கொடைக்கானல் மெத்தடிஸ்ட் சென்டர் விவகாரம் உலகம் அனைத்து மெத்தடிஸ்ட் சபையில் உள்ளவர்களையும் யோசிக்கவைத்துள்ளது.
கொடைக்கானல் விவகாரம் குறித்து ஜாமக்காரனில் எழுதியுடன் பல இடங்களிலிருந்தும், பல சபைகளிலிருந்தும் மிகவும் வேதனையுடன் கடிதம் எழுதியுள்ளார்கள். கோர்ட் விவகாரங்களின் காப்பி எனக்கு அனுப்பியுள்ளார்கள். ஆனால் அவைகளை நான் வாசித்து ஒரு பிரயோஜனமில்லை. நான் ஜெபிக்கத்தான்முடியும். நான் ஆராதிக்கிற
CSI சபையிலும் மற்ற லூத்தரன் சபையிலும் இதே பிரச்சனைகளினால் சபை மக்கள் சந்தோஷம் இழந்து நிற்கிறார்கள்.
மிஷனரிகள் எத்தனை பாடுகள் அனுபவித்து, தங்கள் வசதிகளை பெருக்கிக்கொள்ளாமல் சபைக்காக, சபை மக்களுக்காக, சபை பிள்ளைகளின் பிற்கால வாழ்க்கைக்காக என்று நிலங்களை வாங்கிபோட்டு உதவினார்கள்.
ஆனால் சபையின் பொறுப்பில் வருகிறவர்கள், நிர்வாக கமிட்டியில் இருப்பவர்கள், பிஷப்மார்கள் அந்த நிலங்கள் பயன்படுத்தபடாமல் விட்டாலும் பரவாயில்லை. ஆனால் அதை நல்ல காரியத்துக்காகத்தான் விற்கிறோம் என்று சொல்லி
அடிமாட்டு விலைக்கு விற்றதாக பத்திரத்தில் கணக்கு காட்டி நிலம் வாங்கியவர்கள் சபை பொறுப்பாளர்களுக்கு கமிஷனாக கொடுக்கும் தொகை கோடிக்கணக்கில் புரளுகிறது. வெளி பார்வையில் கமிஷன் வைத்து கணக்கு பார்த்தால் கணக்குப்படி சரியாகத்தான் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நிலம் வாங்கியவர் கொடுத்த கோடிகளுக்கு எத்தனை பேர்களுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டது தெரியுமா?.
கொடைக்கானலில் மெத்தடிஸ்ட் சபைக்கு ஒரு நிரந்தர வருமானத்துக்காக அந்த கட்டிடம் கட்டப்பட்டது என்று ஆம்பூர் ஊரிலிருந்து மட்டும் இரண்டுபேர்கள் கூறிவிட்டனர். அந்த
கட்டிடம் ஆலயம் அல்ல என்பது உண்மையாகவே இருக்கட்டும். இந்த காலத்தில் நிலம் வாங்குவது அத்தனை எளிதல்ல. ஆனால் வாங்கப்பட்ட நிலத்தில் கட்டிடம் கட்டி வாடகைக்குவிட்டார்கள். நிரந்தர வருமானம்தான். ஆனால் பக்கத்தில் அவ்வளவு
பெரிய நிலத்தை காம்பளக்ஸ் கட்ட விற்றுபோட்டார்களே? அந்த
டூரிஸ்ட் சென்டரில் அந்த ஊரின் மையப்பகுதியில் இப்போதைய விலையில் ஒரு சென்ட் நிலம் வாங்க எத்தனை கோடிகள் கொடுக்கவேண்டும். அப்படியிருக்க எப்படி
மெத்தடிஸ்ட் டிரஸ்ட் அவ்வளவு மதிப்புமிக்க இடத்தை விற்றது?. நிரந்தர வருமானத்துக்கு
டூரிஸ்ட் காட்டேஜ் அல்லது ஒரு ஆடம்பர ஓட்டலுக்கு வாடகைக்கு கொடுத்திருந்தால் நிரந்தர வருமானம் வருமே? அந்த இடத்தில் மெத்தடிஸ்ட் வேதாகம கல்லூரி பணிந்திருக்கலாம்.
நம் தமிழ்நாட்டில் (SBM) Strict Baptism
Mission என்ற நல்ல சபை உண்டு. அதன் மிஷனரிகள் மிக அருமையாக ஊழியம் செய்து ஆலயம் கட்டினார்கள், பள்ளிக்கூடம் கட்டினார்கள். ஆனால் மிஷனரிகளை சபைமக்களே நாட்டைவிட்டு வெளியேற்றும் ஏற்பாட்டை செய்து அனுப்பிவிட்டனர். இப்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆலயம் காம்பவுண்ட் சுற்றியுள்ள இடங்களில் கடைகளை கட்டி வாடகை விட்டு நிரந்தரவருமான உண்டாக்க நினைத்தார்கள். ஆலயம் இருக்கும் இடமே தெரியாத அளவு கடைகள் மறைத்து நின்றன. காம்பவுண்டில் பிராந்தி கடைகளும் திறக்கப்பட்டன. சில கடைகளை காலி செய்யமுடியாமல் கோர்ட் வரை போயிருக்கிறார்கள். |