இந்த 1979ம் புதிய ஆண்டு எல்லோருக்கும் தம்மை மட்டும் நோக்கிப் பார்த்து ஓடும் புண்ணியத்தை தயவாகத் தேவன் நமக்கு தருவாராக.
ஆகையால், மேகம் போன்ற இத்தனை திராளன சாட்சிகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்க,
பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற
பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைக் துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (எபி 12:1). இவ்விதம் ஓட விரும்பும் ஒவ்வொருவருக்கும் வேதத்தில் ஒரு அழகான வாக்குத் தத்தமும் உண்டு. அது ஏசாயா தீர்க்கரின் புத்தகம் 58:11ல் உள்ளது. அது
புதிய ஆண்டிற்கு உங்கள் பாதுகாப்பு வசனமாகட்டும்.
அதில் மூன்று வார்த்தைகள் முக்கியமானவைகள்.
முதலாவது வார்த்தை -
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்துவார். அதாவது தினந்தோறும் நடத்துவார். நாளைக்கு நடத்துவாரா?, அடுத்த மாதம் நடத்துவாரா? எனக் கலங்காதேயுங்கள். பொருளாதார வலிமை இல்லையே, போதிய சரீர சுகம் இல்லையே, நீங்கள் எதிர்பார்க்கும் அன்பு சமுதாயத்தில் கிடைக்கவில்லையே! எனக் கலங்காதேயுங்கள். நித்தமும் உங்களை நடத்தும் ஒருவர் உண்டு!. அது போதும்.
இரண்டாவது வார்த்தை -
மகா வறட்சியான காலத்திலும் என்பதாகும். அது என்ன? சுற்றி வாழ்பவர்கள் இயேசுவை நோக்கி வாழாததால் பலவித துன்பங்களில், பொருளாதார நெருக்கடிகளில், தவிப்புகளில் சிக்குவார்கள். ஆனால் இயேசுவை நோக்கி 79ல் பிரவேசிக்கும் நீங்களோ அவ்வித மகா வறட்சியான காலத்திலும் செழிப்பாக இருப்பீர்கள். எகிப்தின் பஞ்சத்தை யோசேப்பு ஒழித்தான் அல்லவா?
மூன்றாவது வார்த்தை -
வற்றாத ஜீவ ஊற்று என்பதாகும். புதிய வருடத்தில் உங்கள் ஆவிக்குரிய ஜீவியம் வற்றாத ஊற்றாக அமையும் என்னிடத்தில் விசுவாசமாக இருப்பவனின்
உள்ளத்திலிருந்து தண்ணீர் ஊற்று (Rivers of Living
Water) புறப்படும் என்று இயேசு கூறினார். பரிசுத்த ஆவியானவரால் நிரப்பட்டபவர்களாக ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வீர்கள். உங்களிடம் காணப்படும் அன்பு வெள்ளம், நன்மைக்குத் தீமை செய்வோரையும் மன்னிக்கும் தயாளம். எல்லா சபை, ஸ்தாபன ஊழியர்களையும் நேசிக்கும் மனத்திறன், அனைவரின் மூலம் இயேசுவின் நாமம் இந்தியாவில் பரவட்டும் என்ற பாரம், தாழ்மை, பூரண விட்டுகொடுப்பு, அந்தரங்க ஜெபம், அமைதி, மனத்தூய்மை, அஞ்சாமை ஆகியவைபெற நீங்கள்
ஆவியானவரால் நிரப்பப்படுகிறீர்கள். அது வற்றாத ஜீவ ஊற்றாக நீங்கள் மாறிவருகிறீர்கள் என்பதற்குச் சான்றாகும்.
ஸ்தோத்திரம் செய்வதே வற்றாத ஜீவ ஊற்றின் வாழ்வின் கீதமாகும். தேவன் உங்களை வழி நடத்தினால் இந்த செய்தியை 1979க்காக எழுதிக்கொண்டிருக்கும் இந்த டிசம்பர் 31ம் நானை மௌன நாளாக, நீங்கள் தேவனிடம் மட்டும் தங்கியிருக்கும் நாளாக நியமித்து, உங்களது 1978வது வருட வாழ்வை யோசித்துப்பாருங்கள். புதியவருடம் பொன்னான வருடமாக உங்களுக்கு அமைவதாக. உங்கள் அனைவரது முகம் எனக்குத் தெரியாவிடினும். உங்கள்
முகவரிகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் உங்களுக்காக ஜெபிக்கிறோம். இந்த இதழுடன் பத்திரிக்கை இரண்டு ஆண்டுகள் நிறைவு கண்டு, மூன்றாவது ஆண்டினைக் காண்கிறது. இது இயேசு இரட்சகரின் பெரும் கிருபை. தொடர்ந்து பத்திரிக்கைக்காக ஜெபியுங்கள். பலர் இதனைப்பெற்று ஆசீர்வாதம் பெற இதை அறிமுகம் செய்து வையுங்கள். நமது நாட்டு விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்வில் ஆழமாகச் செல்லவும், மிஷனரி பாரத்தில் தெளிவான ஈடுபாடுகொள்ளவும் இந்த பத்திரிக்கை புதிய ஆண்டினிலும் உங்களுக்கு உதவி செய்வதாக. |