எந்த ஊழியர் கூறுவதை கர்த்தர் சொன்னார் என்று ஏற்றுக்கொள்வது? திருநெல்வேலியில் ஒருவர் வீடு நிறைய வாக்குத்தத்த வசன அட்டைகள் தொங்குவதை கண்டேன். துணிக்கடையில் புடவையில் தொங்கவிட்டிருக்கும் விலை பட்டியலைப் போல் அந்த வசன அட்டைகள் காணப்பட்டது.
இதில் விளம்பரம் வேறு! ஒவ்வொரு வாக்குத்தத்த வசன அட்டைகளின் அடியில் அந்தந்த ஊழியர்களின் பெயர், விலாசம், கூடவே பேங்க் அக்கவுண்ட் நெம்பர், சிலவற்றில் சபைகளின் பெயர்கள் என்று அச்சடித்துள்ளனர். என்ன அக்கிரமம் இது! புதுவருடம்
முதல் தேதியில் இப்படிப்பட்ட பொய் ஊழியர்களிடம் அல்லது சபைகளிடம் மக்கள் அகப்பட்டு திணருகிறார்கள்.
வருடத்தின் ஆரம்பத்திலேயே கிறிஸ்தவ சபை மக்கள் வாக்குத்தத்த வசனங்களால் மிகவும் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த ஏமாற்றம் வருடம் முழுவதும் அவர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். பிறகு பிள்ளைகள் வளர்ந்தால் சந்ததி சந்ததியாய் தொடர் ஏமாற்றங்கள் இந்த கள்ள ஊழியர்கள் மூலம் ஏற்படுகிறது.
இந்த ஊழியர்களுக்கு வருடத்தின் முதல் நாளே நல்ல காணிக்கை பணவேட்டையும் மலையாய் குவிகிறது. கொள்ளையோ? கொள்ளை!.
இதன் முடிவை இவர்கள் யாரும் அறியார்கள். வாக்குத்தத்த வசனத்தை அந்த வருடத்தின் வசனமாக
கர்த்தர் கொடுத்தார் என்று கூறும் ஊழியர்களும், பரலோகம் போகமாட்டார்கள். விடியவிடிய கண்விழித்து வாக்குத்தத்த வசனத்தை கேட்டவர்கள் அல்லது வசன அட்டையை வாங்கியவர்களும் பரலோகம் போகமாட்டார்கள். அந்த வாக்குத்தத்த வசன அட்டையானது யாரையும் பரலோகம் கூட்டி செல்லாது.
இதை ஆசிரியர் குறிப்பில் நான் எழுத காரணம் என் ஜாமக்காரன் வாசகர்களும் வாக்குத்தத்த வசனத்தை வருடந்தோறும் எதிர்ப்பார்த்து நம்புகிறார்களே என்பதை வேதனையோடு கூற வேண்டியது அவசியமாகிறது.
இந்த 2015ம் ஆண்டு புதிய வருடம் வாசகர்களின் சிந்தனைக்கு நான் ஜாமக்காரன் வாசகர்களுக்கு கூற பாரப்படுவதாவது என்னவென்றால்
உபாகமம் 11:12ல் கர்த்தர் இஸ்ரேல் மக்களுக்கு கூறியதை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். வருடத்தின் துவக்க முதல் வருடத்தின் முடிவு மட்டும் எப்போது உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் (உங்கள்மேல்) வைக்கப்பட்டிருக்கும் என்பதே. இது நான் கூறும் இந்த வருட வாக்குத்தத்த வசனமல்ல, இது தீர்க்கதரிசனமுமல்ல! அதுமட்டுமல்ல எல்லாரும் கூறுவதுபோல் கர்த்தர் சொல்ல சொன்ன வசனம் என்றும் கூறி நானும் அவர்களைப்போல
பொய்க்காரன் ஆக விரும்பவில்லை. நீங்கள் வேதத்தில் உள்ள எல்லா வசனத்தையும் வாசித்து தியானிப்பதுபோல் இதையும் நீங்கள் தியானிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன். குறிப்பிட்ட இந்த வசனம் இந்த வருடம்
முதல் தேதிக்குமட்டும் உரியது அல்ல. வாழ்நாள் முழுவதும் நீங்கள் தியானித்து அதன்படி வாழ்வதற்காக ஆவியானவர் எழுதிவைத்த வசனமாகும். இந்த வசனம் அடங்கிய 11ம் அதிகாரத்தின் முதல் வசனத்திலிருந்து வாசித்தால் அதில் எழுதப்பட்ட கர்த்தரின் (கண்டிஷன்) நிபந்தனைகளை கவனிக்கவேண்டும்.
|