ஆகவே இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளுக்குள்ளே ஆவியானவர் நிரந்தரமாக என்றென்றும் வசிப்பார். அப்படிப்பட்டவர்கள்
ஒருநாளும் ஆவியானவரே இப்ப வாரும், இறங்கி வாரும் என்று பாடமாட்டார்கள். மனந்திரும்பாதவர்கூட அப்படிபாடக்கூடாது. காரணம் ஆவியானவர் கிறிஸ்து சொல்வதைபோல்தான் கேட்பார். அதனால்தான் கீழ்படிபவர்களுக்கு அருளும் ஆவியானவர். யார் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிகிறார்களோ அவர்களுக்கு அருளப்படும் ஆவியானவர். ஆவியானவரை நமக்குள் அனுப்ப இயேசுகிறிஸ்துவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
ஆவியானவரை நோக்கி நேரிடையாக ஜெபித்த நபர்களை நீங்கள் யாராவது வேதத்தில் கண்டிருக்கிறீர்களா? சீஷர்கள் ஆவியானவரை அழைத்திருக்கிறார்களா? ஆகவே வேதத்தில் இல்லாத உபதேசத்தை கூறும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்களை நம்பாதீர்கள். சில சபைகளில் சபை தொடங்கும்போது எல்லாரும் ஆவியானவரை கைதட்டி வரவேற்போம் என்று எத்தனை முட்டாள்தனமாக ஜனங்களை நம்பவைக்கிறார்கள். யாரோ மந்திரி சபைக்குள்ளே நுழைந்ததைப்போல் கைதட்டி ஆவியானவரை வரவேற்போம் என்பது வேத ஞானம் இல்லாதவர்களின்
செயலாகும். ஆகவேதான் அந்த பாட்டு ஆவியானவரே எங்கள் ஆவியானவரே இப்போவரும் இறங்கிவாரும் எங்கள் மீதினிலே என்ற பாட்டின் வரிகள் சரியானது அல்ல.
அந்த பாட்டில் இறங்கிவாரும் எங்கள் உள்ளத்திலே என்ற வரியை யோசித்துப் பாருங்கள். யாருடைய உள்ளத்தில் ஆவியானவர் இல்லையோ அவர்கள் பாடவேண்டிய பாட்டு. யார் இரட்சிக்கப்படவில்லையோ அவர்கள் உள்ளத்தில் ஆவியானவர் இல்லை என்பதால் இந்த பாட்டை பாடும் சபை பாஸ்டர் உள்ளத்தில், அந்த பாட்டை பாடும் சபை மக்கள் உள்ளத்தில் ஆக யாரிடத்திலும் இரட்சிப்பும் இல்லை. பரிசுத்த ஆவியானவரும் இல்லை என்பது சரி அல்லவா?.
இரட்சிக்கப்பட்டு, மனந்திரும்பின பாஸ்டர், சபை மக்கள் யாரும் இந்த பாடல் வரிகளை பாடமாட்டார்கள்.
நான் கருத்தோடும் பாடுவேன், ஆவியோடும் பாடுவேன் என்ற பவுலைப்போல வாழுவோம். விசுவாசிகள் இராகத்துக்காக எந்த பாட்டையும் பாடாதீர்கள். பாட்டின் வரிகளை வாசித்து அது சரியான அர்த்தம் உள்ளதா என்று அறிந்து உணர்ந்து பாடுங்கள். |