ஆண்டவரே, உம் ஊழியர்கள் தங்கும் இடத்துக்கும்
கிராமவாசிகள் வசிக்கும் இடத்துக்கும் இடைவெளி மிகதூரம் ஏதாவது யானை போன்ற மிருகங்களோ, வேறு ஆபத்தோ உண்டானால் இவர்கள் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும் யார் காதிலும் விழாதே! இப்படிப்பட்ட சூழ்நிலையில் உம்பிள்ளைகளை நாங்கள் விட்டுப்போகிறோமே!.
இவர்களுக்கு இந்த காட்டுப்பகுதி முன்அனுபவம் இல்லாததால் உம்மை நம்பி இவர்களைவிட்டுபோகிறோம். நீரே இவர்களுக்கு அரணாயிருந்து காத்துக்கொள்ளுமப்பா!, என்று அழுது ஜெபித்தது எங்களை உலுக்கியது. ஆத்துமாக்களைப்பற்றிய பாரமும்,
அவர்களுக்கு இயேசுவை அறிவிக்கும் மிஷனரிகளின் நலன்களில் அக்கறை
காட்டுபவரே மிஷனரி ஸ்தாபனத்தின் தலைவராகும் (பொது செயலராகும்) தகுதி உள்ளவராவார்.
எரேமியா சொன்னது நினைவுக்கு வந்தது. என்தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் எவ்வளவு நலமாயிருக்கும். எரே 9:1.
என் கண்களிலிருந்து இரவும்-பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். எரே 14:17.
ஏறக்குறைய சகோ.எமில் ஒரு எரேமியாவைப்போல எப்போது ஜெபித்தாலும் அழுகையுடனும் பாரத்துடனும்தான் ஜெபிப்பார். அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஜெபிக்கும் பழக்கத்தை அவர் கடைசி வரை நிறுத்தவில்லை என்று அறிந்து தேவனைத் துதிக்கிறேன்.
மிஷனரி ஊழியம் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே
FMPB-க்கு பணகஷ்டம் வந்தது. மிஷனரிகளுக்கு பணம் அனுப்ப இயலாத நிலை வந்தது. அந்த விவரங்களை ஏற்கனவே ஜாமக்காரனில் நான் எழுதியிருக்கிறேன். அதன் காரணமாக மிஷனரிகள் (நாங்கள்)
டேனிஷ்பேட்டை திரும்பும் நிலை வந்தது. மறுபடியும் விசுவாசிகள் காணிக்கையை
FMPB-க்கு அனுப்பி, ஒரு வருடத்துக்குரிய பணம் வந்து சேர்ந்தபின் மிஷனரி பணியை மறுபடியும் தொடருவோம் என்ற தீர்மானத்தில் மிஷனரி பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அந்த நிலை சில வாரங்களுக்குள் ஜெபக்குழுக்களின் கண்ணீருள்ள ஜெபத்தினால் மிக வேகமாக சரியாகிவிட்டது. மீண்டும் மிஷனரி பணி தொடங்கப்பட்டது. அதன் பிறகு சகோ.ஹாரிஸ் ஹில்டனுடன் வேறு ஒருவரையும் இணைத்து மிஷனரி ஊழியம் மறுபடியும் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால்
நான்மட்டும் என் குடும்ப சூழ்நிலை காரணமாக பெரியமலைக்கு செல்லாமல் மறுபடியும் டாக்டர் தொழிலை தொடங்கிவிட்டேன்.
இந்த சூழ்நிலையில்தான் ஒரு நாள் சகோ.எமிலை சந்திக்க
சாயர்புரம் என்ற ஊருக்கு சென்றேன். அங்கு சகோ.எமில் அவர்களின் தகப்பனர்
Rev.நவமணி அவர்கள் ஆயராக இருந்தார். நான் ஆயருடன் பேசிக்கொண்டிருக்கும்போது
எமிலின் தகப்பனார் கூறினார். மகன் எமில் தற்காலிகமாக போப்ஸ் கல்லூரி லெக்சரராக பணியாற்றினாலும் இதுவரை எங்கள் வீட்டுக்கென்று தன் சம்பளத்திலிருந்து சிறு பகுதியையும் கொடுப்பதில்லை. நாங்களும் அவன் பணத்தை எதிர்ப்பார்க்கவில்லை. அவன் சம்பாதிக்கும் பணம் முழுவதையும்,
FMPB கிதியோன் முகாம் நடத்த நோட்டீஸ் அடிக்க,
பாட்டு புத்தகம் அச்சடிக்க இப்படித்தான் தன் வருமானம் முழுவதையும்
FMPB ஊழியத்துக்காகவே செலவிட்டார் என்று அவர் கூறியபோது என்ன ஒரு தியாகம்!. என்ன ஒரு
அர்பணிப்பு! என யோசித்தேன். இப்படி ஒரு மிஷனரி பாரம் உள்ள மனிதரை இதற்குமுன் தமிழ்நாட்டில் நான் கண்டதில்லை.
FMPB-யில் நிர்வாக கமிட்டியில் அன்று சில பழமைவாதிகள் இருந்தார்கள். மிஷனரி பணியை நவீனபாதையில் அன்றைய சூழ்நிலைக்கேற்ப கொண்டுபோக எமில் முயன்றபோது ஏராளமான தடைகளை உண்டாக்கினார்கள். அவரின்
மிஷனரி ஊழிய வேகத்தையும், அதற்கான புதிய திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் அவர்கள் தடையாய் நின்றார்கள். அவர்கள் யாரும் விசுவாசத்தில், மிஷனரி பாரத்தில் குறைந்தவர்கள் அல்ல. மேலும் அவர்கள் யாவரும் நல்ல ஜெபவீரர்கள்தான் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் அனைவருக்கும்
ஜெபம்! ஜெபம்! ஜெபம்! அதை தவிர அதற்குமேல் அடுத்த கட்டத்துக்குபோகும் எண்ணம் இல்லாமல் இருந்தார்கள். |