என் ஊழியம் - ஜாமக்காரன்

"சுவிசேஷகனுடைய வேலையைச் செய் - உன் ஊழியத்தை நிறைவேற்று - தீங்கநுபவி".
2 தீமோ 4:5

"என்னை பெலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை (இந்த ஊழியத்திற்கு) உண்மையுள்ளவனென்றெண்ணி, என்னை இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்". 1 தீமோ 1:12.

கர்த்தருக்குள் அன்பாய் எனக்கு கிடைக்கப்பெற்ற ஜாமக்காரன் வாசகர்களுக்கு,

அநேக ஆண்டுகளுக்குபிறகு என் ஊழியத்தைப்பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். புதிய தலைமுறை வாசகர்கள் ஜாமக்காரனை படிக்க நாளுக்குநாள் லட்சக்கணக்கில் பெருகிக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு என்னைப்பற்றியும், இந்த என் வித்தியாசமான ஊழியத்தின் நோக்கத்தைப்பற்றியும் அவர்கள் அறிய நியாயம் இல்லை.

புதிய வாசகர்களுக்கும், என்னை பிடிக்காத சில பழைய வாசகர்களுக்கும் நான் ஊழியர்களைப்பற்றி குற்றம் சொல்லுபவனாக அறியப்படுகிறேன்.

ஆனால், என் பிரசங்கத்தை கேட்பவர்களுக்கோ என்னைப்பற்றி மற்றவர்களின் தவறான கணிப்பிற்கு முற்றிலும் வித்தியாசமுடையவனாக காணப்படுகிறேன். இப்படி நான் இரு முகங்களாக அறியப்படுவதின் காரணம். நான் ஜாமக்காரனில் எழுதுவதற்கும், நான் கன்வென்ஷனிலும், TVயிலும், வானொலியிலும் பேசும் பிரசங்கத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

நான் ஜாமக்காரன் பத்திரிக்கை நடத்துவது கர்த்தரால் எனக்கு கொடுக்கப்பட்ட என் வாசகர்களுக்காக மாத்திரமே!. இது எல்லாரும் படிக்கக்கூடிய பத்திரிக்கை அல்ல!. குறிப்பாக புறமதஸ்தர்களோ!, அவிசுவாசிகளோ! வாசிக்க பிரயோஜனமுள்ளதல்ல. இவர்களுக்கு ஜாமக்காரனில் நான் எழுதுவது விளங்காது. ஆகவேதான் ஜாமக்காரன் பத்திரிக்கையை புறமதஸ்தருக்கோ, அவிசுவாசிகளுக்கோ வாசிக்க கொடுக்கவேண்டாம் என்று அடிக்கடி ஜாமக்காரனில் எழுதி வாசகர்களை ஞாபகப்படுத்துகிறேன். புறமதஸ்கர்கள், அவிசுவாசிகள் என் ஜாமக்காரனை வாசித்தால் நிச்சயம் அவர்களுக்கு அது இடறலாகத்தான் இருக்கும். இப்படி தெளிவாக நான் அடிக்கடி வாசகர்களை எச்சரித்து, ஞாபகப்படுத்தி எழுதியும் புறமதஸ்தர்கள், அவிசுவாசிகள் ஜாமக்காரனை வாசித்து அவர்கள் ஆத்துமாவுக்கு ஜாமக்காரன் இடறலாக அமைந்ததானால் அதற்கு நான் காரணக்காரன் அல்ல!.


என் ஊழியத்தின் முதல் பகுதி - I

1964ம் வருடம் டேனிஷ்பேட்டை (பெத்தேல்) ஐக்கியத்தில் டாக்டர் தொழில் தொடங்கினேன். அங்குதான் நான் மனந்திரும்புதலின் அனுபவத்தையும் பெற்றேன். உடனடியாக வேதாகம கல்லூரியில் குறுகியகால வேதாகமபடிப்பையும் பெற்றேன். அதன்பின் என் டாக்டர் தொழிலோடு, சிறுபிள்ளைகள் மத்தியிலும், கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ஊழியம் செய்தேன். இந்த ஊழியத்துக்கு சகோ.P.சாமுவேல் அவர்களும், சகோ.விக்டர் மனோகரம் (Youth for Christ) அவர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். அன்றைய நாட்களில் சகோ.N.ஞானராஜா, Rev.மாணிக்கவாசக திரவியம், Rev.வீரராஜ், சகோ.பி.சாமுவேல் (பெத்தேல் - டேனிஷ் பேட்டை) இவர்களோடு இணைந்து VBS, வாலிபர் கூட்டம் ஆகிய ஊழியங்களில் நான் அதிகமாக உபயோகிக்கப்பட்டேன்.


கன்வென்ஷன் பிரசங்க ஊழியம்:

FEBA வானொலியில் Rev.ஆப்பில்பீ அவர்கள் நற்செய்தி என்ற பெயரில் நடத்திய வானொலி நிகழ்ச்சியில் வேதபாடம் நடத்தினேன். நாகர்கோவில் வருகையின் தூதன் ஆசிரியரின் மூத்த மகன் சகோ.D.T.ராஜா அவர்கள் நடத்திய FEBA வானொலி நிகழ்ச்சியான வாலிபர் விருந்து என்ற தொடர் நிகழ்ச்சியில் செய்தியளிக்க தொடர்ந்து சகோ.D.T.ராஜா அவர்கள் என்னை உபயோகித்தார். அதன்மூலம் அநேக வாலிபர்கள் தொடப்பட்டார்கள். அநேக பெயர் கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். அதன்மூலம் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் சினிமா பாடல்களிடையே தினசரி வெளிவந்த அரை மணிநேர சத்தியவசன நிகழ்ச்சியில் டாக்டர்.தியோடர் வில்லியம்ஸ், டாக்டர்.சாம்கமலேசன் ஆகியவர்கள் அந்த வானொலியில் நடத்திய வேதபாடம் மிகவும் பிரபலமான ஒன்றாகும். அவர்களோடு என்னையும் சத்தியவசன வானொலி நிகழ்ச்சியில் வேதபாடம் நடத்த (இலங்கை) திரு.ரிச்சர்ட் ஆபிரகாம் அவர்களோடு திருமதி.மெடோஸ் அம்மையரால் அழைப்பு பெற்று இலங்கை வானொலியில் சத்தியவசன நிகழ்ச்சியில் தொடர் வேதபாட செய்திகள் அளித்தேன்.

அன்றைய நாட்களில் TV, மொபைல் இப்படிப்பட்ட நவீன மீடியாக்கள் இல்லாத காலம். கிறிஸ்தவ பத்திரிக்கைகளும் வாசிக்க, கேட்க அரிதான காலம் அது. அன்றைய நாட்களில் ஒரே ஒரு பொழுதுபோக்கு வானொலி மட்டுமே. அந்த வானொலி மூலமாக வெளிவந்த என் பிரசங்கங்களை இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் விரும்பி கேட்டதின் பலனாக நான் இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் கிறிஸ்தவ பிரசங்கியாக, சுவிசேஷகனாக பிரபலமாக்கப்பட்டேன். அதன் விளைவாக சபைகளில் கன்வென்ஷனில் பிரசங்கிக்க அழைக்கப்பெற்றேன்.


என் ஊழியத்தின் இரண்டாம் பகுதி - II

கன்வென்ஷன் பிரசங்கியாக முதன்முதல் நான் அறிமுகப்படுத்தப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி CSI டையோசிஸ்ஸில் நாகர்கோவில் அருகேயுள்ள காரியாவிளை என்ற சிறிய ஊரில் அமைந்த CSI ஆலயத்தில் 1965ம் வருடம் மே மாதம் நடத்தப்பட்ட சபை கன்வென்ஷனில் பிரசங்கம் செய்தேன். அந்த கன்வென்ஷனில் கலந்துக்கொண்ட சில ஆயர்கள் என் பிரசங்கத்தைக்கேட்டு, தங்கள் ஆலயங்களிலும் கன்வென்ஷனில் பிரசங்கிக்க என்னிடம் தேதிகள் கேட்டு கூட்டங்களை ஏற்பாடு செய்தார்கள். அதிலிருந்து சிறுபிள்ளைகள் மத்தியில் நான் செய்த ஊழியத்தை நிறுத்திவிட்டேன். அதன்பின் கன்வென்ஷன் பிரசங்கியாராக தமிழ்நாடு முழுவதும் அனைத்து CSI டையோசிஸ்களிலும், லூத்தரன் சபைகளிலும் கர்த்தரால் உபயோகப்படுத்தப் பட்டேன்.


இடையில் ஒரு மாற்றம்: மிஷனரியாக மாறினேன்.

1967ம் வருடம் FMPB மிஷனரி மாநாட்டில் பேசப்பட்ட ஒரு செய்தியால் மிஷனரி ஊழிய தாக்கம் என்னில் ஏற்பட்டு, மிஷனரி ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்தேன். என்னை நம்பியுள்ள என் பெற்றோரைக் குறித்தும், திருமணமாகாமல் என் பொறுப்பில் விடப்பட்ட இரண்டு சகோதரிகளைக்குறித்தும் பொறுப்பற்றவனாக மிஷனரி ஊழியம் செய்ய பயணமானேன். சகோ.ஹாரீஸ் ஹில்டன் அவர்களுடன் நானும் FMPBயின் முதல் மிஷனரிகள் வரிசையில் பயணமானோம். சில மாதங்களில் வருமானம் ஏதும்அற்ற என் குடும்பம் வறுமையில் பாதிக்கப்பட்டது. என்னை மட்டும் நம்பியிருந்த என் பெற்றோர், என் சகோதரிகள் அனுபவித்த வறுமை நிலை, என் மனநிலையை மாற்றியது. அதோடு FMPB மூலம் மிஷனரிகளான எங்களுக்கு கிடைக்க வேண்டிய மாத உதவிதொகை கிடைக்கமால்போகவே நானும், சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்களும் பெரியமலை பணிதளத்தைவிட்டு இறங்கி டேனிஷ்பேட்டை திரும்பி வரநேர்ந்தது. நான் என் டாக்டர் தொழிலுக்கு திரும்பினேன். என் குடும்ப பொறுப்பை நிறைவேற்ற பணம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று. FMPB மறுபடியும் மிஷனரி ஊழியத்தை தொடர்ந்தது. சகோ.ஹாரிஸ் ஹில்டன் மிஷனியாக அதே பெரிய மலைக்கு மறுபடியும் சென்ற அவர் திரும்பி கடைசிவரை அங்கு தங்கி தன் மிஷனிரி பணியை நிறைவேற்றினார்.

அதன்பின் நான் என் டாக்டர் தொழிலோடு சுவிசேஷ ஊழியத்தையும் செய்து, கன்வென்ஷனில் பிரசங்கிக்கும் ஊழியத்தையும் தொடர்ந்தேன். ஒவ்வொரு மாதமும் மாதத்தின் 3 வாரங்களில் கடைசி 3 நாட்களை கன்வென்ஷனில் பிரசங்கிக்க நாட்களை ஓதுக்கினேன். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு வாரம் முழுவதும் காடுகளில் ஆதிவாசிகளுக்கிடையே இலவச வைத்தியமும் சுவிசேஷம் அறிவித்தேன் அன்றுமுதல் - இன்றுவரை இதே மாதிரியான ஊழியத்தைத்தான தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன். 1967ம் ஆண்டு என்னில் உண்டான அந்த மிஷனரி ஊழிய பாரம் இப்போதும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அந்த மிஷனரி ஊழியத்தையும் இன்றுவரை நிறைவேற்றி வருகிறேன் என் மரணம் வரை அதை நிறைவேற்றுவேன் என்று கர்த்தருக்குள் நம்புகிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.


கேரளா மாநில ஊழியம்:

1969ம் வருடம் கேரளா மாநிலத்தில் முதல்முறையாக மார்தோமா சபையில் பிரசங்கிக்க அழைக்கப்பெற்றேன். கேரளாவில் அதைத் தொடர்ந்து மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் ஏராளமான கன்வென்ஷனில் பிரசங்கித்தேன். அதன்பின் கேரளா CSI சபையினரும் என்னை தங்கள் கன்வென்ஷனில் உபயோகித்தனர். அங்கு CSI வடக்கு கேரளா, CSI தெற்கு கேரளா, CSI மேற்கு கேரளா, CSI மத்திய கேரளா ஆகிய கேரள மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் சென்று கன்வென்ஷனில் பிரசங்கித்தும்,வேதபாடம் நடத்தியும் கேரளா மக்களிடையே பிரபலமான பிரசங்கியாக மாறினேன். இப்போதும் கன்னியாகுமரி முதல் - வட இந்தியா ஹிமாச்சல பிரதேசம் வரை அனைத்து மாநிலங்களிலும் கர்த்தர் என்னை கிருபையாக உபயோகப்படுத்திக்கொண்டு வருகிறார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.


உலக நாடுகளில் என் ஊழியம்:

அதன்பின் 162 உலக நாடுகளில் இந்தியர்கள் ஆராதிக்கும் சபைகளில் கர்த்தர் என்னை கிருபையாக உபயோகப்படுத்தினார்.

1984ம் ஆண்டில் உலகின் பல நாடுகளில் சிதறியிருந்த புலம்பெயர்ந்த இந்துமதத்தை சார்ந்த இலங்கை தமிழர்கள் மத்தியில் சுவிசேஷ ஊழியம் செய்ய முதல் சுவிசேஷகனாக அழைக்கப்பட்டேன். பல நாடுகளில் குறிப்பாக ஜெர்மனி தேசத்தில் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் பகுதியில் நடத்திய என் ஆரம்ப சுவிசேஷ ஊழியம் மூலமாக ஜெர்மனியில் பல சபைகள் எழும்பின. ஆரம்ப காலங்களில் இவர்களுக்காக மட்டும் சுவிசேஷம் அறிவிப்பவனாக அந்த நாடுகளில் கர்த்தர் என்னை உபயோகித்தார்.

சில வருடங்களுக்குபின் இந்த இலங்கை தமிழ் கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர இந்தியாவில் நான் வேத பாடம் நடத்துவதைப்போல் இவர்கள் மத்தியிலும் அடிக்கடி சென்று வேதபாடம் நடத்தி கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்டேன்.


என் ஊழியத்தின் மூன்றாம் பகுதி III

பத்திரிக்கை ஊழியம்: என் ஊழியம் மூலமாக தொடப்பட்ட மனம்திரும்பின கிறிஸ்தவர்கள் வேத வசன சம்பந்தமான கேள்விகளை கடிதம் மூலமாக எனக்கு எழுதி கேட்க தொடங்கினார். அப்படி நூற்றுக்கணக்கான கடிதங்கள் ஒவ்வொருநாளும் எனக்கு வர தொடங்கியவுடன் இவர்களுக்கு தனித்தனியாக பதில்கடிதம் எழுதுவதைக்காட்டிலும் பத்திரிக்கை மூலமாக கேள்விகளுக்கு பதில் அளித்தால் மற்றவர்களுக்கும் அந்த பதில் பிரயோஜனமாக இருக்குமே என்ற எண்ணம் எனக்குள் உண்டானபோது உடனே கடிதமும்-செய்தியும் NEWS LETTER என்ற பெயரில் ஆங்கிலம் - தமிழ் - மலையாளம் ஆகிய மூன்று பாஷைகளில் 1969ம் வருடம் முதல் பத்திரிக்கை ஊழியம் தொடங்கினேன். ஆரம்பம் முதலே சந்தா வாங்காமல் வாசகர்கள் அனுப்பும் காணிக்கைகளை வைத்தே பத்திரிக்கை நடத்தினேன். பத்திரிக்கை வாங்கும் வாசகர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் கூடிக்கொண்டே வந்தது. ஆகவே தபால் சலுகை பெறுவதற்காக இந்திய அரசாங்கத்தின் பத்திரிக்கை பதிவு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் NEWS LETTER என்ற பெயரில் ஏற்கனவே யாரோ பதிவு செய்திருப்பதால் வேறு பெயரை குறிப்பிட்டு விண்ணப்பிக்க டெல்லியிலிருந்து லெட்டர் வந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தரால் உணர்த்தப்பட்டு தெரிந்தெடுத்த பெயர்தான். ஜாமக்காரன் - WATCHMAN, மலையாளத்தில் காவல்காரன் என்றழைக்கப்பட்டது.

அரசாங்க பதிவுபெற்றுவிட்டேன். தபால்துறையும், ஸ்டாம்ப் சலுகை கொடுத்துவிட்டது. ஜாமக்காரன் பத்திரிக்கை மூலம் பிரச்சனையும் ஆரம்பமானது:


எதிர்ப்பும் - தாக்குதலும்

ஜாமக்காரன் பெயரில் பத்திரிக்கை தொடங்கியவுடன் புது பிரச்சனைகள் உருவாயிற்று. முதல் பிரச்சனையே நான் நேசிக்கும் என் இனிய ஆவிக்குரிய நண்பரான சகோ.DGS.தினகரன் ஊழியத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இளம்பங்காளர் திட்டம் பற்றியதாக அமைந்தது. குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தைக்கு அன்றைய நாளில் 1000 ரூபாய் (இப்போ 2000 ரூபாய்) வாங்கும்படி கர்த்தர் சொன்னார் என்று சகோ.தினகரன் அறிவித்தார். ஒரு குழந்தையின் பெயரில் 1000 ரூபாய் செலுத்தினால் அந்த குழந்தைக்காக 25 வருடங்கள் அவர் ஜெபம் ஏறெடுப்பார் என்பதாகவும், அந்த ஜெபம் அந்த குழந்தையை ஆபத்து, விபத்து, வியாதி உண்டாகாமல் பாதுகாக்கும் என்றும் அறிவித்தார்.


முதல் கேள்வி எழுந்தது: முதல் பிரச்சனையும் எழுந்தது:

1000 ரூபாய் கொடுக்க முடியாத ஏழை குழந்தைக்கு யார் ஜெபம் ஏறெடுப்பார்? இது ஜெபத்தை பணத்துக்கு விற்பதுபோல் இருக்கிறதே? அன்று கத்தோலிக்க போப் பாவமன்னிப்பு சீட்டு விற்றதைபோல் இவர் திட்டம் இருக்கிறதே?. நாங்கள் இந்த திட்டத்துக்கு 1000 ரூபாய் அனுப்பலோமா? என்று கேட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் எனக்கு கடிதம் எழுதி கேட்டார்கள். என் ஒழுங்கின்படி வாசகர் அனுப்பிய அந்த கடிதங்களை போட்டோ காப்பி எடுத்து சகோ.தினருக்கே அனுப்பி இவர்களின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன? உங்கள் பதிலை ஜாமக்காரனில் வெளியிட அது உதவியாக இருக்கும் என்று எழுதினேன். என் கடிதத்துக்கு தன் பத்திரிக்கை மூலமாகவும் பிரசங்கம் மூலமாகவும் தினகரன் கூறியதாவது:

ஏழைகளின் பிள்ளைளுக்கு ஜெபிக்க 1000 ரூபாயை கொஞ்சகொஞ்சமாக அனுப்பினால் அதாவது தவணைமுறையில் அனுப்பினால் அந்த பணம் பெற்றுக்கொள்ளப்படும்; 1000 ரூபாய் மொத்தமாக சேர்ந்தவுடன் ஜெபம் ஏறெடுக்கப்படும் என்று அறிவித்தார். பதில் தமாஷாக இல்லை!. தவணைமுறையில் பணம் பெற்று ஜெபிக்க இது என்ன? வாஷிங் மெஷினா? இந்த பதில் பிழையானது. சகோ.தினகர் கர்த்தர் அறிவித்ததாக கூறியது பொய். கர்த்தர் ஒருபோதும் 1000 ரூபாய் வாங்கி ஒரு குழந்தைக்கு ஜெபிக்கும்படி கூறமாட்டார் என்று வெளிப்படையாகவே ஜாமக்காரனில் எழுதி அறிவித்தேன். அப்போதுதான் சகோ.தினகரனின் அனுதாபிகள் யாவரும் என் ஊழியத்தை வெறுக்க ஆரம்பித்தார்கள். எனக்கு காணிக்கை அனுப்பி கொண்டிருந்தவர்கள் பெருபாலானோர் படபடவென்று எனக்கு காணிக்கை அனுப்புவதை நிறுத்தினார்கள். ஒவ்வொரு CSI - லூத்தரன் ஆலயத்திலுள்ள கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் சகோ.தினகரனை தெய்வமாக கருதியதால் என்னை தங்கள் ஆலயத்தில் கன்வென்ஷனில் பிரசங்கிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சபை ஆயர்களில் பெரும்பாலானவர்கள் நான் எழுதியது சரி என்று அறிந்ததால் அவர்கள் என்னை தைரியமாக அழைத்து அவர்கள் சபை கன்வென்ஷனில் பிரசங்கிக்க வைத்தார்கள்.

இதுதான் ஜாமக்காரன் பத்திரிக்கை தொடங்கியவுடன் என் ஊழியத்துக்கு எதிராக உண்டான முதல் எதிர்ப்பாகும். இதுவரை பத்திரிக்கைக்காக சந்தா வாங்காமல், யாரிடமும் காணிக்கை கேட்காமல், கடன் இல்லாமல் ஜாமக்காரனை நடத்திக்கொண்டிருக்கிறேன். ஜாமக்காரனில் ஒரு இடத்திலும் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ என் ஊழியத்தேவைகளைக்குறித்து எழுதியதில்லை. ஆனால் சகோ.தினகரன் அவர்களைப்பற்றி நான் எழுதியவுடன் ஏற்பட்ட எதிர்ப்பு அலையால் பத்திரிக்கையை இனி நடத்தமுடியாது என்ற நிலை வந்துவிடுமோ என்று எண்ணும்அளவு ஒரே ஒருமுறைமட்டும் பத்திரிக்கை ஊழியத்துக்கு பணக்குறைவு ஏற்பட்டது. அடுத்தமாத அச்சக செலவுக்கு, பணத்துக்கு என்ன செய்வது? இதுவரை எனக்கு எங்கும் கடன் கிடையாது? கடன் வாங்கக்கூடாது என்ற என் வைராக்கியத்துக்கு வந்த ஒரு சோதனையாக கருதினேன். பணம் அச்சகத்துக்கு அனுப்ப வேண்டிய நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. பத்திரிக்கை அச்சடிக்க அடுத்த மாதத்தின் செய்திகள் யாவும் தயாராகிவிட்டது. ஆனால் அதே சமயம் பணத்தைக்குறித்து நான் எந்த கவலையுமில்லாமல், பணத்துக்காக கர்த்தரிடம் ஜெபம் ஏதும் செய்யாமல், எப்போதும்போல நான் டென்ஷன் இல்லாமல் இருந்தது. என் குடும்பத்தில் என் மனைவிக்குமட்டும் தெரியும். அது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவர் பணத்தைக்குறித்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை.

ஒரு ஆச்சரியம்! கடைசிநேர அற்புதம்! என் நான்கு பேங்கிலும் பணம் இல்லாமல் இருந்த நிலையில் ஒரு வாரத்துக்குள் வாசகர்களிடமிருந்து எனக்கு வந்து சேர்ந்த காசோலைகள், DD, மணியார்டர்கள் ஆகியவை மூலமாக கிடைத்தது பல லட்ச ரூபாய்கள் வந்து சேர்ந்தன. அதை அப்படியே பிரிண்டிங் பிரஸ்ஸில் சேர்த்தேன். பிறகு என் மனைவியிடமும் நெருங்கின ஆவிக்குரிய விசுவாசிகளிடமும் இந்த சம்பவத்தைக்குறித்து நான் கூறியது இதுதான்!.

(ஜாமக்காரன்) பத்திரிக்கை ஊழியம் நானாக ஆரம்பித்தது அல்ல. அது கர்த்தரின் ஏற்பாடு. பத்திரிக்கைக்கு பெயர் கொடுத்ததும் அவரின் செயல். இது கர்த்தரின் ஊழியம். கர்த்தர் பணம் கொடுத்தால் இந்த ஊழியத்தை தொடருவேன். அவர் நிறுத்தினால் நானும் பத்திரிக்கை வெளியிடுவதை நிறுத்திவிடுவேன். கர்த்தருக்கு இவ்விஷயத்தில் இல்லாத அக்கறை! எனக்கு மட்டும் என்ன? நான் ஏன் இதற்காக அவரிடம் போராடவேண்டும். இந்த விசுவாசம்தான் எனக்கு பணம் விஷயமாக கவலையை உண்டாக்கவில்லை!. நஷ்டமும் உண்டாகவில்லை. இன்றைக்கும் என்றைக்கும் என் விசுவாசம் இதுதான். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

யாரிடமும் நான் பணம் கேட்காமல் வாசகர்கள் எப்படி தாங்களாகவே எனக்கு பணம் அனுப்புகிறார்கள்? வாசகர்கள் பலர் முகத்தை நான் நேரில் பார்த்ததுமில்லை. அவர்கள் யாரும் என்மேல் பரிதாபப்பட்டு அவர்களாகவே எனக்கு பணம் அனுப்பவில்லை. கர்த்தர் அவர்கள் உள்ளத்தில் ஏவினதால்தான் அவர்களெல்லாம் எனக்கு பணம் அனுப்பினார்கள். இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் என் ஊழியத்தின் வெற்றியின் இரகசியம்.

எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லோரும் (என்) சகல ஊழியத்துக்கும் ஏற்றவைகளை கர்த்தருக்கு காணிக்கை கொண்டுவந்தார்கள். யாத் 35:21.

இந்த வசன அனுபவத்தின்படிதான் எனக்கு இன்றைக்கும் பணம் வந்துக்கொண்டிருக்கிறது. எல்லாரும் என்னை எதிர்த்தபோதும், வெறுத்தபோதும் தொடர்ந்து குறையில்லாமல் காணிக்கை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு பெரும் அற்புதமாகும்.

இந்த ஜாமக்காரன் பத்திரிக்கை ஊழியம் அழியவேண்டும் என்று திருப்பாத்தூரில் அக்கினி அபிஷேக உபவாச கூட்டம் நடத்தும் அன்றைய நால்வர்அணி சகோ.சாம்ஜெபதுரை, சகோ.மோகன் சி.லாசரஸ், துதி சங்கர், வின்சென்ட் ராஜ், எபினேசர்பால் ஆகியவர்கள் ஜாமக்காரன் பத்திரிக்கை இனி ஒருகாலும் வெளிவரக்கூடாது என்பதற்காக ஜெபம் எறெடுத்தனர். எல்லா ஊழியர்களையும் குறைசொல்லும் அந்த பத்திரிக்கை ஊழியம் இனி எழும்பக்கூடாது என்று கத்துகத்தென்று தொண்டைகிழிய கத்தி அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட விசுவாசிகளுடன் சேர்ந்து ஜெபித்ததாக கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெரும்பாலானோர் என்னிடம் கூறி வருத்தப்பட்டார்கள்.

