உங்கள் மிஷனரி ஸ்தாபனம் ஓரளவு பரவாயில்லை. இந்த வருடம் FMPB ஸ்தாபனத்தில் 10 கோடி ஆத்துமாக்களை சேர்க்கவேண்டும் என்று பொதுசெயலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்திய ஜனத்தொகையை அப்படியே கொத்தாக கூண்டோடு பிடித்து கொண்டுவந்து ஞானஸ்நானம் கொடுத்தால்தான் இந்த கணக்கு நேராகும். இப்படி கட்டாயப்படுத்தி கூட்டி வருபவர்களை ஆத்துமாக்கள் என்று கூறமுடியாது. ஆட்கள் என்றுதான் கூறமுடியும்.

அந்தக்காலத்தில் ஆட்களுக்கு கோதுமை, பால்பவுடர், பணம் கொடுத்து ஆட்களை கிறிஸ்தவர்களாக்க முயற்சித்ததை அப்போதிருந்த முந்திய கிறிஸ்தவ தலைமுறையினர் அறிவார்கள். அப்படி கோதுமைக்கும், பால்பவுடருக்கும் ஆசைப்பட்டு வந்து ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்ந்தவர்கள் கோதுமை தீர்ந்தவுடன் வந்த வேகத்திலேயே திரும்பிபோய்விட்டனர். அந்த செயலை பலர் கண்டித்தனர். அவைகள் பத்திரிக்கையிலும் வெளியிடப்பட்டு அது கிறிஸ்தவ சமுதாயத்துக்கே பெரிய தலைக்குனிவாக அமைந்தது. அதன்பின் ஓரளவு பால்பவுடர் கிறிஸ்தவ ஊழியம் நின்றுபோனது.

அதன்பிறகுதான் FMPB, IEM போன்ற உண்மையான மிஷனரி ஸ்தாபனங்கள் எழும்பின!. ஜெபத்தின் அடிப்படையில், மிஷனரிபாரம் தரிசனம் உள்ளவர்கள்மட்டும் மிஷனரிகளாக எழும்பினார்கள். தாங்கள் வாங்கிக்கொண்டிருந்த பெரிய சம்பளத்தை, பதவியை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. சிலர் அரசாங்க வேலையைகூட துச்சமாக எண்ணி அதை உதறித்தள்ளி, தங்களை வெறுமையாக்கி மிஷனரி ஊழியத்தில் இறங்கினார்கள். ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நரம்பு வியாதி நிபுணரான ஒரு டாக்டருக்கு வாரத்தில் ஒரு நாளைக்கு வியாதியஸ்தர்களை பரிசோதித்து ஆலோசனை கூற Consultant பணமாக அந்த குறிப்பிட்ட டாக்டருக்கு ஒருமணி நேரத்துக்குமட்டும் அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தது. நரம்பு வியாதி நிபுணரான அவர் இதைப்போல் ஒரு மாதத்தில் கோடிகள் சம்பாதித்தவர் ஆவார். இந்த குறிப்பிட்ட சிறப்பு டாக்டர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பிய அனுபவம் பெற்றபின் கோடிகளை உதறித்தள்ளி வெறும் 17 ஆயிரம் ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு மிஷனரி டாக்டராக தன்னை அர்ப்பணித்து இன்றும் வடஇந்தியா கிராமங்களில் சிறப்பான ஊழியம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காடுகளிலும், கிராமங்களிலும், இலவச வைத்திய கேம்புகள் நடத்தி அதன்மூலம் இயேசுவை அறிவித்ததில் உண்மையான ஆத்துமாக்களை இயேசுவுக்காக சேர்த்தார்கள். ஆங்காங்கு சபைகள் எழும்பின. மாதத்தில் 3 நாட்கள் மட்டும் அருகேயுள்ள பெரிய டவுனில் உள்ள ஆஸ்பத்திரியில் நரம்பு சம்பந்தமான பணியாளருக்கு நோயாளிகளுக்கு மருந்து எழுதிக்கொடுத்து அங்குள்ள டாக்டர்களுக்கும் ஆலோசனை கொடுத்ததின்மூலம் அதில் கிடைக்கும் பணத்தில் இலவச வைத்தியம் செய்ய தேவையான மருந்து உபகரணங்களை வாங்கிக்கொள்வார். எத்தனை பெரிய தியாகம்.

ஆத்துமாக்கள் கிடைக்கவில்லையே என்று ஒவ்வொரு இரவும் ஆண்டவர் பாதத்தில் அழுது ஜெபிக்கும் மிஷனரிகள் இப்போது உண்டா? இப்போதும் மிஷனரிகள் அழுகிறார்கள்!. எதற்காக என்றால் மேல்அதிகாரிகள் Target திட்டப்பணியின் அளவு நிறைவேற்றவில்லையே!. ஞானஸ்நானத்துக்கு என் சார்பில் ஆட்களை மிஷனரி ஸ்தாபன ஆராதனையில் நிறுத்தாவிட்டால் மேல்அதிகாரிகளின் தயவு கிடைக்காதே! என்னை வேறே பணிதளத்துக்கு அனுப்பிவிடுவார்களோ! என்று தன் தலைமைக்கு பயந்து அழும் காலம்தான் இப்போது நடைபெறுகிறது. இது இப்படியே நீண்டுபோனால் குடும்ப கட்டுப்பாட்டுக்காக பணம்கொடுத்து ஆட்களை இழுத்து கொண்டு வருதைப்போல் மிஷனரிகள் ஞானஸ்நானத்துக்கு போலியான ஆட்களை கொண்டுவந்து நிறுத்துவார்கள்.

ஞானஸ்நானம் எடுத்த அந்த போலி கிறிஸ்தவர்களால் மிஷனரி ஸ்தாபனத்துக்கும், பணிதள சபைகளுக்கும் நிச்சயம் பிரச்சனைகள் உருவாகும். ஆங்காங்கு ஆரம்பிக்கப்பட்ட சபையைவிட்டு ஆத்துமாக்கள் அல்ல, மிஷனரிகள் ஓடிப்போகும் நிலைவரும். ஆத்துமாக்கள் இயேசுவை அறிய வேண்டும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM