கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர, சகோதரிகளே,
உங்கள் ஒவ்வொருவரின் ஜெபத்திற்காகவும், உங்களுடன் அவருக்குள்ளான ஐக்கியத்திற்காகவும் தேவனைத் துதிக்கிறோம்.
வாழ்க்கை என்பது ஒரு
யாத்திரை. ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட மைல் கற்களை நடந்தே தீரவேண்டும். சிலர் பத்து, பதினைந்து வருடங்கள், பலர் அறுபது அல்லது எண்பது வருடங்கள் என வாழ்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஒரு மைல் கல். 1979ம் ஆண்டு என்பது ஒரு புதிய மைல் கல். இந்த புதிய மைல் கல்லினை சுலபமாகக் கடக்க இயலுமா? பாதை குன்றும் குழியுமாக இருக்குமா? அல்லது ஒரே சீராக இருக்குமா? என்று பல எண்ணங்கள் எழும்பலாம். கவலை சற்றும் வேண்டாம்.
உங்கள் கண்கள் இயேசுவை நோக்கி நிற்கட்டும். கால்கள்
நடக்கட்டும். கரங்கள் செயலாற்றட்டும் உங்கள் தனிப்பட்டப் பொறுப்புகள், குடும்ப பொறுப்புகள், உத்தியோகம் செய்யும் இடத்தின் பொறுப்புகள், ஊழியப் பொறுப்புகள் மற்றும் அனைத்தும் இயங்கட்டும். ஆனால்
கண்கள் மட்டும் அவரையே நோக்கி நிற்கட்டும். அவரை நோக்கிப் பார்த்தவர்கள்
முகம் பிரகாசம் அடைந்தது. கிறிஸ்துவின் முகத்தின் பிரகாசம்
நம் கால்கள் சீராகச்செல்ல, பாதைக்கும் பிரகாசம் தருவதுமாகும். இவ்விதம் இந்த
புதிய வருடத்தில் நீங்கள் இயேசுவைமட்டும் நோக்கிப் பார்ப்பீர்களா?. மனிதனையோ, சபையையோ, சபைத் தலைவனையோ, ஸ்தாபனத்தையோ, ஸ்தாபனப் பணியாளர்களையோ அல்லது
சுயபக்தியையோ, சுயமுயற்சிகளையோ நோக்கும் விசுவாசிகள் மிக கலக்கத்துடனும், பாதுகாப்பு உணர்ச்சி இழந்த நிலையிலும், தங்கள் எதிர் காலத்தைக்குறித்து கவலைப்பட்டு அதிகம் வேதனையுடனும் வாழ்வதைக் காண்கிறோம். |