இப்படி எந்தெந்த ஊழியர்களைப்பற்றி அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி ஜாமக்காரனில் எழுதினேனோ அவர்கள் எல்லாரும் எனக்கு எதிரானார்கள். சகோதரர்களான ஜான் ரபீந்திரநாத், பால் ஆசிர்லாறி, ஆனந்தஸ்ரா, இராபின்சன், மோகன் சி.லாசரஸ், ஜான்சாமுவேல், ஜவஹர் சாமுவேல், வின்சென்ட் செல்வகுமார், சாதுசுந்தர் செல்வராஜ் (ஏஞ்சல் டிவி), ஆலன்பால் (ஆசீர்வாதம் டிவி), விக்டர் ஞானராஜ், பால்தினகரன், சேனாபதி சிஸ்வா பிரகாஷ், பாஸ்டர்.மோகன், பாஸ்டர்.அருள், ரூஹா ஆல்வின்தாமஸ், சகோதரி.ராக்கினிமேரி, நாகர்கோவில் இளங்கோ, எசேக்கியா பிரான்சிஸ், அருள்ராஜ், எலிசபெத் (விருத்தாசலம்), இன்னும் அநேக பிரசித்திபெற்ற ஊழியக்காரர்கள் பலரைப்பற்றியும் அவர்களின் பிழையான உபதேசங்கள், சிலரின் இரகசிய பாவங்கள், தவறான திருமண வாழ்க்கை ஆகியவைகளைப்பற்றி ஜாமக்காரனில் எழுதினேன். இவர்களில் பெரும்பாலானோர் ஜனங்களை வசனத்திலிருந்து விலக்கி தங்கள் கற்பனை தரிசனங்களை உபதேசமாக கூறி தங்களை ஜனங்கள் பின்பற்றும்படி செய்வதுபோன்ற இவர்களின் பல தவறான செயல்களை வாசகர்களுக்கு அறிவித்தேன். கிறிஸ்தவ மக்களையும், கிறிஸ்தவ சபைகளையும் தங்கள் பக்கமாக திருப்புதல் போன்ற மேலே குறிப்பிட்ட ஊழியர்களின் பல விஷயங்கள் ஜாமக்காரன் வாசகர்களை பாதித்தன. மேலே நான் குறிப்பிட்ட ஊழியர்கள் அனைவரும் ஒரே மாதிரி தவறுகளை செய்தார்கள் என்று நான் கூறவில்லை. பல்வேறு பிழையான உபதேசங்கள் காரணங்களுக்காக இவர்களைப்பற்றி ஜாமக்காரனில் எழுத வேண்டிவந்தது. இவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட எந்த பகையும், விரோதமும், பொறாமையும் இல்லை. இவர்களால் என் ஊழியம் ஒருநாளும் பாதிக்கப்பட்டதில்லை எனக்கும் இவர்களுக்கும் சம்பந்தமுமில்லை. என் ஊழியம் வேறு - இவர்கள் ஊழியம் வேறு. ஆனால், என் ஜாமக்காரன் வாசகர்களை இவர்கள் ஊழியங்கள் இவர்கள் பிரசங்கங்கள் இவர்கள் உபதேசங்கள் குழப்பும்போது அதனால் என் வாசகர்கள் பாதிக்கப்படும்போது வாசகர்கள் இவர்களைப்பற்றி எனக்கு எழுதி கேட்கும்போது, இவர்கள் பேசுவது வசனத்தின்படி சரிதானா? என்று வாசகர்கள் சந்தேகம் எழுப்பும்போது உடனே அவர்களுக்கு நான் பதில் சொல்வது என் கடமை. மேலே குறிப்பிட்ட ஊழியர்களை நேசிக்கும் அல்லது பின்பற்றும் பலர் என் வாசகர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவேதான் இவர்கள் என்னிடம் அவர்களைப்பற்றி விளக்கம் கேட்கிறார்கள்.

கர்த்தர் சொன்னார், கர்த்தர் வெளிப்படுத்தினார், நான் தினம் பரலோகம் - நரகம் ஆகிய இடங்களுக்கு போய் வருகிறேன். யூத ராஜா சிங்கத்தை ஆராதனை நடுவில் நிற்பதை நான் காண்கிறேன். கழுகு பறந்து சுற்றிவருகிறது. இயேசுவின் இரத்தம் கூட்டத்தில் உள்ளவர்கள்மேல் தெளிக்கப்படுகிறது. அந்த இரத்தக்கறை பலரின் உடைகளில் கண்டதாக கூறியசாட்சி, தேவதூதர்கள் என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

பரிசுத்த ஆவியானவரை நான் முகமுகமாக பார்த்து பேசினேன் என்று அபாண்டமான பொய் பேசுவது இயேசுகிறிஸ்து என் சட்டையை பிடித்து இழுத்து நிற்கும்படி சொன்னார், பிதாவுக்கு அடுத்த ஆசனத்தில் என்னை உட்காரும்படி கேட்டுக்கொண்டார்? அதிகாலை என் தினசரி ஜெபமே தடையுண்டாகும் வகையில் இயேசுகிறிஸ்து என்னிடம் மணிக்கணக்காக பேசுவார். அதனால் என் தனி ஜெபம் பலநாள் தடைப்பட்டது. இப்படி ஏராளமான பொய்களை மிக துணிகரமாக இவர்கள் அள்ளி வீசுகிறார்கள். மேலே குறிப்பிட்ட அனைவரும் அந்நியபாஷை என்ற பெயரில் பேசுபவர்கள் என்பதை கவனிக்கவேண்டும். அதுதான் இவர்களின் பெரும்பாலானவர்களின் பொய் ஊழியங்களுக்கு அஸ்திபாரமாகும்.

இவர்களின் பிரசங்கத்தால் வாசகர்கள் குழம்பி போய் என்னிடம் விளக்கம் கேட்கும்போது, வாசகர்களுக்கு எது சரி, எது தவறு என்றும் வசனம் என்ன சொல்கிறது? என்றும் வசனத்தை குறிப்பிட்டு இவர்கள் யாவரும் கூறுவது வேத வசனத்துக்கு விரோதமானது என்பதையும் ஆதாரத்துடன் ஜாமக்காரன் எழுதி அறிவிக்கிறேன். எனக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்ட வாசகர்களாகிய ஆடுகளைப்பற்றிய கணக்கை அவர்களின் மேய்ப்பனாகிய என்னைத்தானே கர்த்தர் கணக்கு கேட்பார். அவர்களை நீ எச்சரித்தாயா? இவைகளை அவர்களுக்கு அறிவித்தாயா? என்று என்னிடம் கர்த்தர் கேட்டால் நான் பதில் சொல்லவேண்டுமே!. கர்த்தருக்கு நான் பயப்படவேண்டுமா? மனிதருக்கு பயப்படவேண்டுமா? சொல்லுங்கள்!.

கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாமல் போனால்....... நான் பாவம் செய்தவனாவேன்... லேவி 5:1.

நாங்கள் கண்டவைகளையும், கேட்டவைகளையும் குறித்து பேசாமலிருக்கக்கூடாதே! அப் 4:20

இப்படி என் ஜாமக்காரனில் பல ஊழியர்களைக்குறித்து எழுதியதால் மேலே குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் என்னை மிகவும் பகைத்தார்கள் அல்லது வெறுத்தார்கள். இதன் காரணமாகத்தான் என்னிடம் குற்றம் சொல்லும் பிசாசின் ஆவி இருக்கிறது என்று இவர்கள் பகிரங்கமாக என்னைக்குறித்து பிரசங்கம் செய்துக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் பத்திரிக்கையிலும் என்னைப்பற்றி மறைமுகமாக தாக்கி எழுதினார்கள். சகோ.சாம்ஜெபதுரை அவர்கள் என்னைமட்டும் தாக்கி எழுதுவதற்காகவே யார்?யார்? என்ற பெயரில் ஒரு புத்தகத்தை அச்சிட்டு விற்பனை செய்தாரே!.


வக்கீல் நோட்டீஸ்சும் - கோர்ட்டும்:

மேலே குறிப்பிட்ட ஊழியர்களில் சிலர் என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார்கள். கூட்டமாக என் வீட்டுக்கு வந்து தாக்குதல் நடத்த போகிறோம் என்றார்கள். அப்போது நான் அவர்களிடம் நான் வீட்டில் இருக்கும் நாளில் நேரில் வாருங்கள் என்றேன்.

அக்கினி அபிஷேகம், பல நாட்கள் உபவாசம் கூட்டம் ஆகியவைகளை திருப்பத்தூரில் தொடர்ந்து நடத்தும் சகோ.சாம் ஜெபதுரை (அன்றன்றுள்ள அப்பம்) அவர்கள் எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதுதான் என் நீண்ட ஊழியத்தில் வாங்கிய முதல் வக்கீல் நோட்டீஸ் ஆகும். அதுவும் அவர் பரிசுத்த ஆவி பெற்றவர் என்று கூறிக்கொள்ளும், ஒரு பெந்தேகோஸ்தே ஊழியராகிய அவரிடமிருந்து நான் பெற்ற முதல் வக்கீல் நோட்டீஸ் ஆகும். இவர் அக்கினி அபிஷேகம் பெற்று அந்நியபாஷையை சரளமாக பேசும் ஒரு ஊழியர் என்று கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான ஆவிக்குரிய புத்தகங்கள் எழுதியவரும், தமிழ்நாட்டின் பிரபல ஊழியருமானவராகிய அவர் அனுப்பிய கோர்ட்டுக்கு என்னை அழைக்கும் வக்கீல் நோட்டீஸை கண்ட பல ஊழியர்கள் அதிர்ந்துப்போனார்கள். இதன்மூலம் தமிழ்நாட்டில் அந்நியபாஷையும், தரிசனங்களும் பரலோகம்போகும் அனுபவங்களையும், பெற்றதாக கூறும் இவர் சுபாவத்தைப்பற்றி இந்த வக்கீல் நோட்டீஸ் மூலம் கிறிஸ்தவ உலகம் இவரை புரிந்துக்கொள்ள ஏதுவானது.

நான் மேலே குறிப்பிட்ட ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் ஜெபத்தில் பெயர்களை அல்லது வியாதியின் பெயர்களை கூறும் பொய்யின் ஆவியை பெற்றவர்களாவர். நான் இவர்களைப்பற்றி ஜாமக்காரனில் எழுதியதை எத்தனைபேர் நம்பினார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் பெரும்பாலான மக்கள் இப்படிப்பட்ட ஊழியர்களைக்குறித்து எச்சரிக்கையானார்கள். இவர்களைப்பற்றி எழுதியதால் இவர்களின் அனுதாபிகளும், அவர்களிடையே உள்ள என் வாசகர்களும் உண்மையை தாமதமாக விளங்கிக்கொண்டு காணிக்கை எனக்கு அனுப்புவதை நிறுத்தியிருந்தார்கள். நிறுத்தப்பட்ட அந்த காணிக்கைகளை இப்போது அவர்கள் மறுபடியும் எனக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் ஆவியானவரின் கிரியையே அல்லாமல் என் எழுத்தின் சாமர்த்தியம் அல்ல.


CSIக்குள் புக இருந்த நவீன உபதேசத்தை தடுத்தேன்:

CSI சினாட் கூட்டத்தில் இயேசுவே நீரே அல்லாவாக இருக்கிறீர், நீரே முருகனாக இருக்கிறீர். உம்மை மூன்றுமுறை சுற்றிவந்து தாமரை பூக்களால் ஆராதனை செய்கிறோம் போன்ற ஆராதனை முறைமையையும் எம்மதமும் சம்மதம் என்ற புதிய கொள்கையையும் CSIக்குள் கொண்டுவர முயன்றார்கள். அதை ஜாமக்காரனில் அறிவித்து மொத்தமுள்ள 22 CSI டையோசிஸ்ஸிஸ்களையும் தங்கள் எதிர்ப்பை சினாட்டுக்கு தெரிவிக்கவேண்டும் என்று ஜாமக்காரன்மூலம் கேட்டுக்கொண்டேன். இவ்விஷயத்தில் கனம் வேதநாயக சாஸ்திரியார் அவர்களும் தன் எதிர்ப்பை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு என் எதிர்ப்பு சுற்றிக்கைக்கு தன் ஒத்துழைப்பை கொடுத்தார். இதன் காரணமான தென்னிந்திய திருச்சபை முழுவதும் சினாட்டின் நவீன உபதேசத்தைக்குறித்து தங்கள் எதிர்ப்பை சினாட்க்கு தெரிவித்தது. அதன் காரணமாக அந்த உபதேசம் சிஎஸ்ஐ சபை ஆராதனை கிரமத்தில் சேர்க்கப்படாமல் தடுக்கப்பட்டது. ஏராளமான பிஷப்மார்கள், ஆயர்கள், சபை கமிட்டி பொறுப்பாளர்கள் ஜாமக்காரனின் இந்த பணிக்கு நன்றி தெரிவித்தனர்.

இப்படி கிறிஸ்தவர்களுக்கு எதிரான வசனத்துக்கு எதிரான இன்னும் ஏராளமான செயல்களையும், உபதேசங்களையும் ஜாமக்காரன் மூலம் சுட்டிக்காட்டியதால் பெரும்பாலான சபை தலைவர்களின், பெரும்பாலான ஊழியர்களின், பெரும்பாலான கிறிஸ்தவர்களின் வெறுப்புக்கு உள்ளானேன். இதற்காகவேதான் ஜாமக்காரன் ஊழியத்தை கர்த்தர் என் கரத்தில் கொடுத்தார். நானும் அதைத்தான் நிறைவேற்றி முடித்தேன்.


கேரளா CSI டையோசிஸ்க்குள் நுழைந்த நவீன உபதேச பாம்பு:

CSI தென் கேரளா டையோசிஸ்ஸில் ஓணம் பண்டிகை, விஷு பண்டிகை ஆகியவைகளை, CSI ஆலயத்திலேயே கொண்டாடவேண்டும். ஆராதனையில் வாசிக்கப்படும் முதல் 3 வேத வாசிப்பில் ஒரு பாகம் கீதை புத்தகத்திலிருந்தும் எடுத்து வாசிக்கப்படவேண்டும் என்று கட்டளை பிறந்தது. ஏராளமான ஆயர்கள், சபை மூப்பர்கள் எனக்கு அந்த கட்டளை நகலை அனுப்பினார்கள்.

நான் அதை ஜாமக்காரனில் வெளியிட்டு கேரளத்தில் உள்ள ஒவ்வொரு சபையும், சபை கமிட்டியும் ஒன்றுகூடி புறமதத்தினரின் பண்டிகைகளை கிறிஸ்தவ ஆலயங்களில் கொண்டாடகூடாது - கீதை சபை ஆராதனையில் வாசிக்ககூடாது என்று கமிட்டி மினிட்ஸில் எழுதி சட்டப்படி பிஷப்புக்கும், சினாட்டுக்கும் மாடரேடட்டருக்கும் அனுப்புங்கள் என்று ஆலோசனை கூறினேன். என் தனிப்பட்ட சார்பில் நானும் ஜாமக்காரனில் அதன் ஆபத்தைக்குறிப்பிட்டு எழுதினேன். அந்த ஆபத்தான உபதேசத்தை அறிந்த வாசகர்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பை கடிதம்மூலம் தனிப்பட்ட முறையில் பிஷப்புக்கும், மாடரேட்டருக்கும் எழுதி அறிவிக்க சொன்னேன். அதன் பிறகுதான் பிஷப் அவர்கள் தான் எழுதிய அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கினார். சம்பந்தப்பட்ட திருமண்டலத்தின் ஆயர்கள் CSI டையோசிஸ்ஸை காப்பாற்றிய ஜாமக்காரனுக்கு நன்றி என்று அறிவித்து எனக்கு கடிதம் எழுதினார்கள். இதன்மூலம் அந்த குறிப்பிட்ட பிஷப்பும் என்னை வெறுத்தார். இதில் நான் செய்த தவறு என்ன? ஜாமக்காரனின் வேலையை வாசகர்களுக்காக சபைகளின் நன்மைக்காகத்தானே இதை செய்தேன்!.

என் ஜாமக்காரன் பத்திரிக்கை ஊழியத்தின் மூலம் எனக்கு ஏற்பட்ட விதவிதமான பிரச்சனைகளை வாசித்தீர்கள். என் ஜாமக்காரன் பத்திரிக்கை காரணமாக எனக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும், உள் ஊரிலும் எனக்கு எப்போதும் ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறதை நான் அறிவேன்.


CSI சபையிலிருந்து நீக்க முயற்சி

CSI சபையில் இருந்துக்கொண்டே CSI பிஷப்மார்களின் ஊழல்களைப்பற்றி எழுதியதாலும், சுனாமி பாதிப்பு பண உதவிக்காக அமெரிக்காவிலுள்ள ERD என்ற ஸ்தாபனம்மூலம் வந்த பல கோடி ரூபாய்களை CSI மாடரேட்டர், CSI பொதுசெயலர், பொருளாளர் யாவரும் சேர்ந்து அடித்த கொள்ளைகள் அந்த கொள்ளையில் பங்கு வாங்கிய பல டையோசிஸ்ஸை சேர்ந்த பிஷப்மார்களும் உண்டு. அவர்களின் பெயர்களையும் கொள்ளையடித்த விவரங்களையும், ஒரே நாளில் பல கோடிகளை பேங்கில் சேர்த்த விவரங்களையும் ஆதாரத்தோடு ஜாமக்காரனில் வெளியிட்டேன்.

கொள்ளையில் சம்பந்தப்பட்ட சிஎஸ்ஐ சபைகளின் மாடரேட்டர், பிஷப் ஆகியவர்களைத்தவிர மற்றவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்கள். அமெரிக்கா ஸ்தாபனம் இந்தியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனுப்பப்பட்ட உதவி நிதியை பெற்ற சிஎஸ்ஐ டையோசிஸ்பற்றியும் அதை நிர்வாகிக்கும் பிஷப்மார்களின் பெயர்களின் பட்டியல் ஆகியவற்றை அமெரிக்கா EDR என்ற உதவி நிறுவனம் இமெயில் மூலம் அனுப்பிய ஆதாரத்தை அப்படியே ஜாமக்காரனில் வெளியிட்டேன். தங்கள் பெயர் ஜாமக்காரன் மூலம் வெளிவந்ததை அறிந்த பல பிஷப்மார்களுக்கு என்னை பிடிக்கவில்லை. இதனால் தவறு செய்த பிஷப்மார்கள் யாவரும் என்மேல் வெறுப்பு கொண்டார்கள். கடல் இல்லாத ஊர்களில் உள்ள பிஷப்மார்கள்கூட சுனாமி உதவி எனக்கும் வேண்டும் என்று கொள்ளையில் பங்கு வாங்க சென்றதை அறிந்த அந்த அமெரிக்கா ஸ்தாபனம் நம்மைப்பற்றி எத்தனை கேவலமாக நினைத்தனர் என்பதை நான் அமெரிக்கா சென்றபோது நேரில் அவைகளை கேட்டு அறிந்தேன். சுனாமி கொள்ளை விவரம் தினசரி பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது. CSI விசாரணைமூலம் குற்றவாளிகள் அகப்பட்டார்கள். ஆனால் கொள்ளையடித்த பணம் பல கோடிகளை CSI சினாடு கொள்ளையடித்தவரிடமிருந்து இன்னும் திரும்ப பெறவில்லை. பணம் வாங்கிய கணக்குகளும் CSI சினாடுக்கும் சமர்பிக்கப்படவில்லை. இந்த கொள்ளை சம்பவம் இங்கிலாந்தில் பிரபல பத்திரிக்கையிலும் வெளிவந்தது. CSI மீது உலக அளவில் உண்டான களங்கத்தை நீக்க ஜாமக்காரன் முயன்றது தவறா? என்பதை நீங்களே கூறுங்கள்!. இதன் காரணமாக என்னை வெறுத்த சிஎஸ்ஐ சபை பிஷப்மார்கள் குறிப்பாக கோவை, மதுரை திருமண்டல முன்னாள் பிஷப்மார்கள் வேறு சிலரோடு இணைந்து CSI சினாட்மூலம் (டாக்டர்.புஷ்பராஜாகிய) என்னை CSI சபையிலிருந்து முழுவதுமாக நீக்க Excommunicate செய்ய பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால் அவர்களால் இயலவில்லை. ஆனால் கர்த்தாரோ அந்த பிஷப்புகளையே பதவியிலிருந்தும் உலகத்திலிருந்தும் நீக்கினார்.


ஜாமக்காரன் பத்திரிக்கையால் எனக்கு வந்த ஆபத்துகளும் - தாக்குதலும்: இரகசிய தாக்குதலும் - கொலை மிரட்டலும்:

தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தில் CSI டையோசிஸ் கன்வென்ஷன் நடந்தது. அதில் நான் பிரசங்கிக்க அழைக்கப்பட்டிருந்தேன். நான்கு நாட்கள் கன்வென்ஷன். முதல்நாள் கூட்டத்துக்கு காரில் வந்து இறங்கினேன். எனக்கு பின்னே ஒரு கார் கூடவே தொடர்ந்ததை நான் அறியவில்லை. அந்த காரில் நான்கு பேர் சபாரி உடை அணிந்தவர்களாக காரிலிருந்து இறங்கி, என் கார் அருகேவந்து காரின் கதவை திறந்தார்கள். மேடையிலிருந்து ஆயர்கள் என் கரங்களை குலுக்கி வணக்கம் கூறி மேடைக்கு என்னை அழைத்து சென்றார்கள். மேடையில் பிஷப் அவர்களுடன் சுமார் 30 ஆயர்கள் அமர்ந்திருக்க, பிஷப் அவர்கள் என்னை வரவேற்றார். பிரசங்க நேரம் வந்தது. பிரசங்கிக்க மைக் அருகே சென்றேன். நான் பேசும்போது இரண்டுபேர் வலது - இடது பக்கங்களில் நின்றார்கள். மைதானத்தில் எல்லா மக்களும் என் பிரசங்கத்தை கவனித்த நிலையில் இரண்டு பேர்கள்மட்டும் மைதானத்தில் உட்கார்ந்திருக்கும் ஜனங்களை பார்த்தப்படி நின்றுகொண்டிருந்தார்கள். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. மறுநாளும் அதே காட்சி, இரண்டாம் நாள் கூட்டம் முடிந்த உடன் ஆயர்களை பார்த்துகேட்டேன். இது என்ன புதுவித மரியாதை நான் தங்கிய பங்களாவின் கேட்டில் இரவு - பகல் இரண்டு ஆட்கள் கண்விழித்து உட்கார்ந்திருக்கிறார்கள் - பிரசங்கம் செய்யும்போது இரண்டு ஆட்கள் என் அருகே நிற்கிறார்கள். என் கார் வரும்போது என் காரின் பின்னே மற்றொரு காரில் 6 பேர் கூடவே வருகிறார்கள். இதெல்லாம் என்ன? என்றேன்.

ஆயர்கள் தயங்கியபடி கூறியது. உங்களை தீர்த்துகட்டபோவதாகவும், உங்களை தாக்கி கை, கால்களை முறித்துபோடபோவதாக எழுதி இரத்தத்தில் கையெழுத்திட்டு சில ஊழியர்களின் விசிறிகள் பிஷப்புக்கு இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார்கள். ஆகவே பிஷப்பும், கமிட்டியும் பயந்து சென்னையிலிருந்து வாடகைக்கு பாதுகாப்பாளர்களை பிளாக் கேட் (Black Cat) என்று அழைக்கப்படுபவர்களை பல ஆயிர ரூபாங்களை கொடுத்து அழைத்து வந்து இந்த ஏற்பாடுகளை செய்துள்ளோம். நீங்கள் கூட்டம் முடித்து ஊர் திரும்பும்வரை உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவே இந்த ஏற்பாடு என்றார்கள். எனக்கு கோபமும் - ஆத்திரமும் உண்டானது. ஒரு ஊழியனுக்கு இப்படி ஒரு பாதுகாப்பு வெட்கக்கேடானது. முன்னாள் பிரதமர்.இந்திராகாந்தி அம்மையார் அவர்களுக்கு உயிர் பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்ப்பட்ட தேசபக்தி உள்ள நபர்கள்தானே இந்திராகாந்தி அவர்களை சுட்டுக்கொன்றார்கள். மனுஷர்களின் பாதுகாப்பு எப்படிப்பட்டது என்பது விளங்குகிறதா?. கர்த்தர் நகரத்தை காவாராகில் காவல் காக்கிறவர்களின் பிரயாசம் விருதா என்று சங் 127ல் வாசிக்கவில்லையா? இப்படிப்பட்ட பாதுகாப்பு நபர்களை நான் தங்கின வீட்டிலோ என் பின்னாலோ, கூட்டத்திலோ இனி நான் கண்டால் பிரசங்கம் செய்யமாட்டேன். மேடையிலும் ஏறமாட்டேன் என்று கண்டிப்பான முறையில் அறிவித்தேன். நான் கூறியபடி செய்வேன் என்று அவர்கள் அறிவார்கள். அதை பிஷப்பிடமும், கமிட்டியிடமும் அறிவித்து மறுநாள் முதல் அந்த வாடகை பாதுகாப்பாளர்களை நான் காணாதபடி மறைத்து உட்கார வைத்திருந்தனர்.

ஊழியக்காரர்களின் வெறுப்பும், கோபமும் என்மேல் எவ்வளவு ஆழமாக சென்றது என்பதை இதன்மூலம் அறியலாம். வாடகை கொலையாளிகளை ஏற்பாடு செய்யும் அளவு அபிஷேகிக்கப்பட்ட, வரம் பெற்ற, தினம் பரலோகம் போய்வருகிற, பிசாசுகளை துரத்துகிற, கோபுரங்களை கட்டுகிற வரம் பெற்ற ஊழியர்களின் அல்லது அவர்களின் நண்பர்களின் குரூர கொலை திட்டங்களை கண்டீர்களா?.

ஒருவர் மொபைலில் பதிவு செய்த சில பிரபல ஊழியர்களின் சம்பாஷணைகளை சில மாதங்களுக்கு முன் எனக்கு போட்டு காட்டினார்கள். அதில் ஒருவர் சிரித்துக்கொண்டே டாக்டர்.புஷ்பராஜ் இப்படி தொடர்ந்து எல்லா ஊழியர்களின் குற்றங்களையும் சுட்டிக்காட்டி எழுதி அவமானப்படுத்துகிறாரே, யாராவது இரண்டு தட்டு தட்டினால்தான் அவர் அடங்குவார் என்று அவர் கூறியபோது, அந்த கூட்டத்தில் உள்ள ஒருவர் அந்த பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள் என்று கூற அதைக்கேட்டு பலர் சிரித்து மகிழ்வதை அந்த மொபைல் பதிப்பில் கேட்டேன். அதை என்னிடம் போட்டு காட்டியவர், "டாக்டர் இதை உங்களுக்கு பதிவு செய்து தரட்டுமா?" என்றார். அதற்கு நான் "ஏன் போலீஸில் இதை ஆதாரமாக காட்டவா? நாம் இயேசு கிறிஸ்துவின் ஊழியர்கள் இதையெல்லாம் நாம் கேட்டும் கேட்காமல் இருப்பதைபோல் போவதுதான் சரியான சாட்சி. இதற்கெல்லாம் நடவடிக்கை எடுத்தால் மற்றவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்!".

கோயமுத்தூர் திருமண்டலத்தின் பிஷப் அவர்களைப்பற்றி நான் எழுதிய போதும், கேரளாவில் மார்தோமா சபையின் பிஷப் ஒருவரின் பாலியல் பாவத்தைப்பற்றி நான் எழுதியபோதும் ஏராளமான மிரட்டல்கள் எனக்கு வந்துக்கொண்டேயிருந்தது. மொட்டை கடிதங்களும், இ-மெயில் மூலம் மிரட்டல்களும் எனக்கு வந்த வண்ணமிருந்தது.

இப்படி ஜாமக்காரனில் பிரச்சனைக்குறிய விஷயங்கள் ஒவ்வொருமுறையும் எழுதும்போதுதெல்லாம் மிரட்டல்கள், கெட்ட வார்த்தைகளில் திட்டி (ஏசி) எழுதும் கடிதங்கள் ஏராளமாக எனக்கு வரும்!.

பத்திரிக்கைக்கு ஜாமக்காரன் என்ற பெயர் கொடுக்கப்பட்டபோதே ஜாமக்காரனின் வேலை என்ன? என்று வேதத்தில் வாசித்து அறிந்தபோதே இந்த ஊழியத்தின் மூலம் உண்டாகபோகும் ஆபத்தையும் ஏற்படபோகும் அவமானத்தையெல்லாம் அறிந்து, நானும் அவைகளை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து அதை எதிர்க்கொள்ளும் சகல ஆவிக்குரிய ஆயத்தத்துடன்தான் இந்த பத்திரிக்கை ஊழியத்தில் இறங்கினேன். வீட்டில் உள்ள யாரும் இதை விரும்பமாட்டார்கள் என்பதையும் அறிந்து, உணர்ந்துதான் இந்த ஊழியத்தை இப்போதும் நான் தொடருகிறேன்.


