ஜாமக்காரன் வெளியிடுவதின் நோக்கமே வாசகர்கள் அனைவரும் பெயர் கிறிஸ்தவர்களாக வாழாமல் உண்மையான சாட்சியுள்ள கிறிஸ்தவர்களாக வாழவேண்டும். ஜாமக்காரன் மூலம் உண்மை சத்தியத்தை அறியவேண்டும். வசனத்தின்படி ஜீவிக்கவேண்டும். மிக முக்கியமாக ஜாமக்காரன் மூலமாக இப்போதுள்ள பொய்யான அற்புத ஊழியர்களை இனம் கண்டு கொள்ளவேண்டும். சபைகள் ஊழலற்ற ஆவிக்குரிய சபைகளாக மாறவேண்டும். குறிப்பாக சபைகள் வசனத்தில் வளரவேண்டும் என்பதுதான் என் பாரம் ஆகும்.
ஜாமக்காரன் வாசகர்களை தீர்க்கதரிசிகளாகவும், அற்புதங்களை செய்பவர்களாகவும் மாற்ற நான் விரும்பவில்லை. சாட்சியுள்ளவர்களாக வாழவேண்டும். அந்த சாட்சி வீட்டிலும், வெளியிலும் காணப்படவேண்டும். உங்கள் சாட்சி மூலமாக மக்கள் இயேசுவை காணவேண்டும். வேதமும் அதைத்தான் போதிக்கிறது.
நானே தேவன் என்பதற்கு நீங்களே சாட்சிகள். ஏசா 42:8. இப்படி சாட்சியுள்ளவர்களாக வாழவேண்டுமானால் கிறிஸ்து ஒவ்வொருவரின் உள்ளத்திலும் வரவேண்டும். கிறிஸ்து உள்ளே வந்தால் கிறிஸ்து செய்த
அற்புதங்களும், அதிசயங்களும் உங்கள் மூலமாக நிச்சயமாக செயல்படும். கர்த்தரும் மகிமைப்படுவார். அதன்மூலம் அநேகர் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள்.
எனக்காக ஜெபித்தவர்களுக்கும், ஜெபித்துக்கொண்டிருக்கிறவர்களுக்கும், எனக்கு நல்ல ஆலோசனைகளை எழுதியவர்களுக்கும், என்னை தைரியப்படுத்தி எழுதியவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். அவர்களுக்காக தேவனைத் துதிக்கிறேன்.
ஆன்-லைனில் காணிக்கை அனுப்புகிறவர்களும், ஏற்கனவே காணிக்கை அனுப்பியவர்களும் தயவுசெய்து ஒவ்வொருமுறையும் உங்கள் விலாசம், தொலைபேசி நெம்பர் ஆகியவைகளை எனக்கு எழுதி அனுப்புங்கள். எந்த பேங்கில் எவ்வளவு அனுப்பினீர்கள் என்றும் எழுதுங்கள். ஏற்கனவே எனக்கு நீங்கள் எழுதியிருந்தாலும் ஒவ்வொருமுறையும் உங்கள் விலாசம் எழுதி எந்த பேங்க் என்பதையும் குறிப்பிட்டு உங்கள் தொலைபேசி எண்ணையும் எனக்கு எழுதி அனுப்பி உதவுங்கள். அவைகளை நான் தனியாக பிரித்து எழுதி ஆன்-லைன் மூலம் காணிக்கைகளுக்காக புதுக்கணக்கு வைக்கவேண்டியது அவசியமாகிறது. காணிக்கை ஆன்லைனில் அனுப்பியவுடன் போன் செய்து அறிவிக்கவும். அது எங்களுக்கு கணக்கில் வரவு வைக்க உதவியாக இருக்கும் அல்லது இமெயில் மூலமாக அனுப்பிய விவரத்தை அறிவித்தாலும் போதும். காணிக்கை அனுப்பிய யாவருக்கும் என் வாழ்த்துதல்களைக் கூறிக்கொள்கிறேன்.
உங்கள் அனைவரையும் ஜாமக்காரன்
மூலமாகவோ, நேரிலோ அல்லது கர்த்தரின் வருகையிலோ சந்திக்கும்வரை தேவகிருபையும், சமாதானமும் நம் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
|