டாக்டர்.புஷ்பராஜ் ஆகிய நான்
1964ம் வருடம் மனந்திரும்புதலின் (இரட்சிப்பின்) அனுபவத்தைப் பெற்றேன்.
உடனேயே பெங்களுர் அருகே பங்காரப்பேட்டையில் உள்ள SOUTH
INDIA BIBLICAL SEMINARY-யில் குறைந்த கால வேதாகம படிப்பைப்
படித்து மறுபடியும் என் டாக்டர் தொழிலைத் தொடர்ந்தேன்.
என் தொழில் செய்துகொண்டிருக்கும்போதே கர்த்தர் என்னை ஊழியத்தில் உபயோகித்தார்.
சபைகளில் கன்வென்ஷன்களில் பேசவும், வானொலியில் பிரசங்கிக்கவும், பாடவும்
தாலந்துகளை கொடுத்தார். தமிழ்நாடு முழுவதும் எல்லா சபைகளிலும் நான்
கன்வென்ஷனில் பேசி ஆயிரக்கணக்கில் ஆத்துமாக்கள் இரட்சிப்படைய கர்த்தர்
என்னை வல்லமையாக உபயோகித்தார்.
1969ம் வருடம் கர்த்தர் பரிசுத்த ஆவியினால் வரங்களை எனக்கு அளித்து
இன்னும் வல்லமையாக உபயோகிக்க தொடங்கினார். ஆவியின் வரத்தை பெற்றபின்தான்
தமிழ்நாட்டில் மட்டும் பிரசங்கித்துக் கொண்டிருந்த என்னை கேரளா மாநிலத்துக்கும்,
இந்தியாவின் வடக்கு எல்லையான காஷ்மீர் வரை உள்ள எல்லா மாநிலங்களிலும்
என்னை வல்லமையாக உபயோகித்து, உலக நாடுகளிலும் ஏறக்குறைய 161-தேசங்களில்
என்னை கிருபையாய் உபயோகித்தார்.
ஒவ்வொரு கூட்டத்திலும் மனந்திரும்பினவர்கள் வேதம் வாசிக்கும்படி கட்டாயப்படுத்தினேன்.
அதன் பலனாக அவர்களுக்குள் கேள்விகள் எழுந்தது. அதற்கான பதிலை என்னிடமிருந்து
விசுவாசிகள் எதிர்பார்த்தனர். நான் எழுதிய அந்த பதில்கள் மற்ற வாசகர்களுக்கும்
பிரயோஜனமானதாக இருந்தது. கேள்வி கேட்டு எழுதிய கடிதங்களும், ஆலோசனை
கேட்டு எழுதிய கடிதங்களும் குவியத் தொடங்கின. டாக்டர் தொழிலையும் செய்து
கொண்டு ஆயிரக்கணக்கான கடிதங்களுக்கு பதிலும் எழுத முடியாமல் திணறினேன்.
அப்போதுதான் கடிதமும்-செய்தியும் NEWS LETTER
என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தேன். பத்திரிக்கை அச்சடிக்கும்
முழு செலவையும் ஒவ்வொரு வாசகர்களும் பொருப்பெடுத்தார்கள். ஆகவே எனக்கு
பணப் பிரச்சனை ஒன்றும் ஏற்படவில்லை. அன்றும் இல்லை - இன்றும் இல்லை.
பத்திரிக்கையின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது, தபால் செலவும் அதிகரித்தது.
ஆகவே தபால் சலுகை பெறவும், இந்திய அரசாங்க சட்டத்தின் படியும் டெல்லியில்
பத்திரிக்கையை ரிஜிஸ்டர் செய்தேன். அப்போதுதான் NEWS LETTER
என்ற பெயரில் ஏற்கனவே யாரோ பதிவு செய்திருந்தபடியால், பத்திரிக்கைக்கு
வேறு ஒரு பெயரை அறிவிக்கும்படி டெல்லியிலிருந்து கேட்டுக் கொண்டார்கள்.
அதன்படி பத்திரிக்கைக்கான பெயர் என்னவாக இருக்கவேண்டும் என்று கர்த்தரிடம்
ஜெபித்து கேட்டேன். அப்போது வசனத்தின் மூலமாக கர்த்தர் என்னோடு பேசி
என் பத்திரிக்கைக்கு கொடுத்த பெயர்தான் ஜாமக்காரன் (WATCHMAN)
(மலையாளத்தில் காவல்காரன்) என்பதாகும். ஏசாயா 21ம்
அதிகாரத்தில் காணப்பட்ட இந்த பெயரை மீண்டும் ஜெபித்து உறுதிசெய்து
டெல்லிக்கு அனுப்பினேன். ஜாமக்காரன் (ரெஜிஸ்டர் நீயூஸ் லெட்டராக முறைப்படி
பதிவு செய்யப்பட்டது)
ஜாமக்காரன் என்ற பெயரை கர்த்தர் என் பத்திரிக்கை
ஊழியத்துக்கு ஏன் கொடுத்தார்? ஜாமக்காரனின் வேலை என்ன? என்பதைத் தியானிக்க
ஆரம்பித்தேன்.
1969ம் வருடம் Small Pox அம்மைவியாதி
படுக்கையில் நான் இருந்தபோது முகம் பார்க்கும் கண்ணாடியில் என் முகத்தின்
விகாரத்தை கண்டபோதுதான் நான் அதிர்ந்துபோய் பகல் 11 மணிக்கு கர்த்தரின்
பாதத்தில் முழங்கால்படியிட்டு இந்த குழிகள் விழுந்த கோரமுகம் உண்டாக்கும்
இந்த வியாதி எனக்கு வரக்காரணம் என்ன? நான் செய்த பாவம் என்ன? என்று
புலம்பினேன்.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. முதலில் கிறிஸ்துவின் பாதி தோற்றத்தையும்,
பின் முழுத் தோற்றத்தையும் கண்டேன். இயேசு உயிர்த் தெழுந்து பரமேறி
பரலோகம் சென்றபின் யாருக்கும் முழு உருவத்துடன் தன்னை வெளிப்படுத்தியதான
வேதத்தில் ஆதாரமில்லை. ஆகவே நான் பார்த்தது அவரின் மகிமையின் சரீரமா? அல்லது
வெறும் தரிசனமா? என்பதை இன்றும் என்னால் தெளிவாக கூறமுடியாது. ஆனால்
அவர் என்னைத் தன் கை நீட்டி ஆசீர்வதித்ததையும், என்னோடு பேசினதையும்
நன்றாக உணர முடிந்தது. மகனே! உன்னை நான் ஆசீர்வதிக்கிறேன், உன்னை எனக்கு
முழுவதுமாக விட்டுக் கொடுப்பாயா? காரணம் நான் உன்னை வித்தியாசமாக உபயோகிக்கப்
போகிறேன் என்றார். ஆண்டவரே! இப்போதும் நான் உம் ஊழியத்தை செய்துகொண்டுதானே
இருக்கிறேன். என்றாலும் நீர் என்னை எப்படியெல்லாம் உபயோகிக்க விருப்பமோ
அப்படியெல்லாம் உபயோகித்துக் கொள்ளும் நான் தயார்! என்னை மறுபடியும்
முழுவதுமாய் உமக்கு விட்டுக்கொடுக்கிறேன் என்று பதில் அளித்தேன். உடனே
மறுபடியும் தன் கையை நீட்டி என் தலையில் வைத்து ஆசீர்வதித்து மறைந்துபோனார்.
அந்த நிமிடமே என் உடல் முழுவதும் இருந்த அம்மை வியாதியின் கட்டிகள்
யாவும் சாம்பலைப் போல உதிரத் தொடங்கியது. உடனே ஓடிச் சென்று கண்ணாடியில்
என்னை பார்த்தேன். கட்டிகள் அனைத்தும் மறைந்து போனது. அம்மை
வியாதி வந்த அன்று 15வது நாளே தலையோடு தண்ணீரில் குளித்தேன். என் சரீரத்தில்
எங்கும் அம்மை தழும்போ, வியாதி வந்ததற்கான கருத்தபுள்ளிகளோ காணப்படவில்லை.
இப்படி முதல் அற்புத சுகத்தை அன்று பெற்றேன். அதன்பின் என் ஊழியம்
மிக வித்தியாசமாக மிக வல்லமையாக இருந்தது. அதன்பின்தான் ஜாமக்காரன்
பத்திரிக்கை வெளி வந்தது. ஜாமக்காரன் என்று ஆண்டவர் கொடுத்த
பெயரோடு வந்த பத்திரிக்கையில் கேள்வி-பதில் பகுதியை ஆரம்பித்தேன்.
அதிலிருந்துதான் பல பிரச்சனைகள் புதிதாக உண்டாக ஆரம்பித்தது. பல ஊழியர்களைப்பற்றி
அவர்களின் தவறான உபதேசங்கள், சபைகளைப்பற்றி - சபைகளின் தவறான உபதேசங்கள்,
சபைத்தலைவர்கள், பிஷப்மார்கள், பாஸ்டர்கள், பிரசங்கிமார்கள் இப்படிப்பட்டவைகளின்
சம்பந்தமாக கேள்விகள் விசுவாசிகள் கேட்க, அதற்கு நான் அளித்த வெளிப்படையான
பதில்கள், பகிரங்கமான எச்சரிப்புகள், இவைகள் ஜாமக்காரனில்
வெளிவர தொடங்கியதும் எதிர்ப்புகள் அதிகமாயின. ஏறக்குறைய எல்லா ஊழியர்களும்
என்னை வெறுத்தார்கள். பிஷப்மார்கள், பாஸ்டர்கள் சபைகள் குறிப்பாக நான்
அங்கம் வகிக்கும் என் சபையும், என் சபையின் குருமார்களும், பிஷப்மார்களும்
என்னை வெறுத்தனர். இப்போதுதான் கர்த்தர் ஏன் என் பத்திரிக்கைக்கு ஜாமக்காரன்
என்ற பெயரை கொடுத்தார் என்பது விளங்க ஆரம்பித்தது.
ஜாமக்காரனின் இரண்டு முக்கியமான வேலைகளை வேதத்தில் கர்த்தர் எழுதியிருந்தார்.
ஒன்று வெளியிலிருந்து வரும் ஆபத்தை ஜனங்களுக்கு முன்எச்சரிக்கை
செய்து அறிவிக்க வேண்டும்.
இரண்டு உள்ளேயே உள்ள தவறுகளை, தவறு செய்பவர்களை
வசன அடிப்படையில் அடையாளம் காட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும், அவர்களுக்கு
அதை அறிவிக்க வேண்டும். இதனால்தான் சில பிழையான ஏமாற்று ஊழியர்கள்
எனக்கு (டாக்டர்.புஷ்பராஜ்க்கு) குற்றம் சொல்லும் ஆவி பிடித்திருக்கிறது
என்று மேடைதோறும் இழிவாகப் பேசினார்கள். தங்கள் பத்திரிக்கைகளில் எழுதினார்கள்.
அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் போது அவர்களால் அதை தாங்கிக்கொள்ள
முடியவில்லை. லேவி 5.1, அப் 4.20-இல் உள்ள வசனங்களின்படி நான் கண்டதையும்,
அறிந்ததையும் அறிவிக்காமல் போனால் நான் சபிக்கப்பட்டவனாக இருப்பேன்
என்ற வசனம் என்னை பயமுறுத்தியது. அதே வசனம்தான் என்னைத் தைரியப் படுத்தியது.
என் பத்திரிக்கை ஊழியம் பொதுமக்கள் அல்லது அவிசுவாசிகள் வாசிப்பதற்க்கல்ல.
விசுவாசிகள் மட்டுமே என் எழுத்தை விளங்கிக்கொள்ள முடியும். கிறிஸ்தவ
சமுதாயத்தை திருத்த நான் எழுதவில்லை. திருத்த முடியாது என்பதை நான்
அறிவேன். யாரையும் என் எழுத்தால் மாற்றவும் முடியாது என்பதையும் நான்
அறிவேன்.
என் பத்திரிக்கை ஊழியம் அறிவிப்பது என்பது எச்சரிப்பது ஆகும். கிறிஸ்தவத்தில்
புரையோடிக் கிடக்கும் அவலங்களை வெளிக்கொண்டு வந்து காண்பித்து குறிப்பாக
வசன அடிப்படையில் அல்லாத ஊழியம் செய்பவர்களையும் அவர்களின் ஏமாற்றுத்தனத்தையும்
வாசகர்களுக்கு காண்பித்து எச்சரிக்கவே பத்திரிக்கை நடத்துகிறேன். இதனால்
எனக்கு, என் குடும்பத்துக்கு, என் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட அவமானம்,
இழப்புகள் ஏராளம் என்றாலும் இந்த நிமிடம்வரை என்னை வித்தியாசமாக உபயோகிக்கப்
போகிறேன் என்று அன்று கூறிய கர்த்தரின் வார்த்தைக்கு மட்டுமே நான்
கீழ்ப்படிந்து என் குடும்பமோ, என் கிறிஸ்தவ சமுதாயமோ என்னை வெறுத்தாலும்,
அவர் எனக்கு கொடுத்த இந்த வித்தியாசமான ஊழியத்தை என் மரணம்வரை தொடர்ந்து
செய்வேன். இத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் என்னைப் புரிந்துகொண்ட
வாசகர் குடும்பங்கள் ஏராளம் உண்டு. அவர்களை ஆவியானவர் ஏவி, அவர்களைக்
கொண்டே இந்த பத்திரிக்கை ஊழியத்தை தொடர்ந்து நடத்த உதவி செய்கிறார். இதுவரை
நான் யாரிடமும் ஊழியத்துக்கென்றோ பத்திரிக்கைக்கென்றோ நேரிடையாகவோ,
பத்திரிக்கை மூலமாகவோ காணிக்கை கேட்டதில்லை. பத்திரிக்கைக்கு சந்தாவும்
கேட்டதில்லை. ஆவியானவரே இந்த ஊழியத்தை அற்புதமாக விசுவாசிகள் மூலமாகவே
நடத்திக்கொண்டிருக்கிறார்.
என்னால் இந்த அவமானமான பாதையில், என் எதிரிகளின் மூலமாக எனக்கு உண்டாகியிருந்த
ஆபத்தான சூழ்நிலையில் பயமில்லாமல் இந்த பத்திரிக்கை ஊழியத்தை நான்
தொடர்ந்து செய்வேன் என்று, என்னை முழுவதுமாய் நம்பி, இந்த ஊழியத்தை
ஒப்படைத்த என் தேவாதிதேவனைத் துதிக்கிறேன். மகிமைப்படுத்துகிறேன்.
எனக்குப்பின் இந்த வித்தியாசமான ஊழியத்தை யார் துணிந்து செய்வார்?
என்ற கேள்வியை எல்லாரும் கேட்கிறார்கள். ஆனால் அந்தக் கேள்வி எனக்குள்
உண்டானதே இல்லை!.
அழைத்தவர், அழைப்பவர் கர்த்தர். அவருக்குத் தெரியும் இந்த ஊழியம்
எத்தனை காலத்துக்குத் தொடரும், இதற்குப்பின் யாரை இந்த ஊழியத்துக்குப்
பயன்படுத்தவேண்டும் என்று கர்த்தருக்குத் தெரியும். இது அவர் ஊழியம்
அதைக்குறித்து நாம் யாரும் யோசிக்கவேண்டிய அவசியம் இல்லை.
எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு உண்டு என்று வேதம் கூறுகிறது. அதுபோல்
என் பத்திரிக்கை ஊழியத்துக்கும் ஒரு முடிவு நிச்சயம் உண்டு. |