ஜாமக்காரன் அச்சக உரிமையாளருக்கு மிரட்டல்:

என் பத்திரிக்கையை ஆரம்ப காலங்களிலிருந்து அச்சடிக்கும் அச்சக உரிமையாளருக்கு வக்கீல் நோட்டீஸ்போல பல வக்கீல்களின் பொய்யான கையெழுத்திட்டு பல மிரட்டல் கடிதங்களை பலமுறை அனுப்பினார்கள். ஜாமக்காரன் பத்திரிக்கையை நீங்கள் தொடர்ந்து அச்சடித்தால் அரசியல்ரீதியாக நீங்கள் பிரச்சனைகளை சந்திக்கவேண்டிவரும் என்று எழுதினார்கள். அச்சகருக்கும் - ஜாமக்காரனில் நான் எழுதும் விஷயங்களுக்கும் என்ன சம்பந்தம். இப்படி பல வழிகளில் பல வருடங்களாக ஜாமக்காரன் பத்திரிக்கை வெளிவருவதை தடைசெய்ய பிசாசும் அவனுக்கு உதவியாக ஊழியர்களும், கிறிஸ்தவர்களும் முயன்றுக்கொண்டேயிருக்கிறார்கள்.


ஜாமக்காரனுக்கு வெளிநாட்டு அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல்:

1984ம் ஆண்டு புலம்பெயர்ந்த இலங்கை இந்துமத தமிழர்களிடையே சுவிசேஷம் அறிவிக்க கர்த்தர் எனக்கு நல்ல வாசலை திறந்தார். அதன்மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் இரட்சிக்கப்பட்டனர். ஜெர்மனியில் வீல் (WEEL) என்ற இடத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்ட அத்தனைபேர்களுக்கும் நானே முதன் முறையாக ஞானஸ்நானம் கொடுத்தேன். அதன்பின் அவர்களிடையே சபைகள் உருவாயின - உருவாகின. அந்த சபைகளுக்குள் இந்திய ஊழியர்களின் மூலமாக அந்நியபாஷை உபதேசம் பிரவேசித்தன. அதன் காரணமாக சபைகள் கண்ணாடி துண்டுகளாக சிதறின. வருகிற இந்திய ஊழியர்கள் சபையில் உள்ள பலரை பாஸ்டர்களாக்கிவிட்டார்கள். அதுவே பல சபைகள் ஆங்காங்கு உடைய காரணமாயின.


பிரச்சனையின் ஆரம்பம்:

ஆரம்ப காலங்களில் வெளிநாட்டு இலங்கை தமிழர்களின் சபைகள் ஒன்றாக இருந்தபோது ஒவ்வொரு மாநிலத்தில் (Province) உள்ள இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட இலங்கை தமிழர்களை ஒரு பெரிய மண்டபத்தில் ஒரு நாளில் அவர்களை ஒன்று திரட்டி 3 நாட்கள் கூட்டங்களை அந்த தமிழர்கள் ஒற்றுமையுடன் ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் யாவரும் அந்த பெரிய மண்டபத்தில் ஒன்று திரண்டனர். கூட்டம் தொடங்கியது, பாடல்நேரம் முடிந்தது. திடீரென்று இலங்கை தமிழ் இயக்க வீரர்கள் 9 பேர் மண்டபத்தின் உள்ளே நுழைந்தனர். இத்தனை திரளான தமிழர் கூட்டத்தை ஜெர்மனியில் ஒரே இடத்தில் ஒன்று கூடியதை இதுநாள் வரை நாங்கள் கண்டது இல்லை - ஆகவே நாங்கள் மேடையேறி இவர்களோடு பேசவேண்டும் எங்கள் நாட்டைக்குறித்து என்றனர். கூட்ட ஏற்பாடு செய்த தம்பிமார் எங்களுக்கு தெரியாது. இந்தியாவிலிருந்து எங்களை கிறிஸ்துவில் வழிநடத்தின டாக்டர் அங்கு உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் அனுமதி கேளுங்கள் என்றனர். அப்படியே அவர்கள் என்னிடம் உத்தரவு கேட்டார்கள். நான் சொன்னேன் இது அரசியல் மேடையல்ல. கடவுளைப்பற்றி பேசும் ஆவிக்குரிய மேடை என்றேன். உடனே அவர்களுக்கு கோபம் வந்தது. இலங்கையில் இரத்த ஆறு ஒடிக்கொண்டிருக்கிறது. இங்கு மதப்பிரச்சாரம் செய்கிறீர்களே? இது நியாயமா? என்றனர். நான் சொன்னேன். இலங்கை மக்களுக்காக குறிப்பாக இலங்கை தமிழர்களுக்காக ஜெபிக்கவே நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம் என்றேன். இங்கு நீங்கள் எல்லாம் சேர்ந்து ஜெபித்தால் இலங்கை தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்குமா? தேசம் இருந்தால்தான் மக்கள். மக்கள் இருந்தால்தான் மதம், கடவுள் எல்லாம் என்பதை உணருங்கள் உங்கள் இந்தியாவில் ஒரு காந்தியின் தியாகத்தால் சுதந்திரம் கிடைத்தது. அதை நினைத்துப்பாருங்கள். எங்கள் மக்களின் எண்ணங்களில் நாட்டுப்பற்றை நீக்கி கடவுளை வலுக்கட்டயமாக திணித்து அவர்களை சன்னியாசிகளாக மாற்றிவிடாதீர்கள் என்று கூறினார்கள்.

நான் சொன்னேன். சகரியா: 4:6ல் (Good News Bible) மொழிபெயர்ப்பில் Not By Army not by Force, But my spirit will do என்று எழுதியுள்ளது. ராணுவத்தாலும் செத்தை சரியாக்க முடியாது, தீவிரவாத்தாலும் சரியாக்க முடியாது. ஆனால் என் ஆவியால் (கடவுளால்) அது முடியும் என்று மொழிபெயர்த்த அந்த வேத பகுதியை வாசித்து சொன்னேன். எங்கள் வேதம் இப்படி போதிப்பதால் இந்த வசனத்தின்படி தேசத்துக்காக நாங்கள் ஜெபிக்கபோகிறோம். நான் ஜெபித்தபின் நீங்கள் என்ன பேச நினைக்கிறீர்களோ அதை பேசலாம் என்றேன். மௌனமாக உட்கார்ந்துவிட்டனர். என் பிரசங்க செய்தி முடிந்தது. முதலில் மனந்திரும்புதலுக்காக ஜெபித்தேன். ஏராளமானவர்கள் ஒப்புக்கொடுத்தனர். அதன்பின் இலங்கை தேசத்துக்காக குறிப்பாக இலங்கை தமிழர் மக்களுக்காக ஜெபித்தேன். அப்போது அந்த மண்டபமே அதிரும்படி மக்கள் கதறிக் கதறி அழுது ஜெபித்தனர். கர்த்தாவே எங்கள் தேசத்தை காப்பாற்றும் என்று அவர்கள் அழுத சத்தம் அந்த போராளிகளை யோசிக்க வைத்தது. கூட்டம் முடிந்து நானே ஆசீர்வாதம் கூறிவிட்டு மேடையைவிட்டு இறங்கினேன். ஆனால் அந்த போராளிகள் மேடை ஏறவில்லை.

மண்டபத்தின் வாசலில் நின்று தங்கள் நாட்டு சம்பந்தமான துண்டு பிரதிகளை விநியோகம் செய்தனர். சில மாதங்கள் கழித்து அவர்கள் எனக்கு கடிதம் எழுதினார்கள். நீங்கள் இலங்கை தமிழர்களை மதம்மாற்றி அவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றியதால் இப்போது அவர்கள் எங்களுக்கு (போராளிகளின்) இலங்கை போராட்டத்துக்கு பணம் கொடுப்பதை குறைத்துக்கொண்டார்கள். சிலர் பணம் கொடுப்பதை அறவே நிறுத்தியும் விட்டனர். ஆகவே அடுத்த மாத ஜாமக்காரனில் இலங்கை தமிழ் போராளிகளுக்கு வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்களை பணம் கொடுக்க சொல்லி நீங்கள் எழுதவேண்டும். இது கண்டிப்பான உத்தரவு. நாங்கள் கூறுகிறபடி ஜாமக்காரனில் அந்த அறிவிப்பை தாங்கள் எழுத தவறிவிட்டால் உங்களுக்கு தபாலில் குண்டு வரும்! ஜாக்கிரதை! என்றார்கள்.

நான் இதுவரை இலங்கை தமிழர்களிடையே ஊழியம் செய்யும்போது எந்த அரசியலைப்பற்றியும் பேச மாட்டேன். இலங்கை தமிழ் போராளிகளுக்கு கொடுங்கள் என்றும் பேசவில்லை. கொடுக்காதீர்கள் என்றும் நான் பேசினதில்லை. அது அவரவர் விருப்பம். அவர்கள் போராட்ட விஷயத்தில் நான் தலையிடுவதேயில்லை - கருத்து பரிமாறிக்கொள்வதுமில்லை.

ஊழியத்தைப்பற்றி கூறும்போதும் இலங்கை மக்கள், இலங்கையில் உள்ள ஊழியங்களை தாங்கவேண்டும். அவர்கள் இந்திய ஊழியத்தை தாங்ககூடாது. இந்திய ஊழியத்தைப்பற்றி இந்தியர்களிடம்தான் கர்த்தர் கணக்கு கேட்பார். அதுபோல் இலங்கை ஊழியத்தைப்பற்றி இலங்கை மக்களோடுதான் கர்த்தர் கணக்கு கேட்பார் என்று திட்டவட்டமாக கூறினேன். நான் எந்த பண வசூலுக்கும் வந்தவன் அல்ல என்பதையும் எல்லாருக்கும் அறிவித்தேன். என்றாலும் இலங்கை தமிழ் போராளிகளுக்கு என்மேல் இந்த விஷயத்தில் வெறுப்பு உண்டு என்பதை அறிந்தேன். அதனால் என் குடும்பத்தினர் பல மாதங்கள் பயத்தோடு ஒவ்வொரு நாளையும் கழித்தார்கள். அப்போது என் பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தனர். எனக்கு வரும் தபாலில் கவர்கள், பார்சல்கள் எதையும் பல மாதங்கள் என் அலுவலகத்தில் பிரிக்க பயந்தனர். தபாலில் குண்டு வரும் என்று அவர்கள் எழுதிய வார்த்தை (என்னைத்தவிர) என் குடும்பம் முழுவதையும் பயமுறுத்தின.

காலங்கள் கர்த்தருடைய கரத்தில் எழுதப்பட்டுள்ளது.
என் ஆயூசும் அவர் கரத்திலேயே உண்டு. அவர் அனுமதிக்காது
யாரும் என் உயிரை பறிக்க இயலாது.


சபை காணிக்கை எங்கு போகிறது?

வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழ் கிறிஸ்தவர்கள் கூடும் சபைகளில் விசுவாசிகள் போடும் காணிக்கை அரசாங்கத்துக்கு அதில் பாதி தொகை மட்டுமே காட்டப்படும். மீதி தொகை எங்கு போகிறது என்பதை சபை மக்கள் அறியார்கள். அது கணக்கில் வரவு வராது. சபை மக்கள் இந்த சந்தேகத்தை எனக்கு எழுதி கேட்டனர். நான் அதை சபை பாஸ்டர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் பதில் எழுதவில்லை.

பொதுவாகவே இந்தியாவில் உள்ள பெந்தேகோஸ்தே சபையில் மக்கள் இடும் காணிக்கையின் வரவு-செலவு சபையில் உள்ள எந்த விசுவாசிகளுக்கும் தெரியாது. பாஸ்டருக்கு மட்டுமே தெரியும் இதைக்குறித்து ஜாமக்காரனில் முன்பே எழுதினேன். வெளிநாட்டு இலங்கை தமிழ் பெந்தேகோஸ்தே சபைகளிலும் சபை மக்களின் காணிக்கையின் வரவு-செலவு சபைமக்களுக்கு தெரியாது. சபை மூப்பர்களுக்கும் தெரியாது.

வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழ் சபைகளின் காணிக்கைகளில் ஒரு பெரும்பகுதி இலங்கை தமிழ்போராளிகளுக்கு அனுப்பப்படுகிறதாக அறிந்தேன். அவர்களும் நாட்டுக்காக இரத்தம் சிந்தியவர்கள். அவர்களுக்கு பணஉதவி செய்வதில் பிழையில்லை. அவர்களின் அணுகுமுறைதான் பிரச்சனைக்குறியதே தவிர அவர்களின் தியாகம் போற்றதக்கதாகும். அந்த தியாகம் சாதாரணமானதல்ல என்பதை நான் அறிவேன். அதைக்குறித்து இதுவரை அது சரியா? தவறா? என்று எந்த அபிப்பராயத்தையும் நான் யாரிடமும் கூறினதில்லை. கூறப்போவதும் இல்லை. காரணம் அது என் வேலை அல்ல - அது அவர்கள் பிரியம்.


பாவதொடர்புடையவர்கள் பாஸ்டராக ஊழியம் செய்கிறார்கள்:

வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழ் கிறிஸ்தவ சபைகளில் பல சபைகளில் உள்ள பாஸ்டர்கள் ஊழிய அழைப்பு இல்லாதவர்கiளானதால் மனைவி-பிள்ளைகள் உயிரோடு இருக்கும்போதே - வேறு பெண்களோடு தொடர்பு வைத்துக்கொண்டவர்களாக இருந்ததை நானே நேரில் அறிந்தேன். அந்த குடும்பங்களையும் அறிந்தேன். குறிப்பாக சுவிஸ்ஸர்லார்ந்து, லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இப்படிப்பட்ட பாவம் சர்வசாதாரணம். மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்ற தீர்க்கதரிசன வசனத்துக்கு இந்த பாஸ்டர்கள் கூறும் விளக்கம். மாம்சம் என்றால் பாவம் - பாவம் செய்தவர்கள்மேல் பரிசுத்தாவியை கர்த்தர் ஊற்றுகிறார். ஆகவே நாங்கள் பாவிகளானாலும் பரிசுத்த ஆவியானவர் எங்கள்மேல் ஊற்றப்பட்டிருக்கிறார் என்று தங்கள் பாவத்தை நியாயப்படுத்தி விளக்கம் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் ஆவிக்குரிய நிலை எத்தனை தாழ்ந்திருக்கிறது என்பதை அறியவேண்டும்.

இஸ்லாமிய மதத்தில் கணவரின்-மனைவியை அவர் புருஷன் உயிரோடு இருக்கும்போதே அவளை ஒரு பாஸ்டர் தனக்கு மனைவியாக திருமணம் செய்துள்ளார். இப்படிப்பட்டவர் ஒரு பெரிய சபைக்கு பாஸ்டராக இருக்கிறார். சபை மக்களுக்கு தெரியும். - இதைப்போலவே மற்றொரு பெரிய பாஸ்டர் பெண் தொடர்பில் பிடிப்பட்டார். அந்த பெண்கள் எனக்கு எழுதி கடிதம் அவருக்கு தெரிவித்தேன். ஆனால் இப்படிப்பட்ட பாஸ்டர்களை இந்தியாவில் உள்ள (AOG) பாஸ்டர்.மோகன் - நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் இவர்கள் அடிக்கடி இந்த பாஸ்டர்களுடைய சபையில் சென்று பிரசங்கம் செய்து மிகப்பெரிய தொகையை காணிக்கையாக வாங்கிக்கொண்டு வருகிறார்கள். இவர்கள் எல்லாருக்கும் இந்த பாஸ்டர்களின் பாவ தொடர்புகளுக்கும் இவரைபற்றிய சபை மக்கள் எழுதிய பாவ குற்றச்சாட்டுகளின் கடிதங்களும் வாசித்திருக்க வேண்டும். காரணம் அதே கடிதங்கள் எனக்கும் அனுப்பப்பட்டது.

தவறு செய்யும் ஊழியர்களை வெளிப்படையாக கண்டித்து பேசும் தமிழ்நாட்டு பிரபல ஊழியர்கள்கூட இப்படிப்பட்ட பாஸ்டர்கள் தங்கள் இடத்துக்கு வரவழைத்து பல கூட்டங்களை நடத்தி அவர்களை சந்தோஷப்படுத்தி அனுப்பியுள்ளார்கள். ஆனால் பல வருடங்களுக்கு முன்பே இந்த நாடுகளுக்கு பலமுறை சென்று வந்ததால் பல ஆதாரங்களோடு பாவ விவரங்களை ஜாமக்காரனில் எழுதி வாசகர்களுக்கு அறிவித்தேன்.

ஆனால் இவர்களும் அப்படிப்பட்ட பாஸ்டர்களின் தவறான நடத்தைகளைக்குறித்து கண்டிக்கவில்லை. அதைக்குறித்து அவருக்கே அறிவித்து உணர்த்த மனதில்லை. தவறு செய்யும் ஊழியர்களை வெளிப்படையாக கண்டித்து பேசும் குறிப்பிட்ட தமிழ்நாட்டு பிரபல ஊழியர் ஒருவர் உண்டு. அவரும்கூட இப்படிப்பட்ட பாஸ்டர்களை தங்கள் இடத்துக்கே வரவழைத்து அவர்களை வைத்து பல கூட்டங்களை இந்தியாவில் நடத்தி அவர்களை சந்தோஷப்படுத்தி அனுப்பியுள்ளார்கள். இப்படிப்பட்ட ஊழியரின் ஆவிக்குரிய நிலைபாடும் கேள்விக்குறியானது. பல வருடங்களுக்கு முன்பே இந்த நாடுகளுக்குநான் பலமுறை சென்று வந்ததால் இவர்களைப்பற்றிய இவர்களின் பாவ விவரங்களை பல ஆதாரங்களோடு அந்தந்த நாட்டு வாசகர்கள் அறியவேண்டி ஜாமக்காரனில் எழுதி அறிவித்தேன்.


சேலத்தில் என் வீடு தாக்கப்பட்டது:

சுவிட்ஸ்ஸர்லாந்து தேசத்தில் உள்ள சபைகளிடமிருந்து உதவி பெரும் ஊழியர்கள் தமிழ்நாட்டில் உண்டு. இவர்கள் சுமார் 69 சபைகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். என்மேல் கோபம்கொண்ட சுவிட்ஸ்ஸர்லாந்து பாஸ்டர் இவர்களை தூண்டிவிட்டு இவர்களுக்கு பணம் கொடுத்து என்னை மிரட்டவும், தாக்கவும் ஏற்பாடு செய்தார். இந்த பாஸ்டர்கள் சில ரவுடிகளை தனி வேனில் ஏற்றிக்கொண்டு சென்னையிலிருந்து சேலம் வந்து நான் வீட்டில் இல்லாதபோது வீட்டில் பத்திரிக்கைகள் தபாலில் சேர்க்க விலாசங்கள் ஒட்டும் வேலை நடந்ததுகொண்டிருக்கும்போது வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை என்று இவர்கள் அறிந்து வீட்டில் நுழைந்து ஜாமக்காரன் பத்திரிக்கைகளை எடுத்து வாரி இறைத்து அவைகளை கிழித்து வீதிவரை கொண்டுபோய் சிதறிபோட்டுவிட்டு போய்விட்டனர்.

இந்த கூட்டத்துக்கு சென்னை சித்தலபாக்கம் பாஸ்டர்.அன்பழகன் என்பவர் தலைமை தாங்கி சேலத்தில் கள்ளக்குறிச்சி, ஆத்தூர் பாகங்களில் சபை நடத்தும் சில ரவுடி பாஸ்டர்களையும்கூட அழைத்துக்கொண்டு என் வீட்டுக்குவந்து அதம்செய்துவிட்டு திரும்பினார்கள். எங்களுக்கு பணஉதவி செய்யும் சுவிஸ் நாட்டு பாஸ்டர்களை எப்படி ஜாமக்காரனில் அவர்களுடைய பாவங்களைக்குறிப்பிட்டு எழுதலாம் என்று கூச்சலிட்டு சென்றனர். அதில் இரண்டு பாஸ்டர்கள் அநேக மாதங்களுக்கு பிறகு அன்று என் வீட்டில் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு எனக்கு கடிதம் எழுதினார்கள். அவர்கள் எல்லாரும் இந்தியாவில் தாங்கள் இன்னும் அகதிளாக இருப்பதை மறந்து இப்படிப்பட்ட சாட்சியில்லா செயலை புரிந்தனர். போலீஸ் புகார் செய்திருந்தால் போலீஸ் அவர்களை நாடு கடத்தியிருக்கும். நான் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.


விடுதலை புலிகளின் தாக்குதல்:

சில மாதங்கள் கழித்து விடுதலை புலிகளின் தலைமை இடமான சுவிட்ஸ்ஸர்லாந்து தலைமை அலுவலகத்திலிருந்து எனக்கு எச்சரிக்கை கடிதம் வந்தது. அந்த கடித்தைப்பற்றி நான் இதுவரை யாரிடமும் கூறியதில்லை - பத்திரிக்கையிலும் வெளியிட்டதில்லை. அந்த கடிதத்தில் அவர்கள் எழுதியதாவது: எங்களுக்கு உதவும் பலநாடுகளில் உள்ள பாஸ்டர்மார்களைக்குறித்து மோசமாக தாக்கி எழுதுவதை நீங்கள் நிறுத்தவேண்டும். இனி அப்படி செய்யமாட்டேன் என்று உறுதி கூறி பதில் கடிதம் எழுதும்படி எனக்கு மிரட்டல் கடிதம் வந்தது. இந்த கடிதத்துக்கு நான் எந்த பதிலும் அவர்களுக்கு எழுதவில்லை.

வேதத்தில் எசேக்கியா ராஜா செய்ததுபோல் அக்கடிதத்தை ஆண்டவர் பாதத்தில் வைத்துவிட்டு எப்போதும் போல என் ஊழியத்தை தொடர்ந்தேன்.

கிறிஸ்தவ ஊழியர்களால் மட்டும் எனக்கு ஆபத்தில்லை. கிறிஸ்தவ ஊழியத்தில் சம்பந்தமில்லாத என்னையும், என் ஊழியத்தையும் விளங்கிக்கொள்ளாத வெளிநாட்டில் வாழும் விடுதலை புலிகள் இயக்கம் மூலமாகவும் ஆபத்துக்கள் பல வருடமாக என்னை தொடருகிறது. என் மனசாட்சியில் நான் குற்றமற்றவன். இலங்கை அரசியலுக்கும் அந்த தேச இன பிரச்சனைகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் அனுதாபமும் அந்த நாட்டு மக்களைக்குறித்து பாரமும் எனக்கு உண்டு.

நான் ஒரு கிறிஸ்தவ ஊழியக்காரன். ஆண்டவர் எழுத தூண்டியதைத்தான் எழுதினேன். அதன் பலன் அல்லது அதன் பாதிப்பு எப்படிப்பட்டதானாலும் அதை எதிர்க்கொள்ளும் தைரியம், தெளிவு யாவையும் கர்த்தர் எனக்கு கொடுத்துள்ளார். சாவுக்கு பயப்படுபவன் மட்டுமே இப்படிப்பட்ட அச்சுறுத்தலுக்கும் பயப்படுவான்.


பிரதம மந்திரி - முதல் மந்திரி விசாரணை:

அலிகளை (அரவாணிகளை) ஆயர் ஆக்கப்போவதாக சென்னை CSI டையோசிஸ் பிஷப் Rt.Rev.Devasagayam அவர்கள் பத்திரிக்கைகளில் அறிவிப்பு கொடுத்தபோது உடனே அது தவறு இதற்கு CSI சபை முழுவதும் சேர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என்று எழுதினேன். அதன்பின் அலிகள் யார்? அரவாணிகள் யார்? வேதம் சொல்லும் அண்ணகர்கள் யார்? என்பதையெல்லாம் ஜாமக்காரனில் எழுதினேன். அலிகளும் மனந்திரும்பினால் நிச்சயம் இவர்களுக்கும் பரலோகம் உண்டு. இவர்களையும் கர்த்தர் நேசிக்கிறார் (ஏசா 56) இவர்களும் ஊழியம் செய்யலாம், ஆனால் அரவாணிகளுக்கு ஆயர் ஆகும் தகுதியில்லை என்பதை வேத ஆதாரத்துடன் எழுதினேன். இதை அனைத்து CSI டையோசிஸ்ஸிசும் தங்கள் எதிர்ப்பை கடிதம் மூலம் CSI சினாட்டுக்கு எழுதி தெரிவித்தார்கள்.

நான் ஜாமக்காரனில் அப்படி எழுதியதால் அரவாணிகள் சங்கம் என்னை எதிர்த்தது. அரவாணிகள் என் வீட்டை முற்றுகையிடபோவதாக அறிவித்தது. குமுதம் ரிப்போர்டர் என்ற பிரபல வார பத்திரிக்கையில் என் புகைப்படத்தோடு அலிகள் பற்றிய விவரம் வந்தது. டிவி சேனல்கள் என்னை பேட்டி காண விரும்பினார்கள். நான் அதை விரும்பவில்லை என்று அவர்களுக்கு அறிவித்தேன். இது எங்கள் கிறிஸ்தவ சபையைப்பற்றிய விஷயம். வெளி உலகத்தாருக்கு இதில் விவாதிக்க ஒன்றும் இல்லை என்றேன். நான் எழுதிய செய்தி இந்திய பிரதமர்வரை சென்றது. தமிழக முதன்மந்திரி அலுவலகம் மூலமாக என்னை விசாரிக்க போலீஸ் என் வீட்டுக்கு வந்தது. அப்போது நான் கோயமுத்தூர் கிறிஸ்துநாதர் ஆலயத்தில் பிரசங்கம் நிகழ்த்திக்கொண்டிருந்தேன். போலீஸ் என் வீட்டுக்கு வந்த விவரம் எனக்கு அறிவிக்கப்பட்டது. சேலத்தில் என் வீட்டுக்கு நான் வந்ததுசேர்ந்தவுடன் கமிஷனரை சந்தித்தேன். நான் எழுதியதின் நோக்கத்தை அவர்களுக்கு அறிவித்தபோது அவர்கள் ஓரளவு விளங்கிக்கொண்டார்கள். உங்களுக்கு பகல்நேர போலீஸ் பாதுகாப்பு வேண்டுமா? 24 மணி நேர பாதுகாப்பு வேண்டுமா? என்று விசாரணையில் என்னிடம் கேட்டார்கள். நான் கிறிஸ்தவ ஊழியன் ஆகவே எனக்கு என் இயேசுகிறிஸ்துவே பாதுகாப்பு ஆகவே எந்தவித போலீஸ் பாதுகாப்பும் வேண்டாம் என்றேன். உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லி எங்களுக்கு கட்டளை வந்துள்ளது. நீங்கள் வேண்டாம் என்றால் எழுத்தில் எழுதி கொடுங்கள். என்ன நேரிட்டாலும் நானே பொறுப்பு என்றும், எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்றும் எழுதி கொடுங்கள் என்றார்கள். அப்படியே நான் எழுதி கொடுத்துவிட்டு வந்தேன். ஜாமக்காரனில் உங்கள் ஊழிய விவரங்களை தேதி வாரியாக எங்கெங்கு கன்வென்ஷனில் பேசுகிறீர்கள் என்பதை இனி எழுதவேண்டாம். உங்களுக்கு ஊழியக்கார எதிரிகளும் ஏராளமாக இருப்பதால் நீங்கள் புறப்படும் தேதி, வரும் நாட்கள் ஆகியவைகளை ஜாமக்காரனில் குறிப்பிட்டால் அதை எதிரிகளுக்கு சாதகமாக அது அமைந்துவிடும் என்றார்கள்.

மாதாமாதம் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அடர்ந்த காடுகளில் உள்ள ஆதிவாசிகளிடம் நானும், மற்றவர்களும் ஊழியம் செய்ய போய்வருகிறோம். 48 வருட என் ஊழிய அனுபவத்தில் இதுவரை ஒரு பாம்போ, யானையோ, புலியோ எங்களை தாக்கியதில்லை. அப்படி மிருகங்களின் வாயை கட்டிய என் தெய்வம். இந்த மனித மிருகங்களிடமிருந்து என்னை காப்பாற்ற வல்லவராக இருக்கிறார். அப்படியே எதிரிகள் என்னை தாக்க என் கர்த்தர் அவர்களுக்கு அனுமதித்தால் அதையும் எதிர்க்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்றேன். என் ஆண்டவர் எனக்காக எதிரிகளின் சித்திரவதைக்கு தன்னையே ஒப்புக்கொடுத்தாரே? அவருக்காகவும் அவர் எனக்காக சிந்திய ரத்தத்துக்காகவும், அதற்கு நன்றியாக நான் இந்த என் ஊழியத்தில் எல்லாவித தாக்குதல்களையும் எதிர்க்கொள்ள அல்லது அனுபவிக்க என்னை நான் தயார்படுத்திக் கொண்டேன். என் கர்த்தர் பல வருடங்களுக்குமுன்பே என்னை இப்படிப்பட்ட தாக்குதலுக்கு ஆயத்தப்படுத்திவிட்டார். ஆகவே எதைக்குறித்தும் எனக்கு பயம் இல்லை.

ஒரு நாட்டுக்காக அல்லது ஒரு கொள்கைக்காக அல்லது அரசியல்வாதிகளின் தலைவனுக்காக தன் உயிரை துச்சமாக எண்ணி மனித வெடிகுண்டுகளாக மாறி தங்களையும் மாய்த்து எத்தனை அப்பாவி மக்கள் அரசியலுக்கு சம்பந்தமில்லாதவர்கள் ஆயிரக்கணக்கில் செத்துமடிய காரணமாகிறார்கள். இவைகளை பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் அன்றாட நிகழ்ச்சிகளாக செய்திதாளில் வாசிக்கிறோமே!. இப்படி ஒரு பிரயோஜமில்லாத காரணங்களுக்காகவெல்லாம் சிலர் தங்களை தாங்களே சாகடிக்க ஒப்புக்கொடுக்கும்போது ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை சரியான கிறிஸ்தவர்களாக மாற்றவும், வேதவசனப்படி ஜீவிக்கிறவர்களாக மாற்றவும், தவறான போதனை, தவறான உபதேசம் கூறும் ஊழியர்களையும், அப்பாவி கிறிஸ்தவர்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் ஊழியர்களையும் ஜாமக்காரன் மூலம் அடையாளம் காண்பித்து, இயேசுகிறிஸ்துவை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவே உண்மையான தெய்வம் என்று அறிவிப்பதால் இப்படிப்பட்ட ஊழியத்தில் நான் தாக்கப்பட்டால் அல்லது நான் கொல்லப்பட்டால் என் உபத்திரவத்தில், என் மரணத்தில் நிச்சயம் ஒரு இன்பம் நம்பிக்கை எனக்கு உண்டு. அது நிகழ்ந்தால் அதை எனக்கு கிடைத்த பெரும்பாக்கியமாக கருதுவேன். நாட்டுக்காக அடிப்பட்டு சாவதற்கும் - சுவிசேஷத்தினிமித்தம் அல்லது மக்களுக்கு ஆவிக்குரிய விழிப்புணர்வு உண்டாக்கியதினிமித்தம் ஏற்படும் மரணத்துக்கும் மிக பெரிய வித்தியாசம் உண்டு. நாட்டுக்காக சாவதில் மரணத்துக்குபின் ஒன்றும் இல்லை. ஆனால் மனந்திரும்புதலின் அனுபவத்தோடு கிறிஸ்துவின் நல்ல உபதேசத்தை அறிவிப்பதால் ஏற்படும் சாவில் நித்திய வாழ்வு உண்டு.

சபை உபதேசங்களைப்பற்றி கேள்விகள் எழும்பினபோது அதற்கு பதில் அளிக்கும் வகையில் யெகோவா சாட்சிகள் என்ற சபையின் உபதேசம் மிகவும் தவறானது, ஆபத்தானது என்று எழுதினேன்.

சனிக்கிழமையை மட்டும் பிரதானப்படுத்திய செவன்த் டே சபை உபதேசம் தவறானது என்பதையும் அறிவித்தேன்.

திரியோகம் தவறு என்று கூறும் இயேசுமட்டும் போதும் என்ற சபை ஊழியம் (பிரன்ஹாம் ஊழியம்), தவறானது என்றும் அறிவித்து விட்டேன்.

பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்கு அந்நியபாஷை அடையாளம் அல்ல என்பதையும், இப்போது சபையில் பேசும் அந்நியபாஷை போலியானது என்பதையும், அந்நியபாஷையை பேச சொல்லி தரும் அந்நியபாஷை பேச பயிற்சித்தரும் பாஸ்டர்மார்கள் ஆவியானவருக்கு விரோதமான பாவம் செய்பவர்கள் என்பதையும் அறிவித்து விட்டேன். அசம்பளிஸ் ஆப் காட், IPC, CPM சுதந்திர பெந்தேகோஸ்தே சபைகளில் நடந்த பல ஊழல்கள் யாவையும் ஆதாரத்துடன் அந்தந்த சபைகளில் உள்ள என் வாசகர்களுக்காக, அவர்கள் கேட்டுக்கொண்டபடியால் அவர்களே அளித்த தகவல்களை ஜாமக்காரனில் எழுதினேன். தங்கள் சபைக்குள் நடக்கும் ஊழல், ஏமாற்றுத்தனம் அந்தந்த பெந்தேகோஸ்தே சபை விசுவாசிகளுக்கே தெரியவில்லை. ஜாமக்காரன் மூலம் அறிந்து விழிப்புணர்வு பெற்றார்கள்.

எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவரை என்னனை நாள்தோறும் நெருக்குகிறது. 2 கொரி 11:28.


ஊழியர்களின் தவறு:

வரம் பெற்றதாக கூறிக்கொள்ளும் பல ஊழியர்களின் தவறுகளையும், கள்ள பாவதொடர்புகளையும் காணிக்கை விஷயத்தில் உண்மை இல்லாத ஊழியர்களையும், சபை மக்கள் இடும் காணிக்கைகளை திருடும் பிஷப்மார்களையும், சபை நிலங்களை இரகசியமாக விற்ற பிஷப்மார்களையும் அடையாளம் காட்டினேன்.

பிஷப் எலக்ஷனில் விபச்சாரிகளை அழைக்க பணம் பேரம் நடத்தும் மாமாக்களைப்போல CSI மாடரேட்டரிடம் கோடிகள் கொடுத்து பிஷப்மார்களை திருமண்டலத்தில் உள்ள சில பணக்காரர்கள் விலைக்கு வாங்கினார்கள். அப்படி விலைப்போன பிஷப்மார்கள் யார்? என்பதையும் அறிவித்தேன். பிஷப்மார் விலைக்கு வாங்கப்படுவது இப்போதும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதையும் அறிவித்தேன். இதில் சம்பந்தப்பட்ட யாருக்கும் வெட்கம் இல்லை. தேவ பயமும் இல்லை.

கர்த்தர் சொன்னார், கர்த்தர் காட்டினார், எயிட்ஸ் வியாதி, சர்க்கரை வியாதியை கர்த்தர் சுகமாக்குவதை நான் காண்கிறேன் என்று கூறிய வரம் பெற்ற ஊழியர்கள் என்று பெயர் பெற்ற பொய் ஊழியர்களின் வேஷத்தையும் கலைத்தேன், அவர்களை பகிரங்கப்படுத்தினேன்.

பரலோக பொய்: பிதாவை பார்த்தாக கூறியவர்களின் பொய், குறிப்பாக பரிசுத்த ஆவியானவரை நான் முகமுகமாக பார்த்து பேசினேன் என்ற புளுகர்களின் உச்சக்கட்ட பொய் தரிசனங்களையும் அப்படி கூறின ஊழியர்களையும் பகிரங்கமாக கிறிஸ்தவ உலகிற்கு ஜாமக்காரன் மூலம் அடையாளம் காட்டினேன். ஜாமக்காரன் பத்திரிக்கை மூலமாக நடத்திய இப்படிப்பட்ட என் ஊழியத்தில் எனக்கு பரம திருப்தி உண்டானது. ஆண்டவருக்கும் இதில் சந்தோஷமே!. எனக்கு இதுவரை கர்த்தரால் கொடுக்கப்பட்ட எல்லா ஊழியத்தையும் சரியாகவே நிறைவேற்றிவிட்டேன்.

பெரிய ஊழியர்களை கேள்விகேட்க கூடாது. பிஷப்மார்களை கேள்விகேட்க கூடாது. அப்படி கேட்டால் மிரியாமுக்கு வந்த குஷ்டரோகம் கேள்வி கேட்பவர்களை பிடித்துக்கொள்ளும் என்றும் பாஸ்டர் சாபம் இட்டுவிடுவார்கள் அல்லது ஊழியர்கள் சாபம் இட்டுவிடுவார்கள் என்ற பயம் பலருக்குள் இருந்தது. அது ஜாமக்காரனால் நீங்கியது.

நீதிமானும் எச்சரிக்கப்படவேண்டும் என்று வேதம் கூறுகிறது. அது பெரிய ஊழியனானாலும், பிஷப்பானாலும், ஆயரானாலும், பாஸ்டரானாலும் டாக்டர்.புஷ்பராஜானாலும் அவர்களும் மனிதர்கள்தான். தவறுகள் அவர்களுக்கும் உண்டாகும். அந்த தவறை யாரும் சுட்டிக்காட்டாமல்போனால், விவரம் அறிந்தும் கேள்வி கேட்காத உங்களுக்குத்தான் அது சாபமாக, தண்டனையாக வந்துசேரும் என்று வேத வசனம் கூறுகிறது.

நீதிமான் தவறு செய்யும்போது நீ அதை எச்சரிக்காமல்போனால் அவனும் அந்த பாவத்திலேயே செத்துப்போனால் அதை அறிந்தும் எச்சரிக்காத உன்பேரில் அந்த இரத்தப்பழி சுமரும் என்று கர்த்தர் உரைக்கிறார். எசே 3:17-21 வரை வாசித்துப்பாருங்கள்.

ஆனால் குற்றம் சொல்பவன் குறையை சுட்டிக்காட்டுபவன் யோக்கியம் உடையவனாக இருக்கவேண்டும். குற்றம் சொல்பவனிடம் அல்லது மற்றவர்களின் குறைகளை சுட்டிக்காட்டுபவர்களிடம் தவறுகள் இருந்தால் அப்படிப்பட்டவன் யாரைப்பற்றியும் குறை சொல்லவோ, தவறுகளை சுட்டிக்காட்டவோ தகுதி கிடையாது. அப்படி தகுதியில்லாமல் குறைகளை சுட்டிக்காட்டினால் .......குற்றம் சொல்பவனுக்கு குற்றத்தை சுட்டிக்காட்டுபவனுக்கும் கர்த்தரின் தண்டனை நிச்சயம் உண்டாகும்.

வாசகர்கள் வேதம் எப்படி வாசிக்கவேண்டும்!
வசனத்தை எப்படி தியானிக்க வேண்டும்!
கர்த்தர் வசனத்தின் மூலம் நம்மோடு பேசுவது எப்படி?
எது சரியான ஜெபம் ஆகிய எல்லாவற்றையும் என் வாசகர்களுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டேன். என் கடமை முடிந்தது.


என் ஊழிய முடிவு:

கர்த்தர் என்னிடம் ஒப்படைத்த ஜாமக்காரன் என்ற இந்த ஆபத்தான பத்திரிக்கை ஊழிய பணியின் திட்டம் Mission ஏறக்குறைய முடிவு பெற்றது. வேறுயாரும் செய்யமுடியாத இந்த ஊழியத்தின்மூலம் ஜாமக்காரன் வாசகர்களுக்கு இந்த பத்திரிக்கை மூலமாக எச்சரிப்பு - அறிவிப்பு என்ற பெயரில் அவர்களுக்காக நான் ஜாமக்காரனில் எழுதிய செய்திகளின் மூலமாக தேவனின் ஊழியதிட்டத்தை நிறைவேற்றி முடித்துவிட்டேன். என் ஊழிய எல்லை இவ்வளவுதான்!.

ஜாமக்காரன் பத்திரிக்கை ஊழியம் மூலமாக யாரையும் மனம் திரும்ப செய்ய நான் முயலவில்லை. யாரையும் யாரும் மாற்றவும் முடியாது என்பதும் எனக்கு தெரியும். ஆனால் அறிவிக்கும் பணியும் - எச்சரிக்கை செய்யும் பணியையும் செவ்வனே நடத்தி முடித்துவிட்டேன். ஜாமக்காரன் வாசகர்களின் கேள்விகள் மூலமாக சரியான உபதேசம் எது என்பதை ஜாமக்காரன் பத்திரிக்கை மூலமாக அறிவிக்கமுடிந்தது. சரியான ஊழியர் யார் என்பதையும் அறிவிக்கமுடிந்தது. அது எனக்கு மிகமிக திருப்தியாகவும் மனநிறைவாகவும் இருந்தது. கர்த்தருக்கே மகிமை உண்டவதாக. இப்படி பல முக்கிய காரியங்களை ஜாமக்காரன் வாசகர்களுக்கு அறிவித்ததின்மூலம் தேவ திட்டத்தை நிறைவேற்றின திருப்தி எனக்குண்டு. மேலும் ஜாமக்காரனில் நான் எழுதிய விவரங்களை முழு உலக மக்களுக்கும் இந்த சத்தியங்களை அறியவேண்டி இன்டர்நெட் (Internet) மூலம் ஜாமக்காரன் செய்திகளை அப்படியே வெளியிட்டு அறிவித்தேன். ஆக இதன்மூலமும் ஜாமக்காரனை கர்த்தர் என்னிடம் ஒப்படைத்த அந்ததிட்டம் Mission முடிவுபெற்றது. "அறிவிக்கவேண்டியது ஒன்றையும் நான் மறைக்கவில்லை" என்று பவுல் அறிவித்ததுபோல என் வாசகர்களுக்கும் நான் ஒன்றையும் மறைக்கவில்லை. இப்படி எழுதுவதால் ஜாமக்காரன் பத்திரிக்கை வெளியிடுவதை நான் நிறுத்தபோவதில்லை நான் எழுதுவதும் நின்றுபோகாது. அதையும் இப்போதே தெளிவுபடுத்துகிறேன். ஜாமக்காரனை கர்த்தர் வெளியிட்டதின் நோக்கமும் திட்டமும் முடிந்தது. ஆனால் என் ஊழியம் இன்னும் முடியவில்லை. என் ஆயுள் உள்ளவரை என் ஊழியமும், ஜாமக்காரனின் பணியும் தொடரும்.

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டல்லவா, அந்த முடிவை நானும் நெருங்கிக்கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் அறிவிக்கிறேன். இன்னும் எத்தனை நாள், எத்தனை வாரம்?, எத்தனை மாதம்?, எத்தனை வருடம்? இந்த ஊழியம் நீடிக்கும் என்பது கர்த்தரின் கையில்தான் இருக்கிறது.

என்னிடம் கொடுக்கப்பட்ட என் தனிப்பட்ட என் ஊழிய பொறுப்பு, ஜாமக்காரன் பத்திரிக்கை ஊழிய பொறுப்பு, மிஷனரி ஊழியம் ஆகியவைகளை கர்த்தர் எனக்கு கொடுக்கப்பட்ட அளவு குற்றமற்ற மனசாட்சியுடன் நிறைவேற்றிமுடித்துவிட்டேன். எஞ்சியுள்ள காலங்களில் கர்த்தர் என்னை எப்படி நடத்துகிறாரோ அப்படியே செயல்படுவேன். எந்த கிறிஸ்தவ ஊழியர்களுக்கும் எப்போதுமே ரிட்டயர்மென்ட் என்பது கிடையாது.


மன்னிப்பு கேட்க ஒன்றுமில்லை.

என் ஜாமக்காரன் பத்திரிக்கை மூலமாக நான் எழுதிய பலவிதமான பதிலால், கட்டுரைகளால் பாதிக்கப்பட்ட, அவமானப்பட்ட ஊழியர்களிடம் அல்லது சபைகளிடம் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். காரணம் நான் என் மனசாட்சிக்கு விரோதமாகவோ, என் தேவன் விரும்பாத எதுவும் நான் செய்யவில்லை. என்னை இயக்கினவர் கர்த்தர் - நான் வெறும் கருவி மட்டுமே.


நன்றி சொல்ல நிறைய விஷயம் உண்டு:

ஆண்டவர் எனக்கு செய்த என் ஊழியத்தின்மூலம் செய்த எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி ஒவ்வொன்றாய் இப்போது அறிவித்து நன்றி கூற என்னால் இயலாது. ஆனால் இத்தனை பேர் என்னை வெறுத்தும், இத்தனை பிஷப்மார்கள் என்னை வெறுத்தும், என்னை தங்கள் சபையில் அழைத்து தொடர்ந்து என்னை உபயோகித்துக்கொண்டிருக்கும் ஆயர்கள், பிஷப்மார்கள், சபைக்கமிட்டி பொறுப்பாளர்கள் யாவருக்கும் நன்றி கூறுகிறேன்.

நான் எழுதிய என் கருத்து உங்களில் பலருக்கு ஒத்துப்போகாமல் இருந்தும், மாதம் தவறாமல் என் ஊழியத்தை காணிக்கைகளாலும், ஜெபத்தாலும் தாங்கின, தாங்கிக்கொண்டிருக்கிற தனி விசுவாசிக்கும், விசுவாச குடும்பங்களுக்கும், சபைகளுக்கும், ஜெபகுழுக்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

நீங்கள் எப்படி எனக்காக தொடர்ந்து ஜெபிக்கிறீர்களோ அப்பபடியே உங்கள் யாவருக்காகவும் நானும் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டும் தனிதனியாக பெயர்களை சொல்லி ஜெபிக்கிறேன். வாசகர்களுக்காக மட்டுமே நான் தினசரி என் தனி ஜெபத்தில் பொதுவாக (பெயர் குறிப்பிடாமல் அல்ல) ஜெபிக்கிறேன். நம் யாவரையும் இந்த ஊழியத்தில் இணைத்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் என் வாழ்த்துதல் கூறுகிறேன்.


என் மரணம்:

என் மரணம் என்ற தலைப்பில் அநேக ஆண்டுகளுக்குமுன் சிறு புத்தகம் வெளியிட்டேன். ஜாமக்காரனிலும் அதை வெளியிட்டேன். 1969ம் வருடம் முதல் வேதவசனத்தின்மூலம் உணர்த்தப்பட்டு என் மரணம் அல்லது இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை ஆகிய இரண்டையும் எதிர்க்கொள்ளும் ஆவலில் ஒவ்வொரு நிமிடமும் சகல ஆயத்தத்துடன் வாழ தொடங்கிவிட்டேன். அதை என்வீட்டாருக்கும் என் பிள்ளைகளுக்கு ம் அறிவித்துவிட்டேன். என் மரணம் என்ற சிறு புத்தம் உங்களுக்கு தேவையானால் எனக்கு எழுதினால் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.


ஜாமக்காரன் பணி முடிந்தது:

ஜாமக்காரன் பணி முடிந்தது என்று இப்படி நான் எழுத காரணம்: ஒவ்வொரு சிஎஸ்ஐ பெந்தகோஸ்தே சபையிலும் LAITY சங்கங்கள் என்ற அமைப்பை ஏற்பாடு செய்து அதோடு CSI சொத்து பாதுகாப்பு சங்கம், CSI பொதுநல சங்கம் என்று அந்தந்த CSI சபைக்குள்ளேயே குற்றம் சாட்டப்படாதவர்கள் எல்லாம் Laity என்ற பெயரில் ஒரு அமைப்பை உண்டாக்கி சபை தவறுகளை சபை மக்களுக்கு சுட்டிக்காட்டி அறிவிக்க தொடங்கிவிட்டன. அதன் காரணமாக தவறு செய்யும் ஆட்களை, சபை பணத்தை கொள்ளையடிக்கும் அல்லது சபைநிலங்களை சபைக்கு தெரியாமல் சபையில் ஒரு சிலரை மட்டும் தங்கள் கைக்குள்போட்டு கொண்டு அந்த நிலங்களை விற்று கொள்ளையடிக்கும் நபர்களுக்கு அல்லது சபை பிஷப்மார்களுக்கு இப்போது இவர்கள் செயலால் பயம் உண்டாக ஆரம்பித்திருக்கிறது.

பெந்தேகோஸ்தே சபையிலும் சிலர் எழும்பி பாஸ்டர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர். சிலர் துண்டுபிரதிகள் மூலம் பிரச்சனைகளை சபை மக்களுக்கு அறிவிக்க ஆரம்பித்துவிட்டனர். ஜாமக்காரன் வாசகர்கள் இவர்களுக்கு ஆலோசனை கூறி தங்கள் சபையை தங்களால் இயன்றவரை காப்பாற்ற முயல ஆரம்பித்துவிட்டனர். கிறிஸ்தவ டிவியில் நடக்கும் தவறுகளை அதை நடத்துப்பவர்களுக்கே தங்கள் முழுவிலாசத்துடன் தவறுகளை சுட்டிக்காட்டி எழுதி அறிவிக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் இப்படிப்பட்ட அமைப்புகள் தொடங்கிவிட்டனர். பெந்தேகோஸ்தே சபைகள் சார்பாக பாஸ்டர்களின் தவறுகளை சபைகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டவும் ஒரு பெந்தேகோஸ்தே பாஸ்டரே ஜாமக்காரன் போன்ற பத்திரிக்கையை தொடங்கி அதுவும் வெற்றிகரமாக நடந்துக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட விழிப்புணர்வுக்காகத்தான் முதல் முயற்சியாக ஜாமக்காரனை கர்த்தர் என்னைக்கொண்டு ஆரம்பித்தார் என்றால் அது மிகையாகாது.

கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இப்போது ஆங்காங்கு விழிப்புணர்வு சங்கங்கள் மூலம் சபை மக்கள் எழும்பி கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். முன்பு கேள்வி கேட்க யாரும் இல்லாததால் தட்டிகேட்கும் துணிவு இல்லாததால்தான் பெரும்பாலான சபைகளில் இப்படிப்பட்ட ஊழல்கள் பெருகின. இனி அப்படி நடக்காது. என்று நம்பி என் ஜாமக்காரன் பணியை முடிக்க முயலுகிறேன். ஜாமக்காரனில் இனி என் பணி கொஞ்சம் வித்தியாசப்படலாம் என்று நினைக்கிறேன்.


இதுவரை ஜாமக்காரனில்

பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு (வாசகர்களுக்கு) மறைத்துவைக்காமல்.... உங்களுக்கு பிரசங்கித்து(ம்) - எழுதியும் .... உபதேசமும் பண்ணினேன். அப் 20:20.

நான் ஆத்துமாக்களுக்காகச் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் விரும்புகிறேன். 2 கொரி 12:15.

நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?. கலா 4:16.

கடைசியாக (நான் வசனத்தோடு இணைந்து) சொல்ல விரும்புவது

அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும் அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும் பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

அவனவன் கிரியைகளின்படி அவனவனுக்கு நான் (இயேசுகிறிஸ்து) அளிக்கும் பலன் என்னோடே (இயேசுகிறிஸ்து) கூட வருகிறது. வெளி 22:11,12

இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார்.


கடைசி எச்சரிக்கை:

இந்தியாவில் தமிழ்நாட்டில் நான் வசிக்கும் சேலம் மாநகரில் அமைந்த சுற்றுலா வாசஸ்தலமாகிய ஏற்காடு என்ற மலையில் பிரயாணம் செய்தால் சாலையில் ஏறக்குறைய 42 கொண்டை ஊசி வளைவுகள் உண்டு. மலை அடிவாரத்திலிருந்து வளைவில் முந்தாதே, வேகம் உயிரை பறிக்கும், மதுபானம் குடித்த நிலையில் வாகனம் ஓட்டாதே, இப்படி இன்னும் பல எச்சரிப்பு அறிவிப்பு பலகைகளை வழி நெடுகிலும் காணலாம். மலையில் ஏறும் கடைசி பகுதியில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகைதான் நீங்கள் கீழே காண்பது.

என் ஊழியத்தைப்பற்றி கூறும்போது, கடந்த 49 வருடங்களாக என் ஊழியம் மூலமாகவும் ஜாமக்காரன் மூலமாகவும் நான் பல எச்சரிப்புகளை, ஆலோசனைகளை, ஆபத்துகளை, அறிவிப்புகளை எழுதி அறிவித்து முடித்துவிட்டேன்.

அதை உணர்த்தத்தான் முன்பக்கத்தில் வெளியிட்ட விளம்பர பலகை வெளியிட்டேன். அதில் எழுதியபடி போதுமான அளவு வாகன ஓட்டிகளை அரசாங்கம் பல அறிவிப்புகள் மூலம் எச்சரிக்கையாக அறிவித்துவிட்டு, இனி வாகன ஓட்டிகளாகிய நீங்கள் முட்டிகொண்டாலும் சரி, வேகமாக வாகனத்தை ஓட்டி கவிழ்த்து விபத்து ஏற்பட்டு மரித்தாலும் சரி என்பதைபோல் நானும் கூற வேண்டியதை கூறிமுடித்து விட்டேன். அறிவித்துவிட்டேன். போதுமான அளவு எச்சரித்தும்விட்டேன் அவ்வளவே!. இனி உங்கள் பிரியம். முன்பக்கத்தில் கண்ட இந்த அரசாங்க அறிவிப்பைபோலத்தான் நானும் அறிவித்தேன். கீழ்படியாததும், புரிந்துக்கொள்வதும் உங்கள் பிரியம். என் கடமை முடிந்தது.


கடைசியாக எச்சரிக்கிறேன்:

இப்போது பெரும்பாலும் பெந்தேகோஸ்தே சபைகளில் விசுவாசிகள் பேசும் பாஷைகள் அந்நியபாஷை அல்ல!.

பாஸ்டர்கள் பேசும் பாஷைகளும் அந்நியபாஷை அல்ல!.

தாங்கள் பேசும் தவறான பாஷைகளை சபை மக்களுக்கும் அதையே கற்றுக்கொடுக்கிறார்கள்.

அந்நியபாஷை பொய் என்றால் உங்கள் வாழ்க்கையில் எல்லா செயல்களும் பொய்யாகவே மாறும்.

தெளிவான வார்த்தைகளினால் கர்;த்தருடன் பேசுங்கள் என்று வேதம் போதிக்கிறது.


பாஸ்டர்களுக்கு எச்சரிக்கை:

உங்களுக்கு மனசாட்சி உண்டு. நீங்கள் பேசும் அந்நியபாஷை உண்மையானதல்ல என்று உங்களுக்கே தெரியும். தயவுசெய்து உங்கள் பாஷைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்.

ஆவியானவருக்கு விரோதமாக கூறுவது: இம்மையும், மறுமையும் மன்னிக்கப்படாது என்பதை மறந்துப்போகாதீர்கள்.

உங்களையும் ஏமாற்றி - உங்கள் சபை ஜனங்களையும் ஏமாற்றியதுபோதும்.

நான் ஆவியானவருக்கு விரோதியல்ல. நானும் ஒரு காலத்தில் அந்நியபாஷை பேசியவன்தான்.

ஏமாறாதீர்கள்!                                 ஏமாற்றாதீர்கள்!!


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM