கேள்வி - பதில்
ஜாமக்காரனின் பதில்கள்

ஆதார் அட்டை

கேள்வி:இப்போது இந்தியா முழுவதும் அரசாங்கத்தால் கட்டாயப்படுத்துகிற (Aadhar Card) ஆதார் அடையாள அட்டையை அந்திக்கிறிஸ்துவின் செயலாக கருதலாமா? விசுவாசிகள் நாம் அதை எடுக்கவேண்டுமா?

பதில்:அந்திக்கிறிஸ்துவின் காலம் இன்னும் வரவில்லை. இன்னும் நிறைவேறவேண்டிய தீர்க்கதரிசன சம்பவங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் அந்திக்கிறிஸ்துவின் செயல் அவனுக்காக உள்ள ஆயத்த ஏற்பாடுகள் இப்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றன. ஆகவே இப்போதுள்ள சூழ்நிலையில் முதலாவது அவர் வருகைக்கு அல்லது நம் மரணத்துக்கு நம்மை ஆயத்தப்படுத்தி நம் சாட்சியுள்ள வாழ்க்கை மூலமாக கிறிஸ்துவை மக்களுக்கு காட்டி மற்ற ஆத்துமாக்களுக்காக நாம் ஜெபிப்பதும், சுவிசேஷம் அறிவிப்பதும், சுவிசேஷம் அறிவிக்கப்பட்டவர்களுக்கு இயேசுவின் இரண்டாம் வருகையைப்பற்றி அறிவிப்பதும் மிக முக்கியமாகிறது.

கடைகளில் காணப்படும் கம்ப்யூட்டர் கோடுகள், கம்யூட்டர் அடையாளங்கள் லேசர் மூலம் அறியப்படுதல், சிப் (Chip) நம் கைகளில் பொருத்தப்படுதல் இவைகள் எல்லாம் பொருளாதார நவீன மயமாகக்கப்படுதலின் ஆரம்பம் ஆகும். இவைகளோடு நம் ஒத்துப்போக வேண்டியது இப்போதைய காலத்தின் கட்டாயம் ஆகும். இவைகளுக்கொல்லாம் நீங்கள் ஒத்துப்போகவில்லையானால் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொருளும் வாங்கமுடியாது. துணிகள், ரெடிமேட் உடுப்புகள் இவைகளில் விலைப்பட்டியலில் ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் கம்யூட்டர் குறியீடு இவைகளையும் நீங்கள் தவிர்க்கவேமுடியாது.

அதுபோல ஆதார் அடையாள அட்டையையும் தவிர்க்க முடியாது. அதைக்குறித்து யாரும் இப்போதைக்கு பயப்படவேண்டாம். எத்தனையோ வருடங்களுக்கு முன்பே வெளிநாடுகள் முழுவதும் அந்த அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். ID-கார்டு முதல் டிரைவிங் லைசன்ஸ் வரை எல்லாவற்றிலும் உங்கள் அனைத்து பேங்க் கணக்குகளின் விவரம் உங்கள் குடும்ப விவரம், நீங்கள் பழைய குற்றவாளியாக இருந்தால் அதன் விவரம் அதோடு எத்தனை முறை நீங்கள் ஜெயில் போய் வந்தீர்கள், எத்தனைமுறை போலீஸில் தொடர்புக்கொண்டீர்கள் போன்ற அத்தனை விவரங்களும் அந்த ID-யிலும் டிரைவிங் லைசென்ஸ்ஸிலும் காணப்படும். உங்கள் பூர்வீகம் முதல் இப்போதுள்ள உங்கள் வாழ்க்கை விவரம் அத்தனையும் அந்த அடையாள கார்டுகள் மூலம் கண்டறியலாம்.

நம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள ஆதார் அடையாள அட்டை வெறும் ஆரம்பம்தான். இந்த அடையாள அட்டை இல்லாமல் நீங்கள் வெளியே போய்வரமுடியாது என்ற நிலை நிச்சயம் வரும். இன்னும் சிலகாலம் கடந்தால் உங்களைப்பற்றிய அனைத்து விவரங்களையும் நம் அரசாங்கம் தானாக அதில் பதியவைத்து வெளிநாடுகளில் இப்போது காணப்படும் ID-போல நம் நாட்டிலும் அடையாள அட்டை நடைமுறைக்கு கொண்டுவந்துவிடுவார்கள். இது மிகவும் அவசியமாகும். இதற்காக யாரும் பயப்படவேண்டாம்.

நாங்கள் எங்கள் குடும்பமாக ஆதார் அடையாள அட்டைக்கு முகத்தையும், கைரேகைகளையும் பதியவைத்து அரசாங்க கட்டளைக்கு கீழ்ப்படிந்துள்ளோம். இது அந்திக்கிறிஸ்துவின் கட்டளையல்ல. பயம் வேண்டாம்.

ஏராளமானவர்கள் கடந்த வருடமே ஆதார் அட்டையைக்குறித்து கேள்விகள் கேட்டு எனக்கு எழுதியுள்ளார்கள். பதில் இப்போதுதான் எழுதமுடிந்தது. ஆகவே வாசகர்கள் மனந்திரும்பி உங்கள் மரணத்துக்கும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை சந்திக்கவும் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் எதைப்பற்றியும் கவலையோ, அச்சமோ இருக்காது.


அந்நியபாஷை

கேள்வி:AOG சபை பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் அந்நியபாஷையைப்பற்றி எழுதிய ஒரு பாகத்தை போட்டோ காப்பி எடுத்து உங்களுக்கு அனுப்புகிறேன். அப்போதாவது பரிசுத்த ஆவி என்பதும் அந்நியபாஷை என்பதும் உண்டென்று ஒத்துக்கொள்கிறீர்களா என்று அறிய விரும்புகிறேன்.

பதில்:எப்போது நான் பரிசுத்த ஆவியானவரை இல்லை என்று மறுதலித்திருக்கிறேன்?. பரிசுத்த ஆவியானவரை நான் பெற்றுக்கொண்டதால் அல்லவா இந்த போலி அந்நியபாஷைக்காரர்களை நான் அடையாளம் காணமுடிந்தது. ஆவியை பகுத்தறியும் கிருபையும் கிடைத்தது. அதன்பிறகுதான் மிக தைரியமாக போலி அந்நியபாஷைக்காரர்களைப்பற்றி பகிரங்கமாக எழுத ஆரம்பித்தேன்.

நீங்கள் குறிப்பிட்ட AOG பாஸ்டரும், முன்னாள் AOG பிஷப் அவர்களுமாகிய பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் என் இனிய நண்பராவார். அவர் அற்புதமாக பிரசங்கிக்கும் தாலந்து பெற்றவர். அந்த காலத்தில் அவர் எக்ளிசியா என்ற பெயரில் பத்திரிக்கை நடத்திக்கொண்டிருந்தார். அந்த பத்திரிக்கை எனக்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது அவர் அந்த பத்திரிக்கையை நிறுத்திவிட்டார் என்று நினைக்கிறேன். நீங்கள் அனுப்பிய போட்டோ காப்பியும் அதிலிருந்துதான் நீங்கள் எடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். பாஸ்டர்.ராஜாமணி அவர்களுக்கு AOG சபையில் விசுவாசிகள் பேசுவதாக கூறப்படும் அந்நியபாஷை ஒரு பாஷை அல்ல என்பதை அவர் மிக நன்றாக அறிவார். ஆனால் அவர் சார்ந்த AOG சபையின் அடிப்படை சட்டம் அவரை உண்மை பேச தடுக்கிறது. அந்த சட்டத்தில் ஒருவன் அந்நியபாஷை பேசினால்தான் அவனுக்கு பரிசுத்தாவி உண்டு என்று எழுதியிருப்பதால் அந்த சட்டத்துக்கு ஏற்ப இவரும் நடந்துதானே ஆகவேண்டும். இவர் மட்டுமல்ல, அந்த சபையில் உள்ள அனைவரும் பாஷை என்ற பெயரில் ஏதாவது பேசியாகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் ஒரு வக்கீலைப்போன்று பேசும் வாதத்திறமை பெற்றவர். ஆனாலும் அந்நியபாஷை விஷயத்தில் அவரால் அனுபவங்களைத்தான் உதாரணமாக காட்டமுடிந்ததே தவிர, வசன ஆதாரத்தோடு அவரால் அந்நியபாஷையைக்குறித்து விளக்க முடியவில்லை!. தன் வாத திறமையால் அந்நியபாஷையை முக்கியப்படுத்த அவர் முயற்சித்தார் என்பதற்கு நீங்கள் அனுப்பிய அவரின் புத்தகத்திலிருந்தே ஒரு பகுதியை நீங்கள் அறிந்துக்கொள்ள இங்கு குறிப்பிடுகிறேன். 1 கொரிந்தியரில் 9 வரங்களைப்பற்றி அவர் குறிப்பிட்டு எழுதும்போது அந்த 9 வரத்தையும் ஒரு ஏணிக்கு ஒப்பிட்டு உதராணமாக்கி எழுதுகிறார். இந்த ஏணிக்கு 9 படிகள் இருக்கிறது. ஒன்று, இரண்டு என்று வரிசைப்படுத்தி கூறிவிட்டு பவுல் கடைசியாக கூறும் அந்நியபாஷையின் வரத்தை இவர் தன் வாத திறமையாக நினைத்துக்கொண்டு தான் கடைசியாக கூறிய அந்த அந்நியபாஷை வரத்தை முதல்படியாக இவர் வர்ணிக்கிறார். முதல்படியில் கால் வைத்தால்தான் நீ மேலே உள்ள மற்ற அனுபவங்களை பெறமுடியும் என்று எழுதி மக்களை நம்ப வைக்க அவ்வளவு ஞானமாய் அந்த ஏணி உதாரணத்தை பயன்படுத்தியிருக்கிறார். இதை வாசிக்கும் நீங்கள் பவுல் கூறிய 9 வரங்களில் கடைசியாக கூறப்பட்ட அந்நிய பாஷை வரத்தை முதலாவதாக ஏற்றுக்கொள்வீர்களா?

இந்த அந்நியபாஷையை உறுதிப்படுத்த ஏணி உதாரணத்தை யாராவது கூறுவார்களா? வரங்களில் கடைசியாக வேதம் குறிப்பிடப்பட்ட அந்நியபாஷையை முன்னிலைப்படுத்த ஏணியை உதாரணமாக்கி அந்நியபாஷையை முதல்படி ஆக்கிவிட்டார்கள். இதுதான் தவறான வாதத்திறமை ஆகும். வரம் வேறு, அடையாளம் வேறு என்பதை இவரால் மறுக்கமுடியாது. இதைத்தான் நான் வக்கீல்களின் வாதத்திறமை என்று குறிப்பிட்டேன்.

பாஸ்டர்.ராஜாமணியானாலும் வேறு யாராக இருந்தாலும் எத்தனை திறமையாக வாதாடினாலும் பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்கு அந்நியபாஷை அடையாளம் அல்ல - அது வேத புத்தகம் எழுதப்படாத காலத்துக்குமுன் இருந்த புதிய ஏற்பாட்டு சபைக்கு அந்நியபாஷை வரமாக கொடுக்கப்பட்டது. அடையாளமாக கொடுக்கப்பட்டது அல்ல. வரத்துக்கும் - அடையாளத்துக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் விளங்கிக்கொண்டால் உங்களுக்கு நிச்சயம் தெளிவு ஏற்படும்.

உங்கள் கடிதத்தில் நீங்கள் கர்த்தர் எங்களை பேச வைத்ததால்தான் நாங்கள் அந்நியபாஷை பேசுகிறோம். அதனால் அதற்கு அர்த்தம் தெரிவிக்கவேண்டியதில்லை என்று 1 கொரி 14:2ஐ குறிப்பிட்டுள்ளீர்கள்.

கர்த்தர் உங்களை அந்நியபாஷையில் பேசவைத்தார் என்று நீங்கள் எழுதியதற்காக நான் வேதத்திலிருந்து ஒரு உதாரணம் கூறுகிறேன்.

எண்ணாகமம் 22ம் அதிகாரத்தில் ஒரு கழுதை மூலமாக கர்த்தர் ஊழியக்காரனை எச்சரித்ததை வாசித்திருக்கிறீர்களா? எண் 22:28ல் கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார். கழுதை ஊழியக்காரனோடு சத்தமாகவே தெளிவாகவே பேசுகிறது. கழுதையை கர்த்தர் மனுஷபாஷையில் பேச வைத்தார். ஊழியக்காரனும் மனுஷ பாஷையில் அந்த கழுதையுடன் பேசினான் என்று எழுதப்பட்டிருக்கிறது. கழுதைக்கு மனிதபாஷை என்பது அதற்கு அந்நியபாஷை ஆகும். மனிதனை விளங்க வைக்க எச்சரிக்க கர்த்தர் கழுதையையே அந்நிய பாஷையில் பேச வைத்தார். அது மனிதனுக்கு விளங்கினது.

இப்படி தேவன் எத்தனை அழகாக அப்போஸ்தலர் 2:4ல் மனிதனுடன், மனிதன் விளங்கிக்கொள்ளத்தக்கதான அவனுடைய பாஷையிலேயே பேசும்போது, யாருக்கும் விளங்காத க்ரபலா... சுக்ரபலா... தோ.... தோ..... தோ... என்றெல்லாம் மனிதனை பைத்தியக்காரனைப்போல் உளறவைப்பாரா?.

ஒரு கழுதை மனிதனோடு பேசும்போது அவன் விளங்கிக்கொள்ளதக்கதாக மனித மொழியில் பேசும்போது, இன்றைய பெந்தேகோஸ்தே சபை மக்கள் வேதம் என்ன போதிக்கிறது என்பதை யோசிக்ககூடாதா?. இவர்கள் கழுதையிடாமாவது போய் கழுதையின் அந்நியபாஷையான மனிதபாஷையை, மனிதர்களான நாம் எப்படி பேசுவது என்று கழுதையிடம் கற்றுக்கொள்வார்களாக என்று ஆலோசனை கூற தோன்றுகிறது.

இனியாவது பரிசுத்தாவியானவரின் நிறைவுக்கு அந்நியபாஷைதான் அடையாளம் என்ற சபையின் அடிப்படை சட்டத்தை மறுபரிசீலனை செய்வார்களாக.


விழிப்புணர்வு

கேள்வி:நாங்கள் பல வருடமாக ஜாமக்காரன் வாசக குடும்பத்தை சேர்ந்தவர்கள். உங்கள் ஜாமக்காரன் வாசிக்க தொடங்கியபின்தான் பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. பல ஊழியர்கள் உண்மையில்லாதவர்கள் என்பதை உணர முடிந்தது. அதற்கு உங்கள் ஜாமக்காரன் அளித்த விழிப்புணர்வு செய்திகள்தான் காரணம் என்றாலும் உங்களுடைய சில கருத்துக்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே ஏன்?

பதில்:உண்மைதான். நானும் மனிதன்தானே என் கருத்து எல்லாம் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்ப்பது தவறு.

எனவே நீங்களே வேதத்தையும் நான் எழுதியதையும் வாசித்து உங்கள் ஆத்துமாவுக்கு சரியாகப்படுகிறதை வசனத்தோடு ஒப்பிட்டு பார்த்து உறுதிப்படுத்தி, நான் எழுதியதில் பிழையான கருத்துக்கள் இருந்தால் அதை கைக்கொள்ளாமல் அதை தவிர்த்து விடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் ஆத்துமாவுக்கும் நல்லது. இந்த ஜாக்கிரதை உணர்வு உங்களுக்கு ஏற்பட்டுள்ளதை நினைத்து பெருமைப்பாரட்டுகிறேன்.


உங்கள் மகளுக்கு இப்படி நேர்ந்தால்

கேள்வி:விவாகரத்துப்பற்றி ஆகஸ்ட் மாத ஜாமக்காரனில் 18ம் பக்கம் எழுதியுள்ள அந்த வாலிப பெண் விவாகரத்து செய்யப்பட்டது அவள்மேல் குற்றம் இல்லை என்பது தெரிகிறது. ஆனால் அவளுக்கு மறுவாழ்க்கையில்லையா? அவள் புருஷன் உயிரோடு இருக்கும் வரை அவள் மறுவிவாகம் செய்யக்கூடாதா? அந்த வாலிபப்பெணணாகிய அவளுக்கு மனிதாபமானத்துடன், மனிதநேயத்துடன் நீங்கள் ஏன் ஆலோசனை அவளுக்கு எழுதவில்லை. அவள் அப்படியே மனம்வெந்து சாகவேண்டியதுதானா? கிறிஸ்துவின் மனஉருக்கம், இரக்கம், அவளுக்கு இல்லையா?. அவளுக்கு நீங்கள் பதில் அளிக்காமல் அவள் கடிதத்தை அவள் ஆதங்கத்தை மட்டும் அவள் எழுதிய கடிதம்மூலம் அறிவித்துள்ளீர்கள்.

வேத சட்டப்படி புருஷன் உயிரோடு இருக்கும்வரை அவள் திருமணம் செய்யக்கூடாது என்றால், புருஷனை அவள் கொலை செய்துவிட்டு அவள் வேறு திருமணம் செய்துகொள்ள வழி உண்டாக்குவதுபோல் இருக்கிறது. நீங்கள் ஜாமக்காரனில் எழுதியதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண் அல்லது ஒரு ஆண் விவாகரத்து செய்தவராக இருக்கிறார்கள். இதற்கு உங்கள் பதிலை நாங்கள் யாவரும் ஆவலாக எதிர்ப்பார்க்கிறோம்.

பதில்:விவாகரத்து விவகாரம் இத்தனைப் பெரிய மலைப்போன்ற பிரச்சனையாக எழும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. எத்தனை கடிதங்கள், எத்தனை இ-மெயில்கள் எத்தனை எத்தனை வாலிப பெண்களின் கண்ணீரோடு கூடிய தொலைபேசி செய்திகள் எனக்கு வந்தது தெரியுமா!- அப்பப்பா கேள்விகள் கேட்டு என்னை நிலைகுலைய வைத்துவிட்டார்கள். இரவெல்லாம் எனக்கு இதே யோசனையாக இருந்தது.

மற்றொருவர் எனக்கு எழுதிய கடிதத்தில் உங்கள் மகளுக்கு இப்படி நேர்ந்தால் உங்கள் மருமகனை கொன்றுவிட்டு வேதசட்டப்படி மகளுக்கு மறுமணம் செய்து வைப்பீர்களா? என்றது என்னை குலுக்கிவிட்டது. எழுதியவரின் மனவேதனை உள்ளத்தின் ஆதங்கம் எனக்கு புரிகிறது.

அன்பானவர்களே!, கிறிஸ்தவ வாழ்க்கை நம் இஷ்டம்போல் வாழும் வாழ்க்கை அல்ல. மன இரக்கம், மனிதநேயம், மனிதாபிமானம் இவைகளுக்கு உலக நீதிமன்ற சட்டத்திலேயே இடம் இல்லையே!.

டெல்லி மாநகரில் ஒரு பெண் நிருபரை நான்கு பேர் கொடூரமாக கற்பழித்தார்கள். வேறு ஒரு இடத்தில் ஒரு பெண்ணை கற்பழித்து கொன்றுபோட்டார்கள். குற்றவாளிகள் அகப்பட்டார்கள். குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள். அதில் ஒருவன் என்னை தூக்கில் போடுங்கள் என்று கத்திக்கொண்டிருக்கிறான். அதற்குள் இவர்களில் 18 வயதுக்கு கீழ்உள்ள சிறுவனும் கற்பழித்த குற்றவாளியாவான். அவனுக்கு தூக்கு தண்டனையில்லை. சீர்திருத்தப்பள்ளியில் 3 வருடம் இருக்கவேண்டும். இதுதான் தீர்ப்பு. பெண்கள் சங்கம் மற்ற சங்கங்கள் யாவும் அவனுக்கு தூக்கு தண்டனைத்தான் கொடுத்தாக வேண்டும் என்று ஊர்வலம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவி. திருமதி.சுஷ்மா சிவராஜ் அவர்களும் மரணதண்டனைத்தான் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கூறுவது என்னவென்றால் குற்றத்துக்கு என்ன தண்டனை என்று சட்டப்புத்தகம், நீதிமன்ற சட்டம் ஆகிய இவைகளில் எழுதியுள்ளபடிதான் தீர்ப்பு கூறமுடியுமே தவிர மக்களின் அபிப்ராயமோ, எதிர்கட்சி தலைவி பரிந்துரையோ செயல்படுத்த இயலாது. நீதிபதி நினைத்தால் குற்றத்தின் தன்மையை, குற்றவாளிகளின் நிலைமையை அறிந்து அவர்களின் தண்டனையை குறைக்கமுடியும். சில சலுகைக் காட்டமுடியும். ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் தண்டனையை நீதிபதி சட்டத்துக்கு மீறி கூட்டமுடியாது என்கிறார்.

18 வயதுக்கு கீழே உள்ளவன் கொலை செய்திருந்தாலும் மற்றவர்களுக்கு கொடுக்கும் தண்டனை கொடுக்கமுடியாதே! சிறுவன் செய்த கொலைக்கு சட்டம் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்குதான் அனுப்பவேண்டும் என்று கூறுகிறதே!. ஆகவே மக்களின் இஷ்டப்படி தீர்ப்பு வழங்ககூடாது. அதற்கு பார்லிமெண்ட் கூடி சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும. ஜனாதிபதிக்குக்கூட தண்டனை குறைக்க தனி அதிகாரம் உண்டு. அதன்மூலம்கூட தண்டனையை குறைக்கத்தான் அவர் பரிந்துரைக்க முடியும். உலக சட்டமே இப்படியிருக்க நம் வேத புத்தகசட்டம் உலகசட்டத்துக்கு முற்றிலும் மாறானது. நம் இஷ்டப்படி கிறிஸ்தவ வாழ்க்கை வாழமுடியாது.

ஜாமக்காரனில் என் பதில்கள் எல்லாம் வேத வசனத்தின்படி மனந்திரும்பின அனுபவம் உள்ள கிறிஸ்தவ விசுவாசிகளுக்குத்தான் பொருந்தும். சம்பந்தப்பட்ட பெண்ணோ, ஆணோ மனந்திரும்பி வசனத்தின்படி வாழ விரும்பினால்மட்டுமே என் ஆலோசனை அவர்களுக்கு பொருந்தும். சிஎஸ்ஐ, லூத்தரன் சட்டம் பெந்தேகோஸ்தே சபை சட்டம் என்று எதுவும் பரலோகத்தில் நியாயதீர்ப்பில் செல்லாது.

என் வசனத்துக்கு பயப்படுகிறவனையே நோக்கிப் பார்ப்பேன் சங்.143:10ல் தாவீது கர்த்தாவே உம்மை பிரியப்படுத்த என்னை போதித்தருளும் என்றான். நம் தேவனுக்கு எது பிரியமோ அதன்படி நடப்பது கீழ்படிவதுதான் தேவன் எதிர்ப்பார்ப்பதாகும். ஆக இப்படிப்பட்ட விவாகரத்து பிரச்சனையில் இங்கு மனிதாபமானத்துக்கும், மனித நேயத்துக்கும் இடம் இல்லை.

இப்படிப்பட்ட திருமண பிரச்சனைகளில் அகப்பட்ட நபர்கள் மனந்திரும்பினவர்களா என்பதுதான் முதலில் அறியப்படவேண்டியது. மனந்திரும்பின அனுபவம் உள்ளவர்களாக இருந்திருந்திருந்தால் தனக்கு வரும் மனைவி, கணவன் மனந்திரும்பினவனாக இருக்கவேண்டும் என்பதில்தான் அவர்கள் பிடிவாதமாக இருப்பார்கள். நான் தேவனை சந்தோஷப்படுத்தவேண்டும். என் பெற்றோரை அல்ல, மேலும் என்னை சந்தோஷப்படுத்தவும் அல்ல, என் இஷ்டம் அல்ல என்னை ஆட்கொண்ட என் பாவத்தை மன்னித்தவரின் சித்தமே என் பாக்கியம் என்று ஜெபித்து காத்திருந்து பெற்றோரிடம் திருமண விஷயத்தில் உங்கள் ஆவிக்குரிய எதிர்பார்ப்பை உறுதியாக கூறி, கர்த்தரின் நடத்திப்புக்காக காத்திருக்கவேண்டும். திருமணத்துக்காக பெண்கேட்டு மாப்பிள்ளை கேட்டு பலர் வரலாம். நமக்கு முகம், படிப்பு, குடும்பத்தின் சூழ்நிலை ஆகியவைகளை நம் கண்ணால்தான் பார்க்கமுடியுமே, தவிர யாருடைய இருதயத்தையும் பார்க்கமுடியாதே!, எத்தனை மாதம் ஒருவரோடு பழகினாலும் உள்ளத்தின் ஆழத்தை அறிய முடியாதே, மனிதனின் உள்ளத்தை அறிகிறவர் கர்த்தர் ஒருவர் மட்டுமே!. ஆகவே சகல பாரத்தையும் இயேசுகிறிஸ்துவின்மேல் போட்டுவிட்டு அவரையே நம்பி செயல்படவேண்டும். கர்த்தர் தன்னை நம்பினவர்களுக்கு ஒரு காலும் துரோகம் செய்யமாட்டார். ஏமாற்றவோ நம்பிக்கை துரோகம் செய்யவோ அவர் மனிதரல்ல. எனக்கு தெரிந்து இப்படிப்பட்ட விசுவாசத்துடன் கர்த்தரையே நம்பின யாரும் எந்த குடும்பமும் கெட்டதில்லை.

என்னிடம் திருமண பிரச்சனையில் தொடர்புக்கொண்டவரெல்லாம் இரட்சிக்கப்பட்டேன் என்று பொதுவாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையான மனந்திரும்புதலின் அனுபவம் அவர்கள் உள்ளத்தில், எதிர்ப்பார்ப்பில், அவர்களின் கிரியையில், அவர்கள் திருமண விஷயத்தில் எடுக்கும் தீர்மானத்தில் நிச்சயம் காணப்படும். கர்த்தரை நம்பி மோசம் போனதாக சரித்திரம் இல்லை.

விவாகரத்தில் புருஷன் மேல் தவறா! - மனைவிமேல் தவறா! என்பது அவரவர்களுக்குதான் தெரியும். தெரிந்தெடுப்பு சரியில்லாததாலும், குடும்ப விவரங்களைக்குறித்து சரியாக விசாரிக்காததாலும் ஜெபத்தில் காத்திருக்காமல் பணத்தின் அடிப்படையில், ஜாதியின் அடிப்படையில், வயது முதிர்ந்து காலம் தாழ்ந்தநிலையில் அவசரமாக நடத்தப்படும் திருமணங்களின் முடிவு பிரச்சனையில்தான் முடிகிறது.

நான் ஜாமக்காரனில் எழுதிய சம்பவத்தில் அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு திருமணம் நடந்த முதல்நாள் முதல் இரவு அந்த பெண்ணுக்கு பெருத்த ஏமாற்றம். புருஷனும் தன் சரீர பலவீனத்தை புது மனைவியான அந்த பெண்ணிடம் ஒத்துக்கொண்டு, என் பெற்றோரின் கட்டாயத்தினால் உன்னை ஏமாற்றி விட்டேன். எனக்கு ஆண்தன்மை கிடையாது. நானே விவாகரத்து எழுதி கொடுக்கிறேன். நீ தாராளமாக வேறு திருமணம் செய்துகொள் என்கிறார். இதுதான் முதல்இரவே அவர்களுக்குள் ஏற்பட்ட சம்பாஷணையாகும். இப்படித்தான் கடிதம் எழுதிய அந்த பெண்ணைப்போல பல பெண்களின் நிலைமை அமைந்திருக்கிறது. பையனின் பெற்றோருக்கு தன் மகனின் நிலை மிக நன்றாக தெரியும். திருமணமானால் சரியாகிவிடும் என்று டாக்டர்கள் கூறினார்கள் என்று பையனின் பெற்றோர் பெரிய பொய்யை கூறுகிறார்கள். முறைப்படி பட்டம் பெற்ற எந்த ஒரு டாக்டரும் அப்படி கூறியிருக்கமுடியாது. அப்படி கூறியிருந்தால் அவர் சரியாக படித்த டாக்டராக இருக்கமுடியாது!. இப்படிப்பட்ட மனவேதனையுள்ள ஒரு பெண்ணின் வாழ்க்கையை அநியாயமாக பாழடித்த கொடுமையை செய்யும் பெற்றோர் இப்போது மிக ஏராளமாக இருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் புருஷன் கூறுகிறான். உலகுக்கு நீ எனக்கு மனைவியாக இரு. பெற்றோர் கூறுவது அந்த பெண்ணிடம் உலகுக்கு நீ எங்களுக்கு மருமகளாக இரு. ஆனால் உன் மன விருப்பப்படி எந்த ஆணோடும் பழகி உன் சரீர சந்தோஷத்தை தனித்துக்கொள். ஆனால் குழந்தையைமட்டும் பெற்றுக் கொள்ளாமல் எங்கள் குடும்ப கௌரவத்தை காப்பாற்று என்று பெண்ணின் காலை பிடித்து அழுத மானங்கெட்ட மிகப்பெரிய பணக்கார குடும்பம், ஊரில் பெருமைவாய்ந்த குடும்பம் எத்தனை பேர் வாழ்கிறார்கள் தெரியுமா?. அந்த பெண் திருமணத்துக்குமுன் தன்னை எந்த ஆணும் தொடாதபடி யாருக்கும் தன் மனதை கொடுக்காதபடி பரிசுத்தமாக வாழ்ந்து எனக்கும் ஒரு வாழ்க்கைவரும் அதுவரை நான் என் உணர்ச்சிகளை ஒடுக்கி வாழ்வேன் என்று நல்ல கணவனுக்காக ஏங்கி காத்திருந்த பெண் பிள்ளைகள் மிக ஏராளம். அப்படிப்பட்ட பெண் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் தாங்கள் எதிர்ப்பார்த்த வாழ்க்கை திருமணத்தில் அமையாமல் விதவைகளைபோல் வாழ்வது என்ன கொடுமை!. என்ன நியாயம்? திருமணம் என்பது என்ன பொம்மை கல்யாணமா?. இப்படி ஏமாற்றப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களில் பலரை எனக்கு தெரியும். அவர்கள் விவாகரத்து செய்யாமல், எனக்கு கர்த்தர் அனுமதித்தது இவ்வளவுதான் என்றும், இனி வேறு ஒரு திருமணம் எனக்கு வேண்டாம் என்றும் கணவனை பிரிந்து தன் தாய்வீட்டுக்கு சென்று என் பெற்றோருக்கு மறுபடியும் நான் பாரமாக இருக்க விரும்பவில்லை. அதனால் என் சரீர உணர்ச்சிகளை கட்டுப்படுத்த மாத்திரம் மாத்திரை தாருங்கள் என்று கேட்டு வந்த பெண்கள் ஏராளம். இப்படிப்பட்ட பெண்கள் இரவில் சரீரத்தில் அனுபவிக்கும் சித்திரவதை கணவனும் அறியான், மாமியார், மாமனாரும் அறியார்கள். எத்தனை கொடுமை இது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் எந்த தவறும் செய்துவிடகூடாதே என்றும், பாவம் செய்து என் ஆண்டவரை வேதனைப் படுத்திவிடகூடாதே என்றும் கலங்கி துடித்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு பட்ட மரம்போல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். அவர்களில் பலர் தனிமையை தவிர்க்க சபை ஊழியங்களில், தனித்தாள் ஊழியங்களில், மிஷனரி பணிகளில் இப்போது செயல்பட்டு எண்ணங்களை திசைதிருப்பி கர்த்தருக்கென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கறைப்படாத பரிசுத்தவாட்டிகள் பலரையும் நான் அறிவேன்.

மேலே உள்ள கேள்வியை கேட்டவர் எழுதினார். உங்கள் மகள் விவாகரத்துபெற்றால் அவள் மீண்டும் மறுவிவாகம் செய்ய, உயிரோடு இருக்கும் மருமகனை கொன்றுவிட்டு வேத வசனத்தின்படி மகளுக்கு மறுவிவாகம் செய்வீர்களா? என்றார். கேள்விகேட்டவர் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டவராக இருந்திருந்தால் இப்படிப்பட்ட கேள்வி அவர் உள்ளத்தில் எழுந்திருக்காது!.

பிள்ளைகளை இரட்சிப்புக்கு நேராகவளர்த்தி, பெற்றோர்களும் வசனத்துக்கு பயந்து சாட்சியுடன் வாழ்ந்து வரதட்சணை கேட்காமல், நகைகள் கட்டாயப்படுத்தாமல், நல்ல ஆவிக்குரிய வாழ்க்கையை தன் பிள்ளைகளுக்கு ஜெபத்தோடு அமைத்துக்கொடுக்கும் நல்ல பெற்றோர்கள்தான், தேவனுக்கும், வசனத்துக்கும் பயந்தவர்களாவர். அவர்கள் அந்தஸ்து, கௌரவம் ஒன்றும் பார்க்கமாட்டார்கள். மாப்பிள்ளையின் அல்லது பெண்ணின் பெற்றோர் ஜெபிக்கிறவர்களா இரட்சிக்கப்பட்டவர்களா என்றுதான் முக்கியமாக கவனிப்பார்கள்.

என் மகளும்-மருமகனும் மனம்திரும்பி இரட்சிக்கப்பட்டவர்கள் இருவரும் ஆத்தும ஆதாயம் செய்யும் ஊழியர்கள். கேள்வி கேட்டவர் எழுதியதுபோன்ற அந்த இக்கட்டான சந்தர்ப்பம் உண்டாக வழியில்லை. அப்படியே ஒரு சம்பவத்தை தேவன் அனுமதித்தாலும் அதை வசனத்தின்படி எப்படி எதிர்கொள்வது என்பதை மிக நன்றாக அறிவார்கள். இது எங்கள் குடும்பத்தில் தேவன் அளித்த மிகப்பெரிய கிருபையும் ஆசீர்வாதமாகும்.

2013 ஆகஸ்ட் மாத ஜாமக்காரனில் 18ம் பக்கம் விவாகரத்துபெற்ற ஒரு பெண்ணின் ஆதங்க கடிதம் வாசித்தீர்களே, அந்த பெண்ணின் வாழ்க்கையில் நடந்தது இதுதான். அந்த பெண் வாலிப வயதுள்ளவளாக இருந்தாள். அவள் திருமணமாகி முதல்நாளிலேயே கணவன் ஆண்தன்மை அற்றவர், இனி வைத்தியம் மூலமாகவும் ஆண்தன்மை உண்டாக வழியில்லை என்பதை டாக்டர்கள் உறுதி செய்ததால், புருஷனின் அனுமதியுடன் அந்த பெண்ணின் விவாகரத்து நடந்தது. இப்போது அந்த பெண்ணின் பரிதாபமான அவளின் வாலிப வாழ்க்கையில் வேத சட்டப்படியல்ல. மனித நேயத்தின்படி, மனிதாபிமானத்துடன் இவளின் இரண்டாம் திருமணத்தை ஆலயத்தில் வைத்து நடத்த நம் வேதம் அனுமதிக்காததால், அரசாங்க ரிஜிஸ்டர் திருமணம் செய்துவைக்க இவரது பெற்றோர் முன் வரலாம். வரதட்சணை வாங்காத மனந்திரும்பின அனுபவத்தோடுள்ள, முதல் திருமணத்தில் ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணை வாழவைக்கும் நோக்கத்துடன் எந்த வாலிபனாவது, பெற்றோராவது முன்வந்தால் அவள் திருமணம் செய்துகொள்வதில் மனிதாபிமான அடிப்படையில் பிழை ஏதும் இல்லை. ஆனால் அவளோ - அவனோ சபையில் எந்த பொறுப்பும் பதவியும் வகிக்காமல் அதேசமயம் அவர்கள் தனித்தாள் ஊழியம் செய்து, மிஷனிரி ஜெப கூட்டங்களை நடத்தி ஆவிக்குரிய சந்தோஷத்துடன் குற்ற உணர்வு இல்லாமல் வாழலாம். இரண்டாம் திருமணத்துக்கு முன் முதல் திருமணத்தின் விவரத்தை தன்னை இரண்டாம் திருமணம் செய்ய முன்வந்தவரிடம் மறைக்காமல்கூறி அவள் கூறியதை நம்பி ஏற்றுக்கொள்கிறவரை இவள் தாரளமாக இரண்டாம் திருமணம் செய்யலாம். திருமணத்துக்குபின் இவள்மனதில் தான் செய்த இரண்டாம் திருமணத்தின் நோக்கத்தில் அதன் உண்மையான காரணத்தில் குற்ற மனசாட்சியில்லாவிட்டால் அவர்கள் திருவிருந்து எடுப்பதிலும் தவறில்லை. திருமணமாகி ஒரேநாளில் பிரிந்த அந்த தவிர்க்கமுடியாத காரணத்தின் அடிப்படையிருந்தால் மட்டுமே நான் கூறும் இந்த ஆலோசனை பொருந்தும். மற்ற எந்த காரணத்தாலும் விவாகரத்து செய்தவர்களுக்கு இந்த என் ஆலோசனை பொருந்தாது. திருமணமாகி 6 மாதம் அல்லது ஒரு வருடம் இருவரும் குடும்பம் நடத்தி வேறு எந்த காரணத்தினாலும் விவாகரத்து செய்தவர்களானாலும் இந்த ஆலோசனை பொருந்தாது.

ஒருவேளை குடும்ப வாழ்க்கைக்கு தகுதியில்லாத கணவன் என்று அறிந்தும் ஒரு பெண் தனக்கு இனி வேறு திருமணம் எனக்கு வேண்டாம். அவரோடுதான் வாழ்வேன். எனக்கு தேவன் அனுமதித்தது இவ்வளவுதான். உள்ளதுபோதும் என்ற எண்ணத்துடன் மரணம்வரை ஒரே கணவனோடு வாழவேண்டும் என்று ஒரு பெண் தீர்மானித்தால் எனக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை இவ்வளவுதான் என்று எல்லா சரீர உணர்ச்சிகளையும் தாங்கிக்கொண்டும் ஒரே கணவனோடு எல்லா ஏமாற்றத்தையும் சகித்துக்கொண்டு வாழவேண்டும். இப்படிப்பட்டவர்கள் தனக்கு கெட்டபெயர் உண்டாகாமலும், புருஷன் தன்னை எந்த விதத்திலும் சந்தேகிக்காதபடி வாழ கர்த்தர் அவளுக்கு பெலன் தருவார். தாம்பத்திய உறவுமட்டும்தான் குடும்ப வாழ்க்கை என்பது இல்லை என்ற உணர்வு இப்படிப்பட்டவர்களுக்கு கர்த்தர் அருளுவார்.


வித்தியாசமான திருமண பிரச்சனைகள்:

நான் பேசும் கன்வென்ஷன் கூட்டங்களில் சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை தனிப்பட்ட ஆலோசனைக்கு ஜெபத்துக்கு வருவோர் எண்ணிக்கை மிக அதிகம். இதில் கன்வென்ஷனைவிட இப்படிப்பட்ட ஆலோசனை நேரத்தில் மனந்திரும்பியவர்கள், பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்தது, குடும்ப வாழ்க்கையில் பிரிய நினைத்தவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்ந்த சம்பவங்கள், சாட்சிகள் ஏராளம். இப்படிப்பட்டதான ஜெபநேரத்தில் சுகம் பெற்றவர்கள் எண்ணிக்கையும் ஏராளம்.


திருமண பிரச்சனைகள் பலவிதம்:

ஒரு குடும்பத்தினர் என்னை சந்தித்தார்கள். அவர்கள் மனந்திரும்பின அனுபவம் உள்ளவர்கள். CSI சபையை சேர்ந்தவர்கள். மேலும் அவர்கள் பல வருடமாக ஜாமக்காரன் பத்திரிக்கையின் வாசகர்கள் ஆவர். இந்த பெற்றோர் தன் மகளை ஜெபிக்க என்னிடம் அழைத்து வந்தனர். மகள் திருமணமாகி வாழாவெட்டியாக வீட்டில் இருக்கிறாள் என்றும், பட்டப்படிப்பு படித்தவள் என்றும் கூறினார்கள். "மகள் புருஷனைவிட்டு பிரிய காரணம் என்ன? பிரச்சனை என்ன?" என்று கேட்டேன். "தெரியவில்லை!." "காரணம், தெரியாமலா மகள் புருஷனைவிட்டு வீட்டுக்கு வந்தாள்" என்றேன். "ஆமாம். அவளுக்கும் காரணம் தெரியவில்லை!. திருமணமாகி முதல் மாதமே கொடுத்த வரதட்சணையில் ஒரு லட்சம் பாக்கி உண்டு. அதை முழுவதும் வாங்கிவா என்று புருஷன் வீட்டார் கூறி அனுப்பினார்கள். எப்படியோ கல்யாண கடனோடு மேலும் கடன் வாங்கி ஒரு லட்ச ரூபாயை கொடுத்து மகளை புருஷனிடம் கொண்டுபோய்விட்டோம். சுமார் 5 மாதம் கழித்து உன்னை எனக்கு பிடிக்கவில்லை. நீ எனக்கு வேண்டாம் என்று கூறி மறுபடியும் எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அதன்பின் நாங்கள் சபை ஆயரோடும் சில பெரிய மனிதர்களோடும் சேர்ந்து மாப்பிள்ளை வீட்டாருடன் பேசினோம். உங்கள் மகள் திருமண வாழ்க்கைக்கு லாயக்கில்லை ஆகவே எனக்கு அவளை பிடிக்கவில்லை. ஆகவே விவாகரத்துக்கு நானே ஒத்துக்கிழைக்கிறேன் என்று மாப்பிள்ளை கூறிவிட்டார். நாங்களும் திரும்பிவந்துவிட்டோம். மாப்பிள்ளை இரட்சிக்கப்பட்ட விசுவாசி இன்ஜினியர் வேலை செய்கிறார். ஜெபிப்பவர். மாப்பிள்ளையின் பெற்றோரும் இரட்சிக்கப்பட்டவர். பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்தவர். சிஎஸ்ஐயிலும் அவர்கள் அங்கத்தினராக இருக்கிறார்கள்" என்றார்கள். மேலும் "அவர்களும் உங்கள் ஜாமக்காரன் வாசகர்கள்தான்" என்றார்கள். நான் அந்த பெற்றோரிடம் "உங்கள் மகளோடு தனியாக பேசவேண்டும்" என்றேன். மகள் மட்டும் என் முன்னே அமர்ந்திருந்தாள். "உங்கள் கணவர் உங்களை வெறுக்க காரணம் என்ன?" என்று அவளிடம் கேட்டேன். தெரியாது என்றாள்!.

"காரணம் இல்லாமலா அவர் உங்களை வீட்டுக்கு அனுப்பினார்", "ஆமாம்!. எதற்காக என்னை வெறுக்கிறார் என்றே எனக்கு தெரியாது. முதலில் கல்யாணத்துக்கு ரொக்கபணம் கொடுத்ததில் ஒரு லட்சம் பாக்கி அதை வாங்கி வா, நான் பிஸனஸ் தொடங்கப்போகிறேன் என்றார். என் மாமியார் என்னை மிகவும் நேசித்தார். மாமியார் தன் மகனிடம் உன் மாமானார் ஒரு லட்சரூபாயை அடுத்த மாதமே கொடுப்பதாக சொன்னாரே, ஏன் பெண்ணை இப்பவே துரத்துகிறாய், உன் போக்கு சரியில்லை என்று என் மாமியார் என் கணவரிடம் கோபத்தோடு பேசினார். என்றாலும் என்னை கூட்டி வந்து என் வீட்டில் விட்டுவிட்டார். என் பெற்றோர் பெரும்பாடுபட்டு நான்கு நாட்களில் அதிக வட்டிக்கு பணம் வாங்கி என்னை கொண்டுபோய் என் கணவன் வீட்டில் விட்டார்கள். அதன் பின்னும் அவர் என்னுடன் படுக்கவில்லை. தனியாகவே படுத்துக் கொண்டார். இரண்டு மாதங்கள் கடந்தன. கல்யாணம் ஆன முதல்நாள் நாங்கள் சந்தோஷத்தோடுதான் இருவரும் ஜெபித்தோம். அதன்பின் ஒருநாளும் அவர் ஜெபிக்க வருவதில்லை.

ஒருநாள் என் மாமியார் இல்லாதபோது என் உடைகளை எடுத்துக்கொள்ள சொன்னார். எனக்கு உன்னை பிடிக்கவில்லை. நீ உன் வீட்டுக்கு போகலாம். நான் உன் தகப்பனிடம் வாங்கின ரொக்கத்தை இரண்டு மாதத்தில் உன் வீட்டுக்கு கொண்டுவந்து சேர்ப்பேன். உன் நகைகளையும் இங்கு வைக்காதே இப்போதே எடுத்துக்கொள் என்றார். நான் அழுதேன். அவர் என் முகத்தை பார்க்கவில்லை. அன்று என்னை கொண்டுவந்து என் வீட்டில் விட்டுவிட்டார். அதன்பின் என்னை கூட்டி செல்லவில்லை. என் பெற்றோர் சென்று விசாரித்தபோது அவளை எனக்கு பிடிக்கவில்லை. குடும்ப வாழ்க்கைக்கு அவள் தகுதியில்லை என்ற வார்த்தையையே திரும்பதிரும்ப என் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். என் கணவரின் பெற்றோர் என் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார்கள். என்னவோ தெரியவில்லை!. என் மகன் வேண்டாம் என்றால் நாங்கள் என்ன செய்வது?, நாங்களும் மகனிடம் எவ்வளவோ ஆலோசனை கூறினோம். அவன் கேட்பதாக இல்லை. எங்களிடமும் அவன் சரியாக பேசுவதில்லை. இப்போதெல்லாம் குடும்ப ஜெபத்துக்கும் வருவதில்லை என்று கூறி எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறி என் மாமனாரும், மாமியாரும் என் கைபிடித்து அழுதார்கள். இது எங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. திருநெல்வேலியில் இப்படி ஒரு நிகழ்ச்சியை மாப்பிள்ளைவீட்டார் மன்னிப்பு கேட்டதை நாங்கள் யாரும் கேள்விப்பட்டதேயில்லை" என்றாள்.

கடைசி கேள்வி: "உங்கள் இருவரின் சரீர உறவு எப்படியிருந்தது?" என்றேன். "திருமணமாகி ஒருநாள் கூட அவர் என்னை தொட்டதில்லை. திருமணமான முதல் இரவுமட்டும் ஒரே ஒருமுறை என்னை தொட்டு இருவரும் ஜெபிப்போம் என்று முழுங்கால் படியிட்டு ஜெபம் தொடங்கும்முன் கூறினார். என் வாழ்க்கையில் ஜெபிக்கும் ஒரு பெண் எனக்கு வேண்டும் என்று நான் கர்த்தரிடம் கேட்டேன். ஜெபக்குழுவை நடத்தும் நல்ல பெண்ணையே கர்த்தர் எனக்கு கொடுத்தார். அழகுள்ள பெண்ணாக இருக்கவேண்டும் என்றேன். அதையும் உன் மூலம் கர்த்தர் நிறைவேற்றினார். அந்த பெண் ஜெபிக்கும் ஆவிக்குரிய குடும்பத்திலிருந்துதான் எனக்கு கிடைக்கவேண்டும் என்றேன். அப்படியே அருமையான ஜெபிக்கும் மாமனார்-மாமியார் எனக்கு தந்தார். என் ஆசையெல்லாம் நிறைவேறியது. நாம் வருடாவருடம் மிஷனரி பணிதளத்துக்கு, வட இந்தியா போய்வருவோம் என்றார். இப்படியெல்லாம் அவர் கூறகூற என் உள்ளம் துதியில் நிரம்பியது. இப்படிப்பட்ட நல்ல கணவரை கர்த்தர் எனக்கு தந்தாரே என்று மனதிற்குள் தேவனைத் துதித்தேன். ஜெபம் முடிந்தது. இருவரும் படுத்தோம். சுமார் அரைமணிநேரம் பேசிக் கொண்டேயிருந்தோம். ஒரு கட்டத்தில் அவர் என்னை நெருங்கும்போது திடீரென்று எனக்கு தலை வலிக்கிறது. இன்று சரீர களைப்பு தீர நாம் நன்றாக உறங்குவோம் என்று கூறி மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டார். இதுதான் முதலும் கடைசியுமான எங்கள் முதல் இரவு அனுபவமாகும். மறுநாளிலிருந்து அவர் என்னிடம் சிரிப்பதில்லை. என்னிடம் பேசுவதை குறைத்துக்கொண்டார். எனக்கு ஏன் என்று கேள்வி அவரிடம் கேட்க பயம். வாழ்க்கையில் ஒரு ஆணோடு தனியாக நெருக்கமாக பேசியது இதுதான் என் முதல் அனுபவம். அதுவும் அந்த அனுபவம் சுமார் அரை மணிநேரம்தான் கிடைத்தது. ஆகவே நானாக ஏதாவது கேட்டால் என்னை சந்தேகப்படுவாரோ என்று பயந்தேன். எங்களுக்குள் மூன்று நாட்களிலேயே இடைவெளி அதிகமானது. இவ்வளவுதான் என் திருமண வாழ்க்கை" என்று கூறி குலுங்கி குலுங்கி அழுதாள்.

"உன் கணவரின் தொலைபேசி எண் தெரியுமா" என்றேன். "என் பெற்றோரிடம் உள்ளது. என் கணவரும் உங்கள் வாசகர்தான் உங்கள் மீது மிகவும் மதிப்பு வைத்திருக்கிறார்" என்றாள். "இன்று உபவாசம் எடுத்து ஜெபி. எல்லாம் நல்லபடியாக முடியும், சோர்ந்துபோகாதே" என்று ஜெபித்து அவளை அனுப்பினேன். அவள் பெற்றோரிடம் "ஞாயிறு கூட்டம் முடிந்தது. நான் சேலம் பயணமாவதற்குள் உங்களோடு தொடர்புக்கொள்வேன்" என்றேன். "கர்த்தருடைய பிள்ளைகளான எங்களுக்கு ஏன் இந்த சோதனை" என்று அவர்களும் மனம்நொந்து கூறியவாறு சென்றனர்.

தொலைபேசியில் அந்த பெண்ணின் புருஷனோடு பேசினேன். "தம்பி உங்களையும் அம்மாவையும் பார்க்கவேண்டும். நான் உங்கள் ஊருக்கு கன்வென்ஷன் வந்திருப்பது தெரியுமா?" என்றேன். "ஆம். டாக்டர்! இன்று உங்கள் கூட்டத்தில் பங்கு கொள்வோம்" என்றனர். உடனே நான் "என் ஜாமக்காரன் வாசகர்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். மதியம் 3 மணிக்கு அம்மா, அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரமுடியுமா?" என்றேன். "நிச்சயமாக வருவேன்" என்றார். அப்படியே நான் தங்கியிருந்த ஆலய கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்தார்கள்.

என்னை சந்தித்தபோது ஜாமக்காரனைப்பற்றி அவர்கள் புகழ்ந்துபேசி "நாங்களே உங்களை நேரில் சந்திக்க நினைத்தோம். ஆனால் கூட்டம் நிறைய இருந்தது என்று மகன் எங்களிடம் சொன்னான்" என்றார்கள். பெற்றோருடன் வைத்து தனியாக ஜெபிப்பதாக கூறினேன். ஆகவே மகன் வெளியில் சென்று அமர்ந்தார். பெற்றோரிடம் விவரம் கேட்டேன். முதலில் மகனின் திருமண வாழ்க்கை உடைந்த விஷயம் எனக்கு தெரியாது என்று நினைத்து அவர்கள் என்னிடம் பேசினார்கள். முடிவாக மகனின் புது வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று கேட்டபோது பெற்றோர் அழுதார்கள்!. அவர்கள் பதிலும் காரணம் தெரியவில்லை. என்றுதான் அமைந்தது. என்ன காரணமாக மகன் அப்படி நடந்துக்கொண்டான் என்று தெரியவில்லை. அவளை எனக்கு பிடிக்கவில்லை கேள்வி கேட்டாதீர்கள் என்று கூறி மேலும் எங்களை கேள்விகேட்காதபடி முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் என்றார்கள்.

அதற்கு பிறகு மகனை தனியாக உள்ளே அழைத்தேன். பெற்றோர் வெளியேறினார்கள். மகனிடம் முதல் கேள்வியாக "என்மேல் உனக்கு நம்பிக்கை உண்டா? தம்பி" என்றேன். "ஆம். நாங்கள் பெந்தேகோஸ்தே சபையினராக இருந்தாலும், உங்களை நாங்கள் உண்மையான ஊழியக்காரராக மதிக்கிறோம்" என்றான். "சரி இங்கு நீயும், நானும் கர்த்தரும் மட்டும் இருக்கிறோம் என்பதை முதலில் நீ புரிந்துக்கொள். இப்போது சொல் உங்கள் திருமண வாழ்க்கையில் என்ன நடந்தது?. ஏன் மனைவியை விலக்கி விவாகரத்துக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்தாய்?, நீ ஒரு விசுவாசியல்லவா, வேதம் அறிந்தவன் அல்லவா!" என்று கூறிக்கொண்டு இருக்கும்போதே சிறுபிள்ளையைபோல அவன் அழுதான். நடந்ததை வெளிப்படையாக பேசினான். "நான் கல்லூரியில் படிக்கும் நாளில் இருந்தே காமவெறி கொண்டவனாக இருந்து ஒரு கட்டத்தில் வேத வசனத்தால் தொடப்பட்டு இரட்சிக்கப்பட்டேன். விபச்சார பாவம் என் வாழ்க்கையில் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் சீக்கிரமாக திருமண ஏற்பாட்டை செய்யும்படி என் பெற்றோரிடம் வேண்டினேன். என் மிஷனரி பாரத்துக்கு ஏற்ற, ஜெபிக்கும் பெண் இரட்சிக்கப்பட்ட பெண்ணே எனக்கு கிடைத்தது என் பாக்கியம். திருமணம் முடிந்து மிக சந்தோஷமாக நாங்கள் இருவரும் திருமணம் நடந்த அந்த ஒரு பகலை சிரித்து சந்தோஷமாக கழித்தோம். இரவு வந்தது இருவரும் ஜெபித்து படுக்கசென்றோம். அடக்கி வைத்திருந்த என் காம எண்ணங்களை பூர்த்தியாக்க துடித்தேன். என்னவோ தெரியவில்லை!. என் சரீரத்தில் ஏற்ப்பட்ட உணர்ச்சியற்ற மாற்றத்தை என்னால் உணரமுடிந்தது. மனதில் இருந்த உணர்ச்சி சரீரத்தில் கிடைக்கவில்லையே முதல் இரவு தோல்வி என்றால் அது மிகப்பெரிய அவமானமாயிற்றே!. என் மனைவி என்னை அற்பமாக நினைப்பாளே! என்பதற்காக தலைவலி என்று பொய் சொன்னேன். மறுநாள் அதிகாலையிலாவது என் சரீரத்தில் மாற்றம் உண்டாகுமா என்று எதிர்ப்பார்த்தேன். இல்லை. சோர்ந்துபோனேன். 3 நாட்கள் இப்படியே நீண்டுபோனது. இந்த பலவீனத்தை என் மனைவி அறியாதிருப்பதற்காகத்தான் பணம் வாங்கிவர சொல்லி அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டேன். அந்த மூன்று நாட்களும் நாட்டுக்கடையில் விற்கும் லேகியம் வாங்கி சாப்பிட்டேன். ஆனால் ஒரு மாற்றமும் தெரியவில்லை" என்று அழுதான்.

உடனே நான் அவனை படுக்கவைத்து பரிசோதனை செய்தேன். "தம்பி. உன் உடலில் ஒரு பிரச்சனையும் இல்லை. இது வெறும் Excitement தான். அதுவும் Over-Excitement சில சமயம் இப்படி ஏற்பட வாய்ப்புண்டு. உன் அதிகமான ஆவல், எதிர்ப்பார்ப்பு, காமம் இவைகள் சில சமயம் தோல்வியாக மாறும். மனதுக்கும்-சரீரத்துக்கும் சம்பந்தம் உண்டு. மனது சரியில்லையானால் சரீர இயக்கத்தில் சோர்வு உண்டாகும். அது சரி. நீ படித்த பட்டதாரிதானே ஏன் ஒரு டாக்டரிடம் இதைக்குறித்து ஆலோசனை கேட்கவில்லை. இந்த முக்கிய விஷயத்தை ஏன் உனக்குள்ளேயே அடக்கிவைத்தாய்?" என்றேன். "சரியாகிவிடும் என்று நான் மிகவும் எதிர்ப்பார்த்தேன். திருமண நாளுக்கு முந்தின இரவுவரை நான் காமவெறியோடு இருந்தேனே! அப்படியிருக்க இந்த திடீர் மாற்றம் என் சரீரத்தில் பெரிய சோர்வை ஏற்படுத்திவிட்டது. ஊரில் எல்லாரும் எங்கள் குடும்பத்தை அறிந்த டாக்டர்களாக இருக்கிறார்கள் அவர்களிடம் ஆலோசனை கேட்க மனம் வரவில்லை. மேலும் ஊர்க்காரர்கள் திருமணமான மறுநாளே டாக்டரிம் போகிறானே என்று நினைப்பார்களே என்ற கூச்சமும் டாக்டரை பார்க்க தடையாக இருந்தது" என்றார். "சரி. நான் ஒரு ஊசி மருந்து எழுதி தருகிறேன். வாரம் ஒன்று வீதம் 3 ஊசி போட்டுக்கொள். முதல் வாரத்திலேயே மாற்றம் வரும். அடக்கிக்கொள். இரண்டு வாரம் கழித்து எனக்கு அறிவிக்கவேண்டும். செவ்வாய்கிழமைகளில் என்னோடு தொலைபேசியில் தொடர்புக்கொள். நான் கொடுத்த ஊசிமருந்தில் மாற்றம் ஏதும் ஏற்படாவிட்டால் நல்ல மனநோய் டாக்டருக்கு நான் கடிதம் எழுதி கொடுக்கிறேன். மனநோய் டாக்டர் பைத்தியத்துக்குத்தான் வைத்தியம் பார்ப்பார்கள் என்ற தவறான எண்ணம் உனக்குள் உண்டாகக்கூடாது. இப்படிப்பட்ட கேஸ்களில் ஆலோசனையும், வைத்தியமும் அவர்கள் செய்வார்கள். உனக்கு இருப்பது வியாதி அல்ல. நரம்பு தளர்ச்சியும் அல்ல, மனம் சம்பந்தப்பட்டது" என்று கூறி ஜெபித்து அனுப்பினேன். மறுவாரமே உற்சாகம் தாங்க முடியாமல் "டாக்டர் எனக்கு என் மனைவி வேண்டும் இப்போது நான் நன்றாக இருக்கிறேன்" என்று பதட்டத்துடன் கூறினான்.

அந்த பெண்ணின் பெற்றோரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகளை புருஷன் வீட்டில் கொண்டுபோய்விட சொன்னேன். முதலில் அவர்கள் தயங்கினார்கள். தங்களை மாப்பிள்ளை வீட்டார் அவமானப்படுத்திவிடுவார்களோ என்று அஞ்சினார்கள். இரு வீட்டாரிடமும் நானே பேசினேன். அவர்கள் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்கள். இன்று அந்த தம்பதிகள் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். இப்போது மிஷனரி பணியில் இருவரும் ஆழமாக ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

சில சமயங்களில் பல குடும்பங்கள் திருமணத்துக்கு முன்போ, பின்போ சரீரத்தில் ஏற்படும் சில பலவீனங்களின் பிரச்சனைகளில் ஆலோசனை கூறுபவரை Psychologist-ஐ அணுகாமல் உடனே எடுக்கும் அவசர முடிவும் வெறுப்பும் விவாகரத்தில் கொண்டுபோய் சேர்க்கும்.

கணவனிடம் சரீரத்தில் பலவிதமான கோளாறு வைத்துக்கொண்டு மனைவி பிள்ளைப்பெற லாயக்கற்றவர் என்று ஒரேடியாக முடிவெடுப்பவர் எத்தனைபேர்? இருக்கிறார்கள்!.

மனைவியை பரிசோதனைக்கு அனுப்புவார்கள், ஆனால் புருஷன் பரிசோதனைக்கு வரமாட்டார். புருஷன் சரீரத்தில் குறைபாடு என்று பரிசோதிப்பவர் கூறிவிட்டால் அவன் கையாலாகதவன், பிரயோஜனமற்றவன், ஆண்தன்மை இல்லாதவன் என்று எண்ணிவிடுவார்களோ என்ற பயத்தில் எல்லா பழியையும் மனைவி மேலேயே சுமத்தி ஈவு இரக்கமின்றி வாழும் கிறிஸ்தவ படித்த பட்டதாரிகள் எத்தனைபேர்!.

திருமண தம்பதிகள் சந்தோஷமாக இல்லாததற்கு இன்னும் வேறு பல காரணங்களும் இருக்கிறது. ஆகவே பெற்றோர் அவசரப்பட்டு விவாகரத்து என்ற தீர்மானத்துக்கு போய்விடாதீர்கள். உங்கள் மகளுக்கு ஒரு சட்டம் மருமகளுக்கு ஒரு சட்டமா?. இரட்சிக்கப்பட்ட ஆவிக்குரியவர்களும் இந்த விஷயத்தில் படிக்காதவர்களைப்போல் நடந்துக்கொள்கிறார்கள்.

சிறுபிள்ளைகளுக்கே செக்ஸ் கல்வி பற்றிய பாடம் சொல்லி கொடுக்கும்போது கிறிஸ்தவர்களின் குடும்ப பிரச்சனைக்கு இப்படிப்பட்ட வெளிப்படையான ஆலோசனை மிகவும் தேவை.

ஆலோசனை: மேலே வாசித்தைப்போல் பல குடும்பங்களில் விதவிதமான பிரச்சனைகள் மாமியார், மருமகள் கூட்டு குடும்ப பிரச்சனை, புருஷன்-மனைவி சந்தேகம், வளர்ந்த வாலிப பிள்ளைகளால் பெற்றோருக்கு மனவேதனை, கடன் பிரச்சனை இப்படி விதவிதமான போராட்டங்கள், பெரும்பாலானவர்களின் குடும்பங்களில் உண்டு. இப்படி பிரச்சனைகளால் மனவேதனையடையும்போது அதுவே மன அழுத்ததுக்கு கொண்டுபோய்விடும். அவ்வளவுதான். லட்சக்கணக்கான ரூபாய் சம்பளமாக சம்பாதிக்கிறவர்கள் வேலை செய்யமுடியாமல் வீட்டிலேயே படுத்துக்கொண்டு வேலைக்குப்போகாமல் யோசிக்க முடியாமல் வீட்டிலேயே மனநோயாளியாக முடங்கி கிடக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பிரச்சனைகளுககாக நீங்கள் எத்தனை ஊழியர்க்காரருக்கு ஜெபிக்க சொல்லி கடிதம் எழுதினாலும் அல்லது நீங்களே ஜெபித்தாலும் பிரச்சனையை சரிப்படுத்தமுடியாது. எந்த ஒரு பிரச்சனைக்கும் நிச்சயம் ஒரு காரணம் உண்டு அல்லது பிரச்சனையின் ஆணிவேர் உண்டு அதை கண்டுபிடித்து, பிரச்சனையின் காரணத்தை கண்டுபிடித்து அவைகளைக் களையாமல் எதையும் நீங்கள் சரிப்படுத்த முடியாது. வீட்டிலும் சமாதானம் உண்டாகாது. ஒருவர் பிரச்சனையின் காரணமாக இரண்டு நாள் தொடர்ந்தற்போல் தூங்காமல் இருந்தால் யோசிக்கும் மூளைக்கு ஓய்வு கொடுக்கும் மாத்திரைகள் சில உண்டு. அதை உட்கொண்டால் யோசிக்கும் மூளைக்கு ஓய்வு உண்டாகும். ஓய்வு பெற்ற உடனே தானே தூக்கமும் (நித்திரையும்) உண்டாகும். எந்த ஒரு மனிதனுக்கும் குறைந்தது 6 மணி நேரம் தூக்கம்தான் ஆரோக்கியத்தை கொடுக்கும். அந்த தூக்கம் கெட்டுபோனால் எந்த சிறு வியாதியும் அதிகமாகும். மன அழுத்தம் மனநோயாக மாறிவிடும். ஆகவே பிரச்சனைகளுக்கு ஜெபிக்கும்முன் பிரச்சனை ஏன் வந்தது. இதில்நாம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும்? என்பதற்கு ஆலோசனை மிக மிக அவசியம்.

மேலே வாசித்த அந்த எஞ்சினியர் தம்பி என் ஆலோசனைக்கு இணங்காதிருந்திருந்தால் அந்த குடும்பம் இன்று உடைந்து போயிருக்கும். அதோடு விவாகரத்து பெற்றிருப்பார்கள். நம் தேவன் பிரிக்கிறவர் அல்ல. சேர்க்கிறவர்.

தேவன் நமக்கு அளித்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. அதில் நாம் நிம்மதியுடன் சமாதானத்துடன் சந்தோஷத்துடன் வாழ்வோம். கர்த்தர் நல்லவர்!.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN