கு சாதகமாகி விடுதலை செய்யப்பட்டால் அவர் ஆத்துமா கர்த்தரைவிட்டு மிகதூரம் விலகிவிடும். அதன்பின் மீண்டும் பிஷப் தன் பதவியில் அமர்ந்தால் முன்பைவிட அவர் செயல்பாடுகள் மோசமாகி மீண்டும் பெரிய குற்றங்கள் புரியும் கடினமான நிலைக்கு தள்ளப்படுவார். பழிவாங்கும் சிந்தை மேலோங்கும் தவறுக்குமேல் தவறு செய்ய உந்தப்படுவார். அவர் ஆவிக்குரிய நிலை மிக மோசமாகிவிடும். துணிகர பாவம் செய்ய தெய்வபயம் அவர் இருதயத்திலிருந்து தானே நீங்கிப்போகும்.

  ஆகவே பிஷப் அவர்கள் இப்போது செய்யவேண்டியது. கடைசிநேரத்தில் யார் எல்லாம் அப்ரூவராக மாறினார்கள் என்று அறிந்து, அவர்களின் செயலில் உண்மை உள்ளதா என்பதை பிஷப் அவர்கள் அறியவேண்டும். உண்மையான குற்றச்சாட்டுகளை கூச்சப்படாமல் சம்மதித்து பிஷப் அவர்கள் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவேண்டும். பணம் திருப்பி செலுத்த வேண்டியது உண்மைதான் என்றால் அதை திருப்பி செலுத்த தயங்கக்கூடாது. பிஷப் தன் பதவியை ஏற்றெடுக்கும்போது Chitfund கடனை அடைக்க முடியாத நிலையில் இருந்ததை நினைவு கூர்ந்து திருமண்டல பணப்பிரச்சனையை சரிப்படுத்திவிட்டால் அப்போதைய மனநிம்மதியையும், சமாதானத்தையும் பிஷப் அவர்கள் திரும்பப்பெறுவார். பாவத்தை மறைக்கிறவனுக்குதான் வாழ்வு இல்லை. ஆனால் அதை அறிக்கைசெய்து விட்டுவிட்டவனுக்கு தேவனுடைய கிருபைதானே அவன்மேல் வரும், அவன் குடும்பத்திலும் வந்துவிடும். நீதி 28:13.

  தாவீது தன் தவறை உணர்ந்தபின் கர்த்தரின் கிருபை அவன்மேல் இறங்கி அவன் நிலையை கர்த்தர் எத்தனையாய் உயர்த்தினார். அவன் இழந்ததையெல்லாம் திரும்ப பெற்றுக்கொண்டான் என்று வேதம் கூறுகிறது. கர்த்தர் பிஷப்.துரை அவர்கள் பட்ட அவமானத்துக்கு ஈடாக வெற்றியையும், உயர்வையும், கௌரவத்தையும் தருவார். எந்த இடத்தில் அவமானப்படுத்தப்பட்டாரோ அதே இடத்தில் கனப்படுத்தப்படுவார். மேலும் பிஷப். துரை அவர்களை சுற்றியுள்ள துதிபாடிகளையெல்லாம் இனம்கண்டு அவர்களை அகற்றி சரியான ஆலோசனை கொடுக்கும், ஜெபிக்கும் உண்மையான நண்பர்களை கண்டுபிடித்து அவர்களை தன் பக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

  நானும் ஒரு ஊழியக்காரன் சேர்ந்தவன் என்ற நிலையில், நானும் பிஷப்.துரை அவர்களின் கீழ் இயங்கும் கோயமுத்தூர் திருமண்டலத்தில் நான் பிறந்து வளர்ந்து திருமண்டலத்துக்காக பாரப்படுபவன், உண்மையாக ஜெபிப்பவன் என்ற நிலையில் இந்த ஆலோசனைகளை உரிமையோடு எழுதுகிறேன். பிஷப்.துரை அவர்களுக்கு என்னை ஆரம்ப முதலே பிடிக்காது என்பதை அறிவேன். ஆனாலும் என் சொந்த திருச்சபையின் தலைமை பொறுப்பிலுள்ளவர் என்ற நிலையில் அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவருக்காக பாரத்துடன் ஜெபிப்பவன், ஜெபித்துக்கொண்டிருப்பவன் என்பதை என் கர்த்தருக்கு முன்பாக பாரத்துடன் அறிக்கையிட்டு இதை எழுதுகிறேன்.

  கோவை திருமண்டல ஜாமக்காரன் வாசகர்களும் பிஷப்.துரை அவர்களுக்காக ஜெபியுங்கள்.


மெட்ராஸ் CSI டையோசிஸ்ஸிலும் பண ஊழல்
CSI பிஷப்.Rt.Rev.தேவசகாயம் அவர்களுக்கு 5 லட்சம் அபராதம்

CSI மிஷன் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ கருவிகள் இறக்குமதி செய்ததில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு சுங்கதுறை பிஷப்.தேவசகாயம் அவர்களை 5 லட்சம் ரூபாய் அபாரதமாக செலுத்தும்படி அறிவித்துள்ளது.

சென்னை பிஷப்.தேவசகாயம் அவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதுதான் சென்னையில் உள்ள CSI கல்யாணி ஆஸ்பத்திரியும், ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி என்ற ஊரில் உள்ள CSI ஆஸ்பத்திரியுமாகும். இன்னும் சில இடத்தில் உள்ள CSI ஆஸ்பத்திரிகள் மெட்ராஸ் டையோசிஸ்க்கு உட்பட்டதாகும்.

ஏழைகளின் நலனுக்காக என்று வெளிநாட்டிலிருந்து பல தொண்டு நிறுவனங்கள் பல்வேறு ஆஸ்பத்திரி உபகரணங்களை இப்படிப்பட்ட மிஷன் ஆஸ்பத்திரிக்கு அனுப்புவது வழக்கம். அதன்படி World Medical Relief (WMR) என்ற அமெரிக்க நிறுவனம் நகரி என்ற ஊரில் உள்ள CSI ஆஸ்பத்திரிக்கு பல மருத்துவ கருவிகளை சில ஆண்டுகளுக்குமுன் கப்பலில் அனுப்பி வைத்தனர். இவற்றில் விலை உயர்ந்த பொருள்களான X-Ray, டயாலிசிஸ், ECG போன்ற கருவிகள், ஆப்ரேஷன் சம்பந்தமான பொருள்கள், சக்கர நாற்காலிகள், கட்டில்கள் மற்றும் முக்கிய உயிர் காக்கும் மருந்துகள் உட்பட பல பொருள்கள் அனுப்பியதாக அறியப்படுகிறது.

இதை பெற்றுக்கொள்ள இந்த பொருள்களின் மதிப்பை சுங்கதுறையிடம் அறிவிக்கவேண்டும். அப்படி அறிவித்ததில் பொருளின் மதிப்பை குறைத்துகாட்டி குறைந்த வரி மட்டும் செலுத்தும் வகையில் மதிப்பீட்டை குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  ஏற்கனவே நகரி CSI ஆஸ்பத்திரிக்கு வந்த பல பொருள்கள், உபகரணங்களை வெளி ஆஸ்பத்திரிக்கு கள்ளத்தனமாக விற்றதற்கான சில சாட்சிகளோடு சென்னை மேஜர்.விக்டர் அவர்கள் Laity Association of CSI என்ற கிறிஸ்தவ நலனுக்காக போராடும் சங்கத்தின் பொதுசெயலர் என்ற முறையில் மெட்ராஸ் டையோசிஸ்ஸிடமும், CSI சினாட் மாடரேட்டரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் CSI மிஷன் ஆஸ்பத்திரிக்கு உபகரணங்களை வாங்கும் விஷயத்தில் ஊழல் நடந்திருப்பதை வருவாய் புலனாய்வு துறையினர் அறிந்து விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சென்னை சுங்கதுறை கமிஷனர்.ராஜன் அவர்கள் நகரியில் உள்ள CSI மருத்துமனையின் நிர்வாகம் 1 கோடியே 34 லட்சத்தை அபராதமாக செலுத்தவேண்டும் என்றும் நகரி மிஷன் ஆஸ்பத்திரி பொறுப்பாளர் Dr.ராஜகுமாரி சுந்தர் அவர்களும், பிஷப்.தேவசகாயம் ஆகிய இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் தனிப்பட்ட முறையில் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பளித்தது.

  பிஷப்.தேவசகாயம் அவர்கள் பேரில் சுனாமி நிதி ஊழல் புகாரும் உண்டு என்று கேள்விப்படும் போது CSI சபைகளில் பண விஷயத்தில் இத்தனை பெரிய ஊழல் தொடர்கதையாக அமைந்துவிட்டது மிகுந்த வேதனையளிக்கிறது. சமீபத்தில்தான் CSI சினாட் முன்னாள் செயலாளர் Dr.திருமதி.பாலின் அவர்களையும், அவர் மகளையும் இன்னும் சிலரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். TVயில் பத்திரிக்கைகளில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரபல பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டபோது தென்னிந்திய திருச்சபை (CSI) விசுவாசிகளைப்பற்றி, சபை தலைவர்களைப்பற்றி உலகம் என்ன நினைக்கும்? CSI அங்கத்தினர்கள் கண்ணீர்விட்டு ஜெபிப்போமா!


போலீஸ் விசாரணையில்
கர்நாடகா CSI பிஷப்பும், CSI மாடரேட்டரின் ஊழலும்

சமீபத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட CSI மாடரேட்டரும், கர்நாடகா(பெங்களுர்) பிஷப் Most Rev.S.வசந்தகுமார் அவர்களும் பண ஊழல் காரணமாக புகார் எழுந்துள்ளதால் பெங்களுர் நீதிமன்றம் பிஷப் அவர்களை விசாரிக்க போலீஸ்சுக்கு உத்தரவிட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் குற்றசாட்டில் உண்மையிருக்கிறது என்பதை அறிந்து கீழ்காணும் தண்டனை சட்டத்தில் பிஷப்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1). IPC 406 (Criminal Breach of Trust),
2). IPC 417, 420 Cheating
3). IPC 468 (Forgery for purpose of Cheating),
4). IPC 477 (Falsification of Accounts)

  பெங்களுரில் மிகப் பிரசித்தி பெற்ற Hr. Secondary School - Bishop Cotton School ஆகும். இதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியான பிரம்மாண்ட கட்டிடத்தில் அகன்ற நிலத்தில் இந்த பள்ளிக்கூடம் அமைந்திருக்கிறது. இதில் பிள்ளைகளுக்கு படிக்க இடம் கிடைப்பது கடினம். இத்தனை சிறப்பு வாய்ந்த கல்வி நிலையத்துக்கு தனி Bபோர்டும், Trustம் உண்டு. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஒருவர் இந்த கல்வி நிலையங்களை மிகச் சிறப்பாக நிர்வகித்து கர்நாடகா மாநிலத்திலேயே சிறந்த பள்ளியாக பெருமை கொள்ளும் வகையில் பள்ளிகளை உயர்த்தினார்.

  2002ம் ஆண்டு முதலே பிஷப்பும், இப்போதைய CSI மாடரேட்டருமான Most Rev.வசந்தகுமார் அவர்கள் இந்த பள்ளிக்கூட விஷயங்களில் ஆளுமை செய்ய முயன்று பிரச்சனைகள் முற்றி பள்ளிக்கூட நிர்வாகியான முன்ளாள் ராணுவ அதிகாரி அவர்கள் தன் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டார். அதன் காரணமாக பிஷப் அவர்கள் பொய்யான தஸ்தாவேஜிக்களை தயார் செய்தும், Boys - Girls High Schoolன் பணத்தை கொள்ளையடித்து பிஷப்பும், அவர் மனைவியும் இணைந்த ஒரு கணக்கை Residency Road Branch, Bangalore-ல் அமைந்துள்ள VIJAYA BANKல் அக்கவுண்ட் ஆரம்பித்து (A/C. No.6988) அதில் லட்சக்கணக்கான பணத்தை சேமித்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. CSIயின் பணம் பலவிதத்தில் 2002ம் ஆண்டு முதலே கொள்ளையடித்திருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Bishop அக்கவுண்ட் நெம்பரான 118401010017030லும், பள்ளிக்கூடத்தின் பல லட்ச ரூபாய்களை இட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  கர்நாடாகா CSI டையோசிஸ்க்கான (KCD) பேங்க் அக்கவுண்ட் நெம்பர்.5613303164 இது பெங்களுரில் State Bank of India, Saurashtra Mission Road Branch-ல் உள்ளது. இந்த கணக்கில் சேரவேண்டிய CSIயின் பணம் பிஷப்பின் சொந்த கணக்கில் சேர்ந்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளதாக அறியப்படுகிறது.

  பல லட்சங்கள் பிஷப்பின் மகளின் பெயரில் உள்ள Credit Card-ல் சேர்த்த அதன் பில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  பெங்களுர் டையோசிஸ்ஸின் அனைத்து CSI பள்ளிகளின் தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியைகளுக்கும் பள்ளியிலிருந்தும் பல லட்சங்களை தன் சொந்த பெயரில் உள்ள அக்கவுண்ட்க்கு மாற்றி ஏற்பாடு செய்யும்படி எழுதிய கடிதங்கள் போன்ற பல ஆதாரங்கள் போலீஸ் கையில் கிடைத்துள்ளன என்று கூறப்படுகிறது.

ஜாமக்காரன்: CSI சபைகளுக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் அவமானத்தை அறிந்தீர்களா? பல வருடங்களாக CSI மாடரேட்டரிலிருந்து, திருமண்டல பிஷப்மார்களில் பெரும்பான்மையோர் பெயரில் இப்படிப்பட்ட பணக்கொள்ளை, திருமண்டல சொத்துகொள்ளை, சபை காணிக்கை கொள்ளை, பள்ளிக்கூட பிள்ளைகளின் பணத்திலும் கொள்ளை இப்படி இது நீண்டு கொண்டேபோனால் CSIயின் நிலை என்ன ஆகும்? இவர்கள் எல்லாம் பதவி ஏற்றப்போது CSI டையோசிஸ்கள்மேல் இருந்த கடந்தகால களங்கம் இந்த புதிய தலைவர்களால் நீக்கப்படாதா என்ற எதிர்ப்பார்ப்பில் அவர்களை வாழ்த்தினோம், வரவேற்றோம். இவர்களுக்காக ஜெபித்தோம். ஆனால் இப்போது தலைகுனிகிறோம். CSI விஷயத்தில் இன்னும் எத்தனை காலத்துக்கு தேவன் மௌனமாக இருப்பார் என்று தெரியவில்லை!


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM