மறக்க முடியாத ஊழிய நினைவுகள்

நான் மனந்திரும்பியது (இரட்சிக்கப்பட்டது), மனந்திரும்பிய கிறிஸ்தவனாக மாறியது 1964ம் ஆண்டு அன்றைய நாட்களில் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு (FMPB)யின் மாநில மாநாடு வருடந்தோறும் டேனிஷ்பேட்டை பெத்தேலில் இப்போது நடைபெறுவதைப்போல் நடைபெறும். அன்றைய நாட்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அந்த மிஷனரி மாநாட்டில் கலந்துக்கொள்ள தென் மாவட்டங்களிலிருந்து வந்துசேருவார்கள்.

  ஒவ்வொருநாள் கூட்டத்தின் முடிவு (க்ளைமாக்ஸ்) சந்தியாவேளை கூட்டமாகும். அது மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை நடைபெறும். சகோ.P.சாமுவேல் அவர்கள் பொறுப்பெடுத்து நடத்தும் மிகமுக்கிய கூட்டமாகும். அந்த கூட்டத்தில்தான் பெரும்பான்மையானவர்கள் தங்களை கர்த்தருக்கென்றும், ஊழியத்துக்கென்றும் அர்ப்பணிப்பார்கள். அதில் கலந்துக்கொண்டவர்கள் மனந்திரும்புதலின் அனுபவத்தை பெறாமல் கூட்டத்தைவிட்டு வெளியேறமுடியாது. சகோ.P.சாமுவேல் அவர்களின் வித்தியாசமான பாடி (Body) லேங்வேஜுடன் அவர் பிரசங்கிக்கும் பாணி தனி அலாதியானது. கைத்தட்டல் இருக்காது, ஆரவாரம் இருக்காது, ஆனால் ஆவியானவரின் அசைவாட்டத்தை அந்த கூட்டத்தில் மிக நன்றாக உணரலாம்.

சிலசமயம் இந்த கூட்ட அற்புதங்களை கேள்விப்பட்ட பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்தவர்கள் கூட்ட விவரமறிய, உளவறிய அந்த சபையினர் சிலர் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து டேனிஷ்பேட்டைக்கு வருவார்கள். பகல் கூட்டத்தில் அவர்களை இனம் காணமுடியாது. ஆனால் மாலை அந்த சந்தியா கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்போது செய்தியும், ஜெபமும் ஆவியானவரின் அசைவாட்டத்தையும் உணர்ந்தவர்கள் தங்களையும் அறியாமல் அல்லேலுயா என்று பெருத்த சப்தமிட்டு க்ரபலா... சுக்கிரபலா... என்று அந்நியபாஷை என்ற பெயரில் சப்தமிடுவார்கள். உடனே P.சாமுவேல் அவர்கள் சத்தம்போடாதே! உன் உளறலைகேட்க ஆண்டவர் இங்கு வரவில்லை. தேவனோடு மனம்விட்டு பேசும் நேரம் இது! என்று உச்ச சப்தத்துடன் கூறிவிடுவார். உடனே பாஷை பேசியவர்கள் அடங்கிப் போவார்கள். பின் எங்கும் அழுகை சப்தம் கேட்கும். சிலர் பாரத தேசத்துக்காக அழுது ஜெபிப்பார்கள், சிலர் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மனம் திரும்ப அழுவார்கள். இந்த சப்தம்தான் அந்த மைதானத்தில் அதிகமாக கேட்கும், அந்த இடம் முழுவதும் ஜெபிக்கும் இடமாக மாறிவிடும். அந்த ஜெபத்தைக் கேட்க தேவனும் அங்கு பிரசன்னமாயிருக்க, அந்த இடம் முழுவதும் பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை நன்கு உணரலாம்.

  இப்படி அந்த சந்தியா நேரத்தில்தான் பெரும்பாலான மிஷனரிகள், பிரசங்கிமார்கள், பெரிய ஊழியர்கள் உருவானார்கள். FMPB மாநில முகாமுக்கு வரும் விசுவாசிகள் தங்கள் ஊரில் மனந்திரும்பாத கிறிஸ்தவர்கள், கல்லூரியில் மனம் திரும்பாதவர்களை டேனிஷ்பேட்டை பெத்தேல் மாநில முகாமுக்கு அழைத்து கொண்டுவருவார்கள். அவர்களை சந்தியா கூட்டத்தில் கலந்துக்கொள்ள வைக்கவேண்டியே ஜெபத்தோடு அவர்களை தங்களுடன் கூட அழைத்து வருவார்கள். முதல்நாளின் சந்தியா கூட்டத்திலேயே கர்த்தரால் தொடப்பட்டு அவர்கள் புது சிருஷ்டிகளாக மாற்றப்பட்டு மறுநாள் மிஷனரி செய்திகளை கேட்ககூடிய அளவு அவர்கள் தகுதி உள்ளவர்களாக்கப்படுவார்கள்.

ஜாமக்காரன்:  இதை நான் எழுதும்போது பலருடைய எண்ணங்களை தொகுத்து இங்கு சமர்ப்பிக்கிறேன். பல பெரும் ஊழியர்களை உருவாக்கியவர் சகோ.P.சாமுவேல் அவர்கள் ஆகும். அதில் நானும் ஒருவன். பெத்தேல் வளாகத்தில் சந்தியா மைதானத்தில் சகோ.P.சாமுவேல் அவர்களின் பிரசங்கம் மூலம் ஆவியானவர் நடப்பித்த தொடுதலால் மனந்திரும்பிய மக்கள் ஏராளம், ஏராளம்.

ஆகவே பெத்தேலிலுள்ள சந்தியா மைதானத்தை யாராலும் மறக்கமுடியாது. சந்தியா மைதானத்தில் பிரசங்க பீடம் (Pulpit) இல்லாமல், மைக் இல்லாமல் தன் சிம்மகுரலில் பிரசங்கமும், ஜெபமும் நடத்திய சகோ.P.சாமுவேல் அவர்களின் நினைவாக ஒரு (Pulpit) பிரசங்க பீடம் கல்லினால் செய்து ஞாபக சின்னமாக வைத்தால் நல்லது என்று பலர் கேட்டுக்கொண்டார்கள். ஒருநாளும் அது விக்கிரகமாக மாறாது, அது வெறும் நினைவு சின்னம் மட்டுமே. அவர் உருவசிலை வைக்கவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை - அந்த பெத்தேலுக்காக உழைத்தவர், உருவாக்கியவர் என்பதையும் அவர் யாராலும் மறக்கமுடியாதவர் என்ற நிலையில் குறைந்தபட்சம் ஒரு பிரசங்க பீடமாவது கல்லால் செதுக்கி வைக்கலாம் அல்லது கடப்பை கல்லில் செய்து வைக்கலாம். இது வெறும் ஆலோசனையும், வேண்டுகோளுமாகும்.

  கடைசி நாட்களில் அவர்மேல் எழுந்த குற்றசாட்டுகளை மறந்து அவர்மூலமாக கர்த்தர் நடப்பித்த அற்புத செயல்களுக்காக FMPB என்ற மிஷனரி ஸ்தாபனத்தையும், ஏராளமான மிஷனரிகளையும் உருவாக்கியவர் என்பதற்காக நாம் இதை செய்வோம் என்று என் சார்பிலும் வேண்டுகோளாக இதை சமர்ப்பிக்கிறேன்.

  சில வருடங்கள் சந்தியாவேளையில் சகோ.எமில் ஜெபசிங் அவர்களை சகோ.P.சாமுவேல் அவர்கள் பேசவைப்பார்கள். அநேக வருடங்கள் கழித்துதான் ஒரே ஒருமுறை சகோ.P.சாமுவேல் அவர்கள் என்னையும் பேசவைத்தார். அந்த ஆரம்பகால இன்ப நாட்களை நினைக்க கடந்த மாதம் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

  கடந்த மாதம் சில செய்திகளை சேகரிக்க என் பழைய ஃபைல்களை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது பெரியமலை முதல் மிஷனரியாக என்னை நியமித்து FMPBயின் அன்றைய பொதுசெயலர் சகோ.எமில் ஜெபசிங் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தை கண்டேன். FMPBயின் அதிகாரபூர்வமான மிஷனரி நியமன கடிதம் அது, அன்றைய பொதுசெயலராக இருந்த சகோ.எமில் ஜெபசிங் அவர்கள் தன் கைப்பட எழுதிய கடிதமாகும்.

அந்த பழைய கடிதத்தை நான் பார்த்தபோது அந்த முதல் மிஷனரி பயணத்தையும், அந்தக்கால கட்டங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம் என் கண்முன் சினிமா படம்போல் கடந்து வந்தது.

சில சமயம் ஸ்தாபனங்கள்கூட பழைய நிகழ்வுகளை, ஆரம்பகால முன்னோடிகளை மறக்கலாம் அல்லது சரித்திரத்திலிருந்தும் அவர்களை நீக்கிவிடலாம். ஆனால் எந்த ஒரு மிஷனரி முன்னோடியையும் நம் தேவன் ஒருபோதும் மறப்பதில்லை. நாங்கள் முதல் மிஷனரிகளாக அந்த மலைக்கு செல்லும்முன் மூங்கில்களை சுமந்து விற்று அந்த வருமானத்தை வைத்து சாப்பிட்டு அந்த பகுதியில் சுவிசேஷ ஊழியம் செய்த நபர் ஒருவர் உண்டு. ஆனால் அவர் FMPB ஸ்தாபனத்துடன் ஒட்டவில்லை. கர்த்தர் அவரையும் நிச்சயம் மறந்திருக்கமாட்டார்.

  என் வாசகர்களுக்கு என் எல்லா நல்ல நினைவுகளிலும் எப்போதும் பங்குண்டு. அதனால்தான் என் முதல் மிஷனரி பணியில் நான் இணைந்த நாளையும், ஊழியம் செய்த அந்த குறுகிய நாட்களையும் இந்த ஜுன் மாதம் 9ம்தேதி நினைத்து தேவனைத் துதித்தேன்!

  சகோ.எமில் ஜெபசிங் அவர்கள் அன்றைய நாட்களில் சாயர்புரம் போப்ஸ் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டே FMPB மிஷனரி பணியிலும், பொறுப்பேற்று அதற்கு மெருகூற்றி FMPB ஸ்தாபனத்தை அழகாக செதுக்கிய மிக முக்கிய சிற்பிகளுள் ஒருவராய் சரித்திரம் படைத்தார். அவருடைய கையால் எனக்கு எழுதிய கடிதத்தைத்தான் நீங்கள் அடுத்த பக்கத்தில் காண்கிறீர்கள்.


இது அந்த கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு:

அன்புள்ள சகோதருக்கு,

தயவுசெய்து ஜுன் மாதம் 8ம் தேதி மாலை பெத்தேலுக்கு வரவும். ஜுன் 9ம் தேதி காலை பெரியமலைக்கு புறப்படும் குழுவினரோடு இணைந்துக் கொள்ளலாம். நீங்கள் ஒரு 15 நாட்கள் அந்த மலையில் (9 முதல் 23ம் தேதி வரை) தங்கிவிட்டு ஜுன் 24ம் தேதி பெரியமலையிலிருந்து நீங்கள் திரும்பி வந்து எல்லா ஒழுங்குகளையும் செய்துவிட்டு, மறுபடியும் புறப்பட்டு ஜூலை முதல் தேதி பெரியமலை ஊழியத்தில் இணைந்துக் கொள்ளுங்கள். பெரியமலையில் நாம் கூடும் நாட்கள் நல்லவிதமாக அமையும். நீங்கள் ஜுன் மாதம் முதலே மிஷனரியாக நியமிக்கப்படுகிறீர்கள். உண்மையில் கர்த்தர் உங்கள் மூலமாக அற்புதங்களை செய்ய விரும்புகிறார் என்று சகோ.எமில் ஜெபசிங் அவர்கள் கடிதம் எழுத தன் கையெழுத்துடன் அதை எனக்கு அனுப்பிவைத்தார்.

9 ஜுன் 1967 அன்று பெரியமலை அடிவாரத்தில் அதிகாலை நேரம் நாங்கள் 5 பேர் Dr.சாம் கமலேசன், சகோ.P.சாமுவேல், சகோ.எமில் ஜெபசிங், சகோ.ஹாரிஸ் ஹில்டன், Dr.புஷ்பராஜ் ஆகிய நானும், அப்படியே எங்களுக்கு உதவியாளராக சகோ.ஏசா அவர்களும் கூடினோம். நாங்கள் யாவரும் கூடி பாட்டுப் பாடினோம். முதல் மிஷனரிகளான நாங்கள் முழங்கால்படியிட Dr.சாம் கமலேசன், சகோ.P.சாமுவேல், சகோ.எமில் ஜெபசிங் ஆகியவர்கள் எங்கள் தலைமேல் கைகளை வைத்து முதல் மிஷனரிகளாக எங்களைப் பிரதிஷ்டை செய்து ஜெபித்தார்கள். அந்த அதிகாலைநேரம் எங்களை பிரதிஷ்டை செய்து அவர்கள் கைகளை வைத்து ஜெபித்தபோது எங்கள் உள்ளம் பரவசமடைந்தது. ஆசீர்வாதம்கூறி முடித்தவுடன் வரிசையாக ஒருவர்பின் ஒருவராக நாங்கள் மலையேறினோம். கழுதைகள் எங்கள் சாமான்களை, மருந்துகளை, உணவு யாவற்றையும் சுமந்து செல்ல நாங்கள் யாவரும் பெரியமலை உச்சியை அடைய மதியம் சுமார் 11 மணியானது.

  பெரியமலை என்று அழைக்கப்படும் அந்த மலையில் பெட்டமுகுளாளம் என்ற இடத்தில் பன்றிகளை அடைத்து வைக்கும் குடிசையில்தான் FMPBயின் முதல் மிஷனரிகளாக நாங்கள் குடியேறினோம். அந்த குடிசையின் வாசற்படி பன்றி உயரத்தில் இருந்தது. உள்ளே இருவர் மட்டுமே படுக்கும் அளவுள்ள குறுகிய அந்த சிறிய அறைக்குள் 3 பேர் குடியிருந்தோம். எங்களுக்கு உதவியாக அனுப்பப்பட்ட சகோ.ஏசா என்பவரும் எங்களோடு தங்கினார். எங்களோடு வந்தவர்கள் அன்று மாலையே மலையிலிருந்து இறங்கிவிட்டனர்.

  அன்று நாங்கள் பன்றி குடிசையில் தங்கியது குறிப்பாக எனக்குள் பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. காரணம், மிஷனரி பணியில் ஏற்படும் கஷ்டங்களை ஏற்கனவே நான் எதிர்ப்பார்த்து அவைகளை கற்பனையில் நினைவுக்கூர்ந்து மனதில் பதித்திருந்தேன். மேலும் மிஷனரி பணியில் ஏற்படும் கஷ்டங்களில், மரண சூழ்நிலைகளில், குறைவுகளில் எப்படியிருக்கவேண்டும் என்று மனதிற்குள் ஏற்கனவே நான் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதனால்தான் அன்றைய வசதி குறைவுகள் எங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.

  ரத்த சாட்சிகளாய் மரித்த மிஷனரிகளின் சரித்திரத்தை வாசித்து சில மாதங்களாகவே என்னை நான் தயாராக்கிக்கொண்டேன். அதை நினைவில் வைத்துக்கொண்டே பெரியமலையில் மிஷனரி பணித்தளம் வந்து சேர்ந்தோம். என்னுடைய ஊழிய துவக்கத்திலேயே நாங்கள் 3 பேர் ஒன்றாக படுக்க இடமில்லாமல் பல விஷ பூச்சிகளுக்கிடையேயும், சுற்றிலும் வன விலங்குகளின் நடமாட்டத்துக்குமிடையேயும் படுத்து உறங்கிய அந்த முதல்நாள் இரவு அனுபவம் என் உள்ளத்தில் சொல்ல முடியாத சந்தோஷத்தைக் கொடுத்தது.

  கர்த்தருக்காக, கர்த்தருடைய ஊழியத்துக்காக இந்த அளவாவது கஷ்டப்படமுடிந்ததே என்று அவைகளை நினைத்து அந்த ஊழியம் எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதி நான் பெருமிதமும் கொண்டு அந்த குறைகளை, கஷ்டங்களை பெருமையாகவும், பாக்கியமாகவும் கருதினேன்.

  அந்த நாட்களில் நான் திருமணம் செய்யாதவன். என் உடன் ஊழியர் சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்களோ திருமணமாகி குழந்தைகளைப் பெற்றவர்.

பெரியமலையிலிருந்து நான் இறங்கிய சில மாதங்களுக்கு பிறகு அந்த குழந்தைகளுக்கு டேனிஷ்பேட்டையில் நான் வைத்தியம் செய்தவன் என்ற முறையில் அவர் குடும்பத்தையும் நான் நன்கு அறிவேன். ஒரு குடும்பஸ்தர், தன் மனைவி, சிறு பிள்ளைகளையெல்லாம் விட்டுவிட்டு இப்படி தனியாக அந்த அடர்ந்த காட்டுக்குள் மிஷனரி பணியில் அவர் இணைந்தது எனக்கும் பெரிய சவாலாக இருந்தது.

  தினசரி அந்த பெரியமலையில் எங்கள் காலைதியானம் மிக ஆசீர்வாதமாக இருக்கும்.

  பெரியமலையில் நாங்கள் வேதத்தை காலையிலேயே வாசித்தால்தான் உண்டு. இரவு சிறு மண்ணெண்ணெய் விளக்கில் வேதம் வாசிக்க இயலாது. ஆகவே பகலிலேயே எங்கள் தனிப்பட்ட வேத வாசிப்பு தியானம், ஜெபம் ஆகியவைகளை முடித்துக்கொள்வோம். காலை உணவு சாப்பிட்டு சுவிசேஷம் அறிவிக்க கிராம மக்களை நோக்கி புறப்படுவோம். நாங்கள் தங்கியிருந்த பன்றி குடிசையானது கிராம மக்கள் வாழும் இடத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தள்ளி மிக தனிமையில் இருந்தது. அக்கம்பக்கம் யாரும் குடியிருக்காத தனிமையான இடம். ஏதாவது யானைக் கூட்டம் அல்லது மிருகங்கள் தாக்கி நாங்கள் உயிருக்காக போராடி கூக்குரலிட்டாலும் யார் காதிலும் விழாத தூரத்தில் தனிமையாக குடியிருந்தோம். பகலில் எங்கள் குடிசையை திரும்பி பார்த்தப்படி நடந்துபோதுதான் எங்கள் சூழ்நிலையின் ஆபத்தையும் நினைத்து கடந்த இராத்திரி எங்களுக்கு தேவனே துணையிருந்தார் என்பதையும் உணர்ந்தபடி அவைகளைக்குறித்து பேசிக்கொண்டே ஊழியத்துக்கு புறப்பட்டோம். (அதன்பிறகு உள்ள பல சம்பவங்களை இப்போது விளக்கி சொல்லவில்லை, சில மாதங்கள் FMPB ஸ்தாபனம் எங்களுக்கு பணம் அனுப்பினது. பிறகு அனுப்பவில்லை. வாக்களித்த விசுவாசிகள் தங்கள் காணிக்கைகளை FMPBக்கு தொடர்ச்சியாக அனுப்ப தாமதித்ததால் நாங்கள் பட்டினி கிடக்கநேர்ந்தது. (அது சம்பந்தமான எங்கள் கடித போக்குவரத்துக்களும், சகோ.எமிலின் கடித விவரங்களையும் இப்போது இங்குநான் விளக்கவில்லை).

  கடந்த மாதம் நான் File-ஐ புரட்டிக்கொண்டிருந்தபோது என் File-ல் இரண்டு முக்கிய கடிதங்கள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. என்னை சந்தோஷப்படவும் வைத்தது. மேலும் அந்த கடிதங்கள் என்னை கண்கலங்கவும் வைத்தது.

  என் தகப்பனார் இரயில்வே பணியிலிருந்து ரிட்டயர்ட் ஆன நிலையில் தாய், திருமணமாகாத என் இரு சகோதரிகள் ஆக முழு குடும்பமும் நான் மிஷனரியாக சென்றதால் பணகுறைவு ஏற்பட்டு வறுமையில் வாடி நின்றன. கடைசி காலத்தில் என் ஒரே மகன் எங்களை கண்கலங்காமல், பட்டினி போடாமல், கடைசி வரைக்கும் காப்பாற்றுவான் என்று நம்பிக்கொண்டிருந்த என் குடும்பத்தினர், என் டாக்டர் தொழில் சம்பாத்தியத்தினால் பணசேமிப்பு ஒன்றுமில்லாத நிலையில், பணக்குறைவினால் மிகவும் கஷ்டப்பட்டனர், கண் கலங்கினர். எங்கள் குடும்பத்தின் அன்றைய சூழ்நிலை அப்படியாக இருந்தது. எங்களுக்கு என்று அன்று சொந்தமாக வீடில்லை, குடியிருக்கும் வீட்டுக்கு மாதவாடகை கொடுக்கவேண்டும், சாப்பிட உணவுக்கும், இதர செலவுக்கும் தேவையான பணத்துக்கு என்னையே நம்பியிருந்தனர். மிஷனரி பணியில் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை நான் மாதாமாதம் வீட்டுக்கு அனுப்பினால்தான் பட்டினியில்லாமல் என் குடும்பத்தினர் வாழமுடியும். என்னுடைய அப்பாவுக்கு பென்ஷன் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் FMPB மிஷனரி ஸ்தாபனம் அன்றைய ஆரம்பகால சூழ்நிலையில் எனக்கு அனுப்பிய பணம் போதவில்லை. நான் பெரியமலையில் சாப்பிட்டு செலவுப்போக மீதிபணத்தைதான் வீட்டுக்கு அனுப்பவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தொடர்ந்து இரண்டு மாதங்கள் FMPB யிலிருந்து எங்களுக்கு பணம் வராமல்போனது.

  நானும், சகோ.ஹாரிஸ் ஹில்டன், சகோ.ஏசா யாவரும் பணம் அனுப்பப்படாததால் மிகவும் நொடிந்துப்போனோம். சகோ.ஹாரிஸ் ஹில்டன் மனைவி டீச்சராக பணிபுரிந்ததால் அவர் குடும்பம் ஓரளவு சமாளித்தது என்றாலும் பிள்ளைகளின் பள்ளி செலவு, வைத்திய செலவு ஆகியவைகளுக்காக சகோதரன் ஹாரிஸ் ஹில்டன் மிகவும் கஷ்டப்பட்டார்.

  அந்த சூழ்நிலையில்தான் என் தகப்பனார் பெட்டமுகுளாளம் என்ற பெரியமலை விலாசத்துக்கு எனக்கு அனுப்பிய அந்தக்கடிதத்தை கடந்த மாதம் அதே File-இல் காண நேர்ந்தது. மாரண்டஹள்ளி என்ற சிற்றூர் போஸ்ட் ஆபிஸிக்கு கடிதங்கள் வந்துசேரும். கடிதங்களை எடுத்துக்கொண்டு ஒரு ஆள் நடந்து மலையேறிவந்து எங்களிடம் கொடுத்துவிட்டுபோவான். அதில் எனக்கு என் அப்பாவிடமிருந்து வந்த என் கடிதத்தை வாசித்து அதை சற்றுநேரம் உற்றுப்பார்த்தேன். என் குடும்பத்தில் பிறந்த ஒரே மகனாகிய என்னால் என் பெற்றோருக்கு எந்த ஒரு பிரயோனமுமில்லாமல் குடும்பமே கண்ணீரிலும், வறுமையிலும் மிதப்பதை அந்த கடிதம் வழியாக கண்டேன். என் கண்களின் கண்ணீர் துளிகள் தேங்கின. அது கீழே விழாமல் மனதிற்குள் கலங்கினேன். நான் ஒரு கிராம டாக்டரானாலும் என்னால் என் முழு குடும்பத்துக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லாமல்போனதே! என்ற ஆதங்கம் என்னுள் ஏற்பட்டது.

  என்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய என் பெற்றோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் அவர்களை நிம்மதியாக வாழவைக்க முடியாமல்போனதே! என்ற அங்கலாய்ப்பு இப்போதும் என் உள்ளத்தைவிட்டு நீங்காமல் இருக்கிறது. பெரியமலையில் உள்ள மிஷனரி வீட்டுக்கு பெயரே யெகோவாயீரே என்பதாகும். யெகோவாயீரே - கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் என்று அர்த்தமாம். அந்த அர்த்தத்தின்படி அந்த நம்பிக்கையில்லல்லவா எல்லாவற்றையும்விட்டு நான் மிஷனரி பணிக்கு வந்தேன். இனி கர்த்தர்தானே என் குடும்பத்தை பார்த்துக்கொள்ளவேண்டும்? பின் ஏன் என் குடும்பம் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நிலை வந்தது. இந்த கேள்வி அன்று என் தகப்பனாரின் கடிதங்களை வாசிக்கும்போது என் உள்ளத்தில் வந்தது.


என் தகப்பனார் எனக்கு எழுதிய தபால் கார்டு:

என் தகப்பனார் எனக்கு பெரியமலை (பெட்டமுகுளாளம்) பணிதளத்துக்கு அன்று எழுதிய கடித விவரத்தை வாசகர்கள் அறியவேண்டி இப்போது வெளியிட்டேன். அக்கடிதம் சேலம் என் வீட்டு விலாசத்துக்கே Re-direct செய்து திருப்பி அனுப்பப்பட்டது. என் அப்பா எனக்கு எழுதும் கடிதம் முழுவதும் இதே மாதிரியான பஞ்சப்பாட்டாக இருப்பதால் என் உள்ளம் ஊழியத்தை விட்டுவிட சொல்லுமோ என்ற பயத்தில், என் அப்பா எழுதிய பல கடிதங்களை நான் வாசிக்காமல் அப்படியே கிழித்து போட்டுவிடுவேன். என் அப்பா திரும்பவும் எனக்கு கடிதம் எழுதாததிருக்க கடிதத்தை திருப்பி வீட்டு விலாசத்துக்கே அனுப்பவிடுவேன். அப்படி திருப்பி அனுப்பப்பட்ட கடிதங்களில் ஒன்றுதான் உங்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளேன்.

  இந்த நிலைகளையெல்லாம் சுட்டிக்காட்டி சகோ.P.சாமுவேல், Dr.Daniel, Dr.சாம் கமலேசன், சகோ.எமில் ஜெபசிங் அன்று ஆடிட்டராக இருந்த Rev.மோஹன் ஆகியவர்களுக்கு நானும், சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்களும் பல கடிதங்கள் எழுதினோம். அதில் இரண்டு பேர்களிடமிருந்துமட்டும் எனக்கு பதில் கடிதம் வந்தது.

1). ஆடிட்டர்.மோஹன் (Rev.Mohan), (இப்போது இவர் உயிரோடு இல்லை).

2). தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் அன்று பேராசிரியராக வேலை பார்த்த Dr.Daniel அவர்களும் ஆவார்கள்.

  இவர்கள் இருவரும் நிறைய வசனங்களை குறிப்பிட்டு அருமையான கடிதம் எனக்கு எழுதினார்கள். அந்த கடிதங்களும் அதில் குறிப்பிட்ட வசனங்களும்தான் அந்த காட்டுக்குள் வறுமையில் வாடிய எங்களுக்கு பெலத்தையும், ஆறுதலையும் அளித்தது. (அந்த காலத்தில் அப்படி ஒரு நல்ல கடிதம் எழுதிய Dr.J.D.K.Daniel அவர்கள்தான் பெத்தேல் விஷயமாக நிர்வாகி Mr.Jayakumar அவர்களைப்பற்றி ஜாமக்காரனில் நான் விமர்சித்து எழுதியதற்கு என்னோடு அவர் கோபப்பட்டுவிட்டார். நான் ஜாமக்காரனில் பெத்தேலைப்பற்றி எழுதிய என் நோக்கம், பெத்தேலைப்பற்றிய என் பாரம் இவைகளை அவர் புரிந்துக்கொள்ளாமல் Dr.டேனியல் அவர்கள் கோபமாக எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அன்றைய நாளில் எனக்கு எழுதிய அவருடைய கடிதத்தையும் - இன்றைய நாளில் எழுதிய அவருடைய கடிதத்தையும் இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தேன். அதனால்தான் என் மனம் பெத்தேல் பொறுப்பாளர்களின் இன்றைய ஆவிக்குரிய நிலையை சந்தேகப்படவைத்தது. பெத்தேல் விஷயமாக எனக்கும் டாக்டர்.டேனியல் அவர்களுக்கும் இடையே நடந்த கடித விவரங்கள் வாசகர்களுக்கு தெரியாது. பெரியமலை மிஷனரி விவரங்களை இன்று நான் எழுதும்போது அவரின் கடித வித்தியாசங்களை விளக்கவே இவைகளையும் இப்போது குறிப்பிடவேண்டி வந்தது).

  FMPBயின் முதல் மிஷனரிகளில் ஒருவனாய் நான் சென்றது கொஞ்சகால அனுபவமாக இருந்தாலும் அதன் ஆவிக்குரிய அனுபவத்தின் ருசி மிகப் பெரியது. பணக்குறைவினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மிஷனரி ஊழியம் மறுபடியும் தொடங்கப்பட்டது. மீண்டும் மிஷனரி பணி தொடங்கப்பட்டபோது என்னால் பெரியமலை சென்று மிஷனரி பணியில் இணையமுடியவில்லை. என் வீட்டின் சூழ்நிலை, என் குடும்ப பொறுப்பு ஆகியவைகள் காரணமாக மீண்டும் மிஷனரி ஊழியத்தை என்னால் தொடரமுடியாமல் போனது. ஆனால் மிஷனரி ஊழியபாரம்மட்டும் என்னிலிருந்து நீங்காமல் ஒவ்வொருநாளும் கூடிக்கொண்டே வந்தது. ஆகவே என் வைத்திய தொழிலோடும், சபை கன்வென்ஷன் ஊழியத்தோடும், மிஷனரி ஊழியத்தையும் இணைத்துக்கொண்டேன். மாதத்தில் 3 வாரங்கள் சபைகளை வசனத்தில் நடத்தும் கன்வென்ஷன் பிரசங்கியாக செயல்பட்டேன், வானொலியில் வேதப்பாடம் நடத்தும் ஊழியத்தையும் செய்தேன், அப்படியே மாதத்தில் ஒருவாரம் முழுவதும் ஆதிவாசிகள் வாழும் காடுகளில் ஆதிவாசிகளுக்கு இலவச வைத்திய பணியும், அவர்களுக்கு சுவிசேஷமும் இன்றுவரை தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருக்கிறேன்.

பல ஊர்களிலிருந்தும், பல நாடுகளிலிருந்தும், பலவித சபைமக்கள் என் ஊழியம் மூலமாக தொடப்பட்டவர்கள் என்னோடு கடிதத் தொடர்புக்கொண்டு சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் கேட்பார்கள் அவர்களுக்கு பதில் எழுதவே ஜாமக்காரன் பத்திரிக்கையை ஆரம்பித்தேன். லட்சக்கணக்கான வாசகர்களுக்கு ஜாமக்காரன்மூலம் தவறான ஊழியத்தைப்பற்றியும், தவறான உபதேசங்களைப்பற்றியும், பிழையான சாட்சியில்லாத ஊழியர்களைப்பற்றியும் வாசகர்களுக்கு அறிவித்து அவர்களை எச்சரிக்கவும், ஆலோசனை கொடுக்கவும், அவர்களின் ஆவிக்குரிய கேள்விகளுக்கு பதில் கொடுக்கவுமே ஜாமக்காரன் பத்திரிக்கை மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது. ஜாமக்காரன் பத்திரிக்கையை 1969ம் வருட முதல் இதுவரை நிறுத்தாமல் முற்றிலும் இலவசமாக என் வாசகர்களுக்கு அனுப்பிக்கொண்டு இந்த பத்திரிக்கை ஊழியத்தையும் வெகுநேர்த்தியாய் நடத்த கர்த்தர் உதவுகிறார். ஆவியானவரின் உதவியோடும், என் வாசகர்களின் ஒத்தாசையுடனும் பத்திரிக்கையை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவருகிறேன்.

  Tribal Mission ஊழிய ஸ்தாபனத்தையும் நானே ஆரம்ப நாட்களில் முன்னின்று நடத்தினேன். அது ஆலமரம்போல பெரிய ஸ்தாபனமாக மாறியது. அதில் ஆரம்ப நடத்துதல்மட்டுமே என்னுடைய பங்காக இருந்தது. அதன்பின் அந்த ஊழியம் கர்த்தருடைய பிள்ளைகளால் வளர்க்கப்பட்டு டாக்டர்.முரளிதர்.MD, அவர்களின் பொறுப்பில் சேர்ந்து பிரகாசித்தது.

  மனிதனுக்கு வேதம் அனுமதித்த வயது இப்போது எனக்கு நடந்துகொண்டிருக்கிறது. இந்த வயதிலும் நான் என் தனிப்பட்ட ஊழியத்தையும், மிஷனரி ஊழியத்தையும் எந்த சபையின் உதவியும் அல்லது எந்த ஸ்தாபன உதவியும் இல்லாமல் இந்த ஊழியத்தை தனிப்பட்டமுறையில் என்னை புரிந்துக்கொண்ட எனக்காக ஜெபிக்கிற விசுவாசிகளின் உதவியோடு தொடர்ந்து நிறைவேற்ற கர்த்தர் எனக்கு அருள்புரிகிறார். ஆகவே கலப்பையில் கைவைத்த நான் பின்னிட்டு பாராதவனாக அதே மிஷனரி ஊழியத்தையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். மாதம் ஒருவாரம் முழுவதும் காட்டுக்குள் தங்கி இலவச வைத்தியமும், மிஷனரி பணியையும் செய்துகொண்டுவருகிறேன். எல்லா சபைகளையும் மிஷனரிகளை தாங்கும் சபைகளாக உணர்வடையும்வகையில், கன்வென்ஷன் கூட்டங்களிலும் பிரசங்கிக்கிறேன். மாதத்தில் 3 வாரங்கள் சபை கன்வென்ஷனில் பிரசங்கித்து, வசனத்தைவிட்டுவிலகி, பரவச உணர்வுகளில் மூழ்கிப்போனவர்களை வசனத்துக்குநேராக திருப்பும் பணியையும் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். மிஷனரி ஊழியபாரம் தொடர்ந்து என் உள்ளத்தில் எரிந்து பிரகாசிக்கிற ஒளியாக நிறைந்திருப்பதற்காக நான் தேவனைத்துதிக்கிறேன். என் மரணம் வரை அந்த மிஷனரி பாரம் என்னில் தொடரவேண்டும் என்றும் ஜெபிக்கிறேன்.

  1967 ஜுன் 9, FMPB-நண்பர்கள் சுவிசேஷ ஜெபக்குழுவின் முதல் மிஷனரிகளை அனுப்பியநாள் ஆகும். அந்த நாளுக்காக இந்தமுறை பெரியமலைக்கு அழைக்கப்பட்டேன். ஆனால் போகமுடியவில்லை. ஆகவே இந்த ஜுன் மாத ஜாமக்காரன் பத்திரிக்கை வெளியிடும்போது பெரிய மலையை விசேஷமாக நினைவு கூறுகிறேன். நீங்களும் உங்கள் ஜெபத்தில் பெரியமலை ஊழியத்துக்காக ஜெபியுங்கள்.

  இந்த மலையில்தான் இருமாநிலங்களை கலங்க வைத்த சந்தனகட்டை வீரப்பன் என்பவன் வாழ்ந்தான் என்பது நீங்கள் அறிந்ததே.

  அன்று அந்த பெரியமலையில் நாங்கள் குடியிருந்த பன்றி குடிசையானது இன்று நல்ல கட்டிடமாக மாறியுள்ளது. அங்கு ஆலயமணி ஓசை கேட்கிறது. பெரியமலையில் உள்ள ஆதிவாசிகள் இயேசுவை ஏற்றுக்கொண்டு வாராவாரம் அந்த ஆலயத்தில் கூடும் காட்சிகள் மிகவும் சந்தோஷமானது. அருகே நிரந்தரமான நல்ல மிஷன் ஆஸ்பத்திரி ஒன்று உருவாகியுள்ளது என்பது சந்தோஷமான செய்தியாகும். அங்கு ஊழியம் செய்ய தன்னை அர்பணித்த Dr.ஜெயசந்திரன்.MS.Mch அவர்களும் உதவி டாக்டராக அவர் மனைவியும் அந்த மலையில் இணைந்து ஊழியம் செய்வதை பாராட்டுகிறேன். பெரியமலையில் அற்புதமான வளர்ச்சிகளை அறிகிறேன். இவைகளைக் கண்டு உள்ளத்தில் தேவனை துதிக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஒவ்வொரு வருடமும் நான் எங்கிருந்தாலும் ஜுன் மாதம் 9ம் தேதியை நினைவுகூர்ந்து ஜெபிக்க மறப்பதில்லை. கர்த்தர்தாமே எல்லா மிஷனரிகளையும், எல்லா மிஷனரி ஸ்தாபனங்களையும் ஆசீர்வதிப்பாராக. என் ஆரம்ப ஊழியம் அன்று மிக வறுமையிலும், கஷ்டத்திலும் நடந்தேறியது. ஆனால் இப்போதோ கர்த்தர் என்னையும், என் ஊழியத்தையும், என் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையில் சமாதானத்துடன் வாழ வைத்துள்ளார். கர்த்தர் என்னை எப்படியெல்லாம் ஊழியத்தில் உயர்த்தியுள்ளார் என்பதையும் நீங்கள் அறியவேண்டும்.

  கர்த்தர் என்னை இப்போது உலக பிரசித்திப்பெற்ற ஊழியக்காரனாக உயர்த்தியுள்ளார்.

  வானொலி செய்தியாளனாகவும் ஊழியம் செய்கிறேன்.

  TVயில் சத்தியவசனம் நிகழ்ச்சிமூலம் கர்த்தருடைய வார்த்தையை அறிவிப்பதை உலகமக்கள் அனைவரும் காணும் வகையில் என்னை வளர்ந்த ஒரு ஊழியக்காரனாக கர்த்தர் மாற்றியுள்ளார்.

  அநேக மிஷனரிகளை அனுப்புகின்ற Tribal Mission என்ற மிஷனரி ஸ்தாபனத்தை ஆரம்பித்தவன் என்ற பெயர் எனக்கு சந்தோஷத்தையும், பெருமையையும் அளிக்கிறது.

  பல்வேறு இடங்களில் அநேகர் எனக்கு கொடுக்கும் காணிக்கைகளைக்கொண்டு பல கிராமங்களில் பல ஆலயங்களை கட்டினேன். எதிலும் என் பெயர் வாரமல் பார்த்துக் கொண்டேன்.

  எனக்கு கிடைக்கும் தொகையிலிருந்து அநேக ஊழியர்களுக்கும் அவ்வப்போது தேவையான உதவிகளை என்னால் விளம்பரம் இல்லாமல் செய்யமுடிந்தது. என்னால் பெரிய அளவில் உதவி செய்ய இயலாது என்றாலும் உதவி செய்பவர்களை தேவை உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்கள் மூலமாக உதவி தேவையுள்ளவர்கள் பயனடைய முடிகிறது. இப்படிப்பட்ட ஊழியத்தையும் நிறைவேற்றுகிறேன்.

  அநேக ஊழியங்களுக்கு, மிஷனரிகளுக்கு, மிஷனரி ஸ்தாபனங்களுக்கு, பல்வேறு சபைகளுக்கு, சபைத்தலைவர்களுக்கு, மேய்ப்பர்களுக்கு, ஊழியர்களுக்கு சபைமக்களுக்கு ஆலோசனை கொடுக்கும் ஆலோசகனாகவும், ஊழியனாகவும் நான் செயல்பட கர்த்தர் நல்ல தாலந்துகளை எனக்கு அள்ளிக்கொடுத்து அதன்மூலம் பல குடும்பங்களுக்கு ஊழியர்களுக்கு நான் ஆசீர்வாதமாக விளங்க வைத்துள்ளார். அதற்கு ஆவியானவர் எனக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அதற்காக தேவனைத் துதிக்கிறேன். அவரை மகிமைப் படுத்துகிறேன். என்னை புழுதியிலிருந்து உயரத்தில் தூக்கி நிறுத்திய தேவனைத் துதிக்கிறேன்.

  ஆனாலும் என் ஆரம்பத்தையும், ஆரம்பகால அனுபவங்களையும், மலைகளிலும், கிராமங்களிலும் பல மைல்கள் நடந்துச்சென்று ஊழியம் செய்ததையும், மரத்தடியில் கையை தலையணையாக வைத்து படுத்து உறங்கியதையும், நான் மறக்காதபடி அந்த நிகழ்ச்சிகள் எதுவும் என் உள்ளத்திலிருந்து நீங்காதபடியும் ஆவியானவர் என்னை கிருபையாக வழிநடத்துகிறார்.

  நான் இப்போது பிரபலமாக வளர்ந்த ஊழியனாக இருந்தாலும், இப்படித்தான் என் படுக்கை இருக்கவேண்டும், என் அறை இப்படித்தான் இருக்கவேண்டும், என் பயணம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கண்டிஷன்கள் இடாமல், ஆகார விஷயத்திலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் எல்லா சூழ்நிலையிலும் மனரம்மியமாக வாழ கர்த்தர் எனக்கு கற்றுக்கொடுத்து என்னை நடத்துகிறார்.

  என் தேவன் தொடர்ந்தும் அப்படியே என்னை வழிநடத்தவேண்டும் என்று ஜெபிக்கிறேன்.

  மரணம்வரை அப்படியே அவர் வழிநடத்துவார் என்று விசுவாசிக்கிறேன். தாழ்ந்திருக்கவும் எனக்கு தெரியும், திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் நான் எந்த நிலையிலிருந்தாலும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.

  எல்லா சூழ்நிலையிலும் மனரம்மியமாக இருக்க கற்றுக்கொண்டேன். என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப்பெலனுண்டு. பிலி 4:11,12,13. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.

  2010 ஜுன் மாதம் 9ம்தேதியில் மேலே எழுதப்பட்டவைகளை நினைத்து தேவனைத் துதித்தேன். இந்த நினைவு எல்லா நாளும் எனக்குள் இருப்பதாக. ஆமென்.


சகோ.எமில்ஜெபசிங் அவர்களின் ஜெப அனுபவம்:

சில நல்ல ஆவிக்குரிய அனுபவங்களை சகோ.எமில் ஜெபசிங் அவர்களின் வாழ்கையிலிருந்து உங்களோடு பகிர்ந்துகொள்ள பாரப்படுகிறேன்.

  FMPBயின் ஸ்தாபகர்களாக மற்றவர்கள் இருந்தாலும் FMPBயை அருமையாக கட்டி எழுப்பிய பெருமை சகோ.எமில் ஜெபசிங் அவர்களையே சேரும். அவருக்கு என்னை பிடிக்காது என்றாலும் சகோ.எமிலின் ஆரம்பகால ஜெபவாழ்க்கை, அவரின் விசுவாச ஜீவியம் இவைகளை உங்கள் நன்மைக்காக பகிர்ந்துகொள்ளாமல் இருக்கமுடியாது.

  FMPBயில் ஜெபவீரர்கள் என்று குறிப்பிட நான் நேரிடையாகவே அறிந்த நபர்கள் மூவர் 1. எமில் ஜெபசிங், 2. சகோ.பேட்ரிக் ஜாஷ்வா, 3. பெத்தேலை தோற்றுவித்தவர்களில் பெத்தேல் ஸ்தாபகர்களில் கஷ்டகூட்டாளியாக கருதப்படும் சகோ.ஸ்டீபன் அவர்களுமாகும். இவர்களில் சகோ.எமில் ஜெபசிங் அவர்களின் எரேமியாபோல கண்ணீர் ஜெபவாழ்க்கையை FMPBயின் ஆரம்ப காலத்தில் கேட்டறிந்தவனும், நேரில் கண்டறிந்தவன் என்ற முறையில் சில நிகழ்ச்சிகளை வாசகர்கள் பயனடைய குறிப்பிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

  முதல் மிஷனரிகளாக பெரியமலையில் எங்களை மலை பணித்தளத்தில் கொண்டுபோய் விட்டவர்களில் சகோ.எமிலும் ஒருவர் என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைபோல முதல்நாள் மலைமேல் சென்றடைந்து பன்றி குடிசையில் நாங்கள் சாமான்களை இறக்கிவைத்து மதிய உணவு சாப்பிட சகோ.எமிலை தேடினோம். அப்போது அவர் குடிசைக்கு பின்னால் உள்ள பாறைமேல் முழங்கால்படியிட்டு குலுங்கி குலுங்கி அழுது ஜெபித்துக் கொண்டிருப்பதை கண்டேன். அப்படி ஒரு பாரமுள்ள அழுகை, அந்த ஜெபம், அந்த மன்றாட்டு என்னையும், என் உள்ளத்தையும் வெகுவாக பாதித்தது. அவர் அப்படி ஜெபிப்பதை பெத்தேலிலும் பலமுறை நேரில் கண்டிருக்கிறேன். அந்த ஜெபம் நான் கைக்கொள்ள நல்ல முன்மாதிரியாக அமைந்தது. அந்த அனுபவம்தான் இப்போதும் அதேபோல் ஜெபிக்க, ஜெப குறிப்புகளை எடுத்துக்கொண்டு அடிக்கடி நான் தனிமையை தேடிபோகிறேன். அந்த ஜெபம் எனக்கு டானிக்போல் விசுவாச ஜீவியத்துக்கு நல்ல பெலத்தை கொடுக்கிறது.


சகோ.எமில்ஜெபசிங் அவர்களின் விசுவாசம்:

  சகோ.எமில் ஜெபசிங் அவர்கள் FMPBயில் ஈடுபட்ட ஆரம்ப காலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக நான் நினைக்கிறேன். மனம்திரும்பி விசுவாச ஜீவியத்தில் அவர் கால் வைத்த ஆரம்பகாலம் பாரத தேசத்தைக் குறித்தும் அவர்கள் இயேசு கிறிஸ்துவை அறியவேண்டும், அதற்கு மிஷனரிகள் தேவை என்ற இந்த தாக்கம் அவர் உள்ளத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் ஆரம்பகாலம்.

  சகோ.எமில் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட ஒரு சம்பவம் அவரின் ஆழமான விசுவாசத்தை ஊர் மக்களும் அவருடைய உறவினர்களும் நேரில் காண செய்தது.

  அவர் தகப்பனார் சாயர்புரத்தில் CSI சபை குருவானவராக பணியாற்றிய காலம் அது. நான் ஒரே ஒருமுறை சாயர்புரத்துக்கு நேரில் சென்று சகோ.எமிலின் தகப்பனாருடன் பேசிய பரிச்சயம் உண்டு. அதற்குமுன் நடந்த சம்பவம் இது.

  சகோ.எமில் அவர்களின் சகோதரிகளில் ஒருவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு நிச்சயம் நடந்தது. திருமண நாளும் வந்தது. வீட்டில் கல்யாண பந்தல், திருமண அலங்காரம் யாவும் முடித்து திருமண நேரம் வந்தது. மணமகள் அலங்கரிக்கப்பட்டு வந்து அமர்ந்திருக்கிறாள். மாப்பிள்ளை வர தாமதமாயிற்று. நேரம் கடந்தது. திருமணத்துக்கு வந்த உறவினர், நண்பர்கள் பொறுமையிழந்தனர். எமிலின் பெற்றோர் தவித்தனர். உடனே ஒரு ஆள் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று விசாரித்து வருகிறேன் எனக்கூறி ஒரு புல்லட் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக புறப்பட்டு சென்றார். மொபைல் போன் கண்டுபிடிக்காத காலம் அது. புல்லட் வண்டியில் சென்றவர் அதே வேகத்தில் திரும்பி வந்தார். சொன்ன தகவல் என்னவென்றால் மாப்பிள்ளைக்கு மணப்பெண்ணை பிடிக்கவில்லை என்பதாகும். எல்லாருக்கும் தூக்கிவாரிப்போட்டது. ஒரு சபை குருவானவர் வீட்டு கல்யாணம் நிச்சய சடங்கு நடந்தபோதே பெண் மாப்பிள்ளையை பார்த்தார், மாப்பிள்ளை பெண்ணை பார்த்தார். மனபூர்வ சம்மதம் அப்போதே தெரிவிக்கப்பட்டது. ஆனால் திருமண நேரத்தில் பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறக்காரணம் என்ன? கடைசி நேரத்தில் மாப்பிள்ளை மனது அல்லது மாப்பிள்ளையின் பெற்றோர் மனது வேறு ஒரு பெரிய இடத்து பெண்ணை ஏற்பாடு செய்யும் ஆசையில் மனம்மாறியதாக அறிந்தேன். திருமண வீடு - சாவு வீட்டைப்போல் மாறிவிட்டது. சில நிமிடத்திலேயே திருமண வீடு துக்க வீடாக மாறிவிட்டது. குடும்பத்தினர் அவமானப்பட்டு தலைகுனிந்த நிலையில் நிலைகுலைந்துபோனார்கள். திருமணத்துக்கு வருகை தந்தவர்களுக்கு மாப்பிள்ளை தாலிகட்ட வர மறுத்துவிட்டார் என்ற செய்தி தீ போல் பரவ, அவர்கள் யாவரும் திரும்பிபோவதா - தொடர்ந்து அங்கேயே அமர்வதா என்ற குழப்பத்தில் அவர்கள் யாவரும் சகோ.எமில் குடும்பத்தினரின் முகத்தை பரிதாபமாக நோக்கினர். வந்தவர்கள் தோல்வியுடன் தங்கள் வீடுகளுக்கு திரும்ப ஆயத்தப்பட்ட நிலையில், சகோ.எமில் எழுந்து திருமணமேடையில் நின்று எல்லாரையும் பார்த்து எல்லாரும் தயவுசெய்து கவனியுங்கள் இந்த திருமணம் நின்றுபோனதைக் குறித்து யாரும் கவலைப்படவேண்டாம். இந்த திருமணப்பந்தல் கலைக்கப்படாது. இன்னும் ஒரே வாரத்தில் இதே திருமண பந்தலில் என் அக்காவின் திருமணம் நடைபெறும். நிச்சயமாகவே நடைபெறும் நான் ஆராதிக்கும் தேவனின்மேல் உள்ள விசுவாசத்தில் சொல்கிறேன். ஏற்பட்ட தடைகளுக்காகவும் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காகவும் எங்களை மன்னியுங்கள் என்று கூறி, இன்னும் சில நாளில் புது மணமகன் யார் என்ற விவரம் உங்கள் வீட்டுக்கு அறிவிப்போம். தயவுசெய்து எல்லாரும் அக்காள் திருமணத்துக்கு தயக்கம் காட்டாது மறுபடியும் ஒருமுறை கட்டயமாக வந்துசேருங்கள் என்று கூறி ஜெபித்தார். திருமணத்துக்கு வந்த கூட்டம் கலைந்தது. எமில் கூறியபடியே ஒரே வாரத்தில் ஒரு டாக்டரின் குடும்பத்தில் பிறந்த ஒரு நபரை தன் அக்காவுக்கு மணமகனாக தெரிந்தெடுத்து அதே பந்தலில் வெகுவிமர்சையாக அந்த திருமணத்தை நடத்திவைத்தார். ஊரே அவரின் விசுவாசத்தையும், விசுவாசத்திற்கு கிடைத்த பதிலையும் கண்டு இப்போதும் அதை விவரித்து புகழ்வதை நான் கேட்டேன். சகோ.எமில் அவர்களின் விசுவாசம் மிகப் பெரியது. காரணம் அவரின் பாரமுள்ள கண்ணீர் ஜெபம் அவருக்கு வெற்றியை கொடுத்தது.

  அடுத்த சம்பவம் எமில் அவர்கள் FMPBயை விட்டுவிலகி விஷ்வவாணியில் சேர்ந்தபின் சொந்த வாழ்க்கையில் தான்பெற்ற மகள் படிப்பின் விஷயமாக பெரிய சோதனையை சந்திக்க நேர்ந்தது. மகள் தன் படிப்பில் நல்ல மார்க்குடன் வெற்றி பெற்ற நேரம் அது. அவள் தான் ஒரு இன்ஜினியர் பட்டதாரியாக படிக்க விருப்பம்கொண்டார். அந்தநாளில் சகோ.DGS.தினகரன் அவர்களின் பிரசங்கத்தை ஹிந்தியில் மொழிபெயர்ப்புடன் தயாரித்து வடஇந்தியா முழுவதும் எமில் அவர்கள் கேட்கசெய்தார். வானொலியில் செய்தியை முதன்முதல் மொழிபெயர்ப்பில் தயாரித்து வெளியிட்ட சிறப்பு எமிலையே சேரும். இதன்மூலம் சகோ.தினகரன் வடஇந்தியா முழுவதும் அறியப்பட்டார். இதன்பிறகுதான் வடஇந்திய வாசல் அவருக்கு திறக்கப்பட்டது. ஆகவே அந்த பழக்கத்தில் சகோ.தினகரனிடம் தன் மகளுக்கு காருண்யாவில் படிக்க ஒரு சீட் கேட்டார். அவரும் தருவதாக வாக்களித்தார், ஆனால் டொனேஷன் கொடுத்தால்தான் சீட் கிடைக்கும் என்று காருண்யா கல்லூரி அறிவித்துவிட்டது. மகள் பெரிய எதிர்ப்பார்ப்புடன் காருண்யாவில் இடம் கிடைக்கும் என்று தன் சிநேகிதிகளுகெல்லாம் அறிவித்து ஆவலுடன் காத்திருந்த அவளுக்கு காருண்யாவில் பணம் கொடுக்காமல் இடமில்லை என்று கல்லூரி பொறுப்பாளர் நேரில் அவர்களுடன் அறிவித்தபின் மகள் மனம்நொடிந்து மனநிலை பாதிக்குமளவு சேர்ந்துப்போனாள். ஒரு மிஷனரி ஊழியக்காரரின் மகளுக்கு அதுவும் தன் ஊழியத்துக்கு பெரியளவில் உதவிசெய்தவரின் மகளுக்கு காருண்யாவில் ஒரு சீட் கொடுக்க மிஷனரி பணிசெய்யும் சகோ.எமிலிடம் பணம் கேட்ட செய்தி அனைத்து விசுவாசிகளுக்கும், ஊழியர்களுக்கும் சகோ.தினகரன்மேல் பெரும் வெறுப்பை உண்டாக்கியது.

  ஏழைகளுக்காகவே காருண்யா கல்லூரியை ஆரம்பிக்க கடவுள் சொன்னார் என்று சகோ.தினகரன் அவர்கள் பொய் சொல்லி ஆண்டவரின் மனதையும் வேதனைப்படுத்திவிட்டார். ஆனால் கர்த்தரோ சகோ.எமில் மகளை கைவிடவில்லை. மகளுக்கு வெல்லூர் CMC மெடிக்கல் காலேஜில் MBBS படிப்புக்கு இடம் கிடைக்கசெய்து இப்போது படிப்பை முடித்து மேல்படிப்பையும் முடிக்க கர்த்தர் கிருபை செய்தார் என்று கேள்விப்பட்டு தேவனைத் துதிக்கிறேன். காருண்யா கல்லூரி படிப்பைவிட மிக உயர்ந்த கௌரவம் மிகுந்த படிப்பை சகோ.எமில் மகளுக்கு கர்த்தர் பரிசாக அளித்து அவர் அனுபவித்த அவமானத்தையும், கண்ணீரையும் கர்த்தரே துடைத்தார். இப்படிப்பட்ட பல அனுபவங்கள் நிறைந்த விசுவாச பாதையில் இப்போதும் சகோ.எமில் பயணித்துக்கொண்டிருக்கிறார். (மகளைப்பற்றிய இந்த செய்தியை சிலர் வாயினால் கூறி கேள்விப்பட்டு இதை எழுதுகிறேன். இதன் சரியான மேல்விவரம் நான் இன்னும் அறியவில்லை).

  FMPB மினஷரி பணியில் என் வாழ்க்கையில் மேலே குறிக்கப்பட்ட விஷயங்கள் மறக்க முடியாத நினைவுகளாக என் முன்வந்ததால் இந்த சம்பவங்களை வாசிக்கும் என் வாசகர்களில் ஒரு சிலருக்காவது இந்த சம்பவங்களும், அனுபவங்களும் பிரயோஜனம் அளிக்கும் என்று நம்பிக்கையில் இதை வெளியிடுகிறேன்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM