கர்த்தருக்குள் அன்பானவர்களே,
இயேசுகிறிஸ்துவின் சமாதானம் உங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டாவதாக. இந்த ஜாமக்காரன் மூலமாக உங்களோடு பகிர்ந்துக்கொள்வதில் சந்தோஷம். கடந்த ஆகஸ்ட் 2014 ஜாமக்காரனில் கர்த்தர் என்னை தமது ஊழியத்தில் பயன்படுத்தி 50 வருடங்கள் கடந்து 51 வருடத்தில் பிரவேசிக்க அருள்புரிந்த விவரங்களை எழுதினேன். நான் மனந்திரும்பினது மிஷனரி பணிக்கு ஒப்புக்கொடுத்தது, முழுநேர ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்தபோது நடந்த சம்பவங்கள், ஜாமக்காரன் பத்திரிக்கை தொடங்கிய விவரம் ஆகியவைகளை வெகு சுருக்கமாக பகிர்ந்துக்கொண்டேன்.
அதை வாசித்த பலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சந்தோஷப்பட்டு எனக்கு வாழ்த்துதல் கூறினார்கள். சிலர் 30 வருடமாக ஜாமக்காரன் வாசித்து குடும்பமாக ஏராளமான நன்மைகளை அனுபவித்த நாங்கள் உங்களுக்கு பத்திரிக்கை செலவுக்கு ஒருநாளும் பணம் அனுப்பியதில்லை!. நீங்களும், பத்திரிக்கை மூலமாக ஒரு வார்த்தையும் உங்கள் பணத்தேவைகளைப்பற்றி பகிர்ந்துக்கொண்டதேயில்லை!. அதனால்தான் நாங்களும் உங்களுக்கு பணம் அனுப்பாமல் இருந்தோம். ஆனால் உங்கள் 50 வருட ஊழிய அனுபவங்களை வாசித்தபோது யார் யாருக்கோ காணிக்கை அனுப்பினோம்!. இப்படிப்பட்ட உண்மை ஊழியராகிய உங்களுக்கு பணம் அனுப்பாமல் போனோமே என்று உள்ளத்தில் குத்தப்பட்டு மிகவும் மனவேதனையடைந்தோம். எங்களை மன்னியுங்கள் என்று எழுதியபோது என் மனம் மிகவும் சங்கடப்பட்டது.
இப்படி ஏராளமானவர்கள் தொலைபேசி மூலமாக, இமெயில் மூலமாக 50 வருட ஊழிய நிறைவுக்காக வாழ்த்து கூறினார்கள். அவர்கள் அனைவருக்கு நன்றி கூறுகிறேன். ஏராளமானவர்கள் காணிக்கை அனுப்பி ஊக்கப்படுத்தினார்கள். அத்தனைபேர்களுக்கும் நன்றி கூறுகிறேன